இங்கிலாந்து பிரதமர் தெரசா மே மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு

பிரெக்சிட் விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பிரதமர் தெரசா மே மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

Update: 2019-01-16 12:00 GMT
லண்டன்,

ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த 28 நாடுகள் இணைந்து ஐரோப்பிய யூனியன் அமைத்துள்ளது. அதில் கடந்த 1973-ம் ஆண்டு முதல் இங்கிலாந்தும் அங்கம் வகித்து வருகிறது. ஐரோப்பா முழுவதும் ஒரே நாடு என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் ஐரோப்பிய யூனியன் செயல்படுகிறது. அதில் இணைந்துள்ளதால் இங்கிலாந்து தனது தனித்தன்மையையும் இறையாண்மையையும் இழந்துவிட்டதாக ஒரு பிரிவினர் குற்றம்சாட்டினர்.

அதைத் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பான பிரெக்சிட் பொதுவாக்கெடுப்பு கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. அதில் பெரும்பாலான வாக்காளர்கள் பிரெக்சிட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எனவே பிரெக்சிட் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான நடவடிக்கையை மார்ச் 29-ந்தேதிக்குள் முடிவு செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு இங்கிலாந்து வெளியேறுவதற்கான விதிகள் மற்றும் நிபந்தனைகள் அடங்கிய பிரெக்சிட் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிராக 432 எம்.பி.க்களும், ஆதரவாக 202 உறுப்பினர்களும் வாக்களித்தனர். அதன் மூலம் பிரதமர் தெரசா மே தரப்பு தோல்வி அடைந்தது.

இந்த தோல்வி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தத்தை உருவாக்குவதில் தீவிரமாக செயல்பட்ட இங்கிலாந்து பிரதமர் தெரசா மேக்கு  இது மிக பெரிய வீழ்ச்சியாக கருதப்படுகிறது.

இங்கிலாந்தின்  ஆளும் அரசின் மிகப் பெரிய தோல்வி இதுவாகும். பிரதமர் தெரசா மேயின் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த 118 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த வாக்கெடுப்பில் அவருக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

தெரசா மே கொண்டு வந்த பிரெக்சிட் ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் தோல்வியடைந்த நிலையில், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தலைவர் ஜெர்மி கார்பைன் பிரதமர் தெரசா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய அவர், தெரசா மேயின் 2 ஆண்டு கால ஆட்சி தோல்வி அடைந்துவிட்டதால் அவர் மீது நம்பிக்கை இல்லை என்றார்.

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பாராளுமன்றத்தில் இன்று விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது. அதில் தீர்மானம் வெற்றி பெற்றால் அரசு கவிழும் ஆபத்து ஏற்படும், அல்லது பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படும்.

மேலும் செய்திகள்