பிரான்சு தலைநகர் பாரீஸில் கத்தியை கொண்டு தாக்குதல்: இங்கிலாந்து சுற்றுப்பயணி உட்பட 7 பேர் காயம்

பிரான்சு தலைநகர் பாரீஸில் கத்தியை கொண்டு மர்ம நபர் நடத்திய தாக்குதலில் இங்கிலாந்து சுற்றுப்பயணி உட்பட 7 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2018-09-10 00:58 GMT
பாரீஸ்,

பிரான்சு தலைநகர் பாரிசின் வடகிழக்கு பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி ஒன்றில், மர்ம நபர் ஒருவர் திடீரென கத்தி மற்றும் இரும்பு ஆயுதம் ஒன்றைக்கொண்டு அவ்வழியாக சென்றவர்கள் மீது தாக்கத்தொடங்கினர். அந்நாட்டுநேரப்படி இரவு 11 மணியளவில் இந்த தாக்குதல் நடைபெற்றதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த கத்தி தாக்குதலில் பிரிட்டன் நாட்டைச்சேர்ந்த இரண்டு சுற்றுலாப்பயணிகள் உட்பட 7 பேர் காயம் அடைந்தனர்.

 காயம் அடைந்தவர்களில் 4 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கத்தியால் தாக்குதல் நடத்திய நபர் பிடிபட்டுள்ளார். பிடிபட்ட நபர் ஆப்கானிஸ்தானைச்சேர்ந்தவர் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. பயங்கரவாத பின்னணி இருக்கும் என்று தற்போதைக்கு தெரியவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்கண்ட தாக்குதலை நேரில் பார்த்த தியேட்டர் பாதுகாவலர் கூறுகையில், கத்தியால் தாக்கிய நபர், அவ்வழியாக சென்றவர்களை துரத்தி தாக்குதல் நடத்திக்கொண்டு இருந்ததை நான் பார்த்தேன். கையில் ஒரு இரும்பு தடியை வைத்து துரத்தினார். பயந்து ஓடியவர்கள் மீதும் இரும்பு தடியை வீசினார். அதன்பிறகு கத்தியைக்கொண்டு தாக்கத் துவங்கினார்” என்றார். இந்த சம்பவம் தொடர்பாக, கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சந்தேக நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்