ஆப்கானிஸ்தானில் 7 பேரை பலி கொண்ட தற்கொலை தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு
ஆப்கானிஸ்தானில் 7 பேரை பலி கொண்ட தற்கொலை தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
கெய்ரோ,
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில், சோவியத் அரசின் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடிய மறைந்த தலைவர் மசூத்தின் ஆண்டு தினத்தினை முன்னிட்டு பேரணி ஒன்று நடந்தது. அந்த பேரணியில் துப்பாக்கி ஏந்திய வீரர்களுடன் சென்ற பாதுகாப்பு வாகனம் அருகே மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த தீவிரவாதி வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளான்.
இதில் அருகில் இருந்த கட்டிடங்கள் குலுங்கின. கண்ணாடி ஜன்னல்கள் உடைந்தன. இந்த சம்பவத்தில் 7 பேர் பலியாகினர். 25 பேர் காயமடைந்தனர். இவர்களில் பெருமளவிலானோர் பொதுமக்கள் ஆவர். இதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆனால் அதற்கான சான்றுகள் எதனையும் அந்த அமைப்பு தெரிவிக்கவில்லை.
கடந்த புதன்கிழமை மல்யுத்த கிளப் ஒன்றின் மீது நடந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 2 பத்திரிகையாளர்கள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். 91 பேர் காயமடைந்தனர்.