அமெரிக்கா: கருக்கலைப்பு மருத்துவமனைகளுக்கு செல்வோரின் பாதுகாப்பிற்கு கூகுள் நிறுவனம் அதிரடி முடிவு!

இதன்மூலம், மக்கள் தாங்கள் சென்று வந்த இடங்களின் விவரங்கள் வேறு எவருக்கும் தெரியாமல் ரகசியமாக பாதுகாத்து கொள்ள முடியும்.

Update: 2022-07-02 03:44 GMT

வாஷிங்டன்,

பெண்களின் கருக்கலைப்பு தனிப்பட்ட சட்ட உரிமையை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக ரத்து செய்தது. இதன் மூலம் 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த கருக்கலைப்பு சட்ட உரிமை நீக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இந்நிலையில், வேறு மாநிலங்களுக்கோ சென்று கருக்கலைப்பு செய்ய விருப்பமுள்ள பெண் ஊழியர்களின் பயணச் செலவை அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களே ஏற்றுக்கொள்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வால்ட் டிஸ்னி கோ மற்றும் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான 'மெட்டா' உள்ளிட்ட பல அமெரிக்க நிறுவனங்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

கருக்கலைப்பு கிளினிக்குகளுக்குச் செல்லும் பயனர்களின் இருப்பிட வரலாற்றை நீக்குவதாக கூகுள் நிறுவனம் நேற்று அறிவிப்பை வெளியிட்டது. கருக்கலைப்பு கிளினிக்குகள், குடும்ப வன்முறை முகாம்கள் மற்றும் தனியுரிமை கோரப்படும் பிற இடங்களுக்குச் செல்லும்போது பயனர்களின் இருப்பிட வரலாற்றை நீக்குவதாக கூகுள் அறிவித்தது.

கருவுறுதல் மையங்கள், அடிமை மீள் மறுவாழ்வு சிகிச்சை வசதி மையங்கள் மற்றும் எடை இழப்பு கிளினிக்குகளுக்குச் செல்லும்போது பயனர்களின் இருப்பிட வரலாற்றை(லொகேஷன் தகவல்) அழித்துவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், மக்கள் தாங்கள் சென்று வந்த இடங்களின் விவரங்கள் வேறு எவருக்கும் தெரியாமல் ரகசியமாக பாதுகாத்து கொள்ள முடியும்.

இது குறித்து கூகுள் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் ஜென் ஃபிட்ஸ்பாட்ரிக் கூறுகையில், "இந்த இடங்களில் யாரேனும் ஒருவர் சென்றிருப்பதை எங்கள் அமைப்புகள் கண்டறிந்தால், அவர்கள் பார்வையிட்டவுடன், இருப்பிட வரலாற்றிலிருந்து இந்தப் பதிவுகளை நீக்கிவிடுவோம். இந்த மாற்றம் வரும் வாரங்களில் அமலுக்கு வரும்" என்றார்.

கருக்கலைப்பு சட்ட உரிமை நீக்கப்பட்டதை தொடர்ந்து, மே மாதம் ஜனநாயகக் கட்சியின் உயர்மட்ட குழு ஒன்று, கூகுள் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சைக்குக் கடிதம் அனுப்பி, ஸ்மார்ட்போன் இருப்பிடத் தரவைச் சேகரிப்பதை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டது. அதற்கு இணங்க கூகுள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்