ஆப்கானிஸ்தானில் பயங்கரம்: தற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் பலியாயினர்.

Update: 2018-09-11 18:08 GMT
காபூல்,

ஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத்துக்கும், பாகிஸ்தான் பிரதான எல்லைக்கும் இடையே உள்ள நெடுஞ்சாலையில் உள்ளூர் கிளர்ச்சியாளர்களின் தளபதியை எதிர்த்து நேற்று போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு, அந்த தளபதிக்கு எதிராக கோ‌ஷங்களை முழங்கினர். அப்போது அங்கு உடலில் வெடிகுண்டுகளை கட்டி எடுத்து வந்த ஒருவர், கூட்டத்தில் ஊடுருவி குண்டுகளை வெடிக்கச்செய்தார். பலத்த சத்தத்துடன் குண்டுகள் வெடித்து சிதறின. இதில் அந்தப் பகுதியே குலுங்கியது.

போராட்டத்தில் கலந்துகொண்டு இருந்த எல்லோரும் பதற்றத்தில் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக நாலாபுறமும் ஓட்டம் எடுத்தனர். இருப்பினும் இந்த தாக்குதலில் சிக்கி 22 பேர் உயிரிழந்தனர். 23 பேர் படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக அங்கு பாதுகாப்பு படையினர் விரைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

மேலும் செய்திகள்