சேர்மன் பதவியில் இருந்து ஜாக் மா 2019-ல் விலகுவார்: அலிபாபா நிறுவனம் அறிவிப்பு
சேர்மன் பதவியில் இருந்து ஜாக் மா 2019-ல் பதவி விலகுவார் என்று அலிபாபா நிறுவனம் அறிவித்துள்ளது.
பெய்ஜிங்,
சீனாவில் அலிபாபா நிறுவனம் ஆன்லைன் வழியேயான இ-வர்த்தக சேவையில் புகழ் பெற்றது. இந்த நிறுவனம், நுகர்வோர் ஒருவரிடம் இருந்து மற்றொரு நுகர்வோர், வணிக நிறுவனத்திடம் இருந்து நுகர்வோர் மற்றும் வணிக நிறுவனம் மற்றொரு வணிக நிறுவனத்திடம் என பலவகையான விற்பனை சேவைகளை அளித்து வருகிறது.
அலிபாபா நிறுவனம் கடந்த 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் தலைவராக சீனாவை சேர்ந்த ஜாக் மா இருந்து வருகிறார். அதன் நிறுவனர்களில் ஒருவராகவும் உள்ள ஜாக் மா உள்ளார். சீனாவின் பணக்காரர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள அவரிடம் 3 ஆயிரத்து 66 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் சொத்துகள் உள்ளன என போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அலிபாபா சேர்மன் பதவியில் இருந்து ஜாக் மா வரும் 2019- செப்டம்பரில் விலகுவார் என்று அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. சுமூகமான பொறுப்பு மாற்றத்திற்காக இன்னும் 12 மாதங்கள் மா அப்பதவியில் நீடிப்பார் எனவும், டேனியல் ஷாங், அவரது பொறுப்பை ஏற்பார் என்றும் அலிபாபா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று தனது 54 வது பிறந்த தினத்தை கொண்டாடும் மா, அலிபாபா நிறுவனத்தை துவங்கும் முன் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார். தனது பதவி விலகலுக்கு பிறகு கல்வி பணிக்கு மீண்டும் ஜாக் மா திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.