பாரீஸ் தாக்குதல்: இங்கிலாந்து சுற்றுலா பயணிகள் உள்பட 7 பேருக்கு கத்திக்குத்து

பாரீஸ் நகரில் இங்கிலாந்து சுற்றுலா பயணிகள் 2 பேர் உள்பட 7 பேருக்கு சரமாரி கத்திக்குத்து விழுந்தது. தாக்குதலில் ஈடுபட்ட ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-09-10 23:30 GMT
பாரீஸ்,

பிரான்சு தலைநகர் பாரீசின் வட கிழக்கு பகுதியில் குவாய் டி லாய்ரே என்கிற இடம் உள்ளது. இது கேளிக்கை விடுதிகள், தியேட்டர்கள், விளையாட்டு மையங்கள் போன்றவை நிறைந்த பகுதி ஆகும். இதனால் இரவு நேரங்களில் இப்பகுதியில் மக்கள் கூட்டம் எப்போதும் அதிகம் காணப்படும்.

இந்த நிலையில் வழக்கம் போல் ஏராளமான மக்கள் தங்களின் பொழுதை கழிக்க நேற்று முன்தினம் இரவு அங்கு திரண்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு தியேட்டருக்கு வெளியே நின்று கொண்டிருந்த மர்ம நபர் ஒருவர் தன் கண்ணில் பட்டவர்களையெல்லாம் நீளமான கத்தியால் குத்தினார். மேலும் தான் வைத்திருந்த இரும்புக் கம்பியாலும் தாக்கினார்.

இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் தொற்றிக்கொண்டது. மக்கள் அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். ஆனாலும் அந்த நபரை 20-க்கும் மேற்பட்டோர் துணிச்சலாக விரட்டிச் சென்றனர். அவர்களையும் அந்த நபர் கத்தி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கினார். அப்போது ‘பெடான்கியூ’ விளையாட்டு மையத்தில் இருந்த சிலர் அங்கிருந்த எடைகுறைவான உலோக பந்துகளை எடுத்து தாக்குதல் நடத்திய நபர் மீது வீசி அவரை தடுக்க முயன்றனர். அந்த பந்துகள் அவருடைய தலையைத் தாக்கினாலும் கூட அந்த நபர் விடாமல் கண்மூடித்தனமான தாக்குதலை தொடர்ந்தார்.

இதில் இங்கிலாந்து சுற்றுலா பயணிகள் 2 பேர் உள்பட 7 பேர் பலத்த காயம் அடைந்தனர். பின்னர் தாக்குதல் நடத்திய நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதற்கிடையில் தாக்குதல் பற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் பாதுகாப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அந்த பகுதியை சுற்றிவளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

பின்னர் படுகாயம் அடைந்த அனைவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர். அவர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் இது ஒரு பயங்கரவாத தாக்குதல் போல் தெரியவில்லை என்று பாரீஸ் நகர போலீசார் கூறினர். எனினும் தாக்குதலில் ஈடுபட்டவர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் 23-ந்தேதி பாரீஸ் நகரில் வெளிநாட்டைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது தாய் மற்றும் சகோதரியை கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் அரங்கேறிய 20 நாட்களுக்குள் இந்த தாக்குதல் நடந்திருப்பது பாரீஸ் நகரவாசிகளை பெரும் பீதியில் ஆழ்த்தி உள்ளது.

மேலும் செய்திகள்