9. நல்ல மேய்ப்பன்

இந்த உலகில் இயேசு பிரான் போதிக்க தொடங்கியது முதல் மக்களுக்கு நல்லுபதேசங்களையும், நல்ல கருத்துகளையும் எடுத்துரைத்தார்.

Update: 2017-04-25 00:15 GMT
நற்செய்தி சிந்தனை

- செம்பை சேவியர்

ந்த உலகில் இயேசு பிரான் போதிக்க தொடங்கியது முதல் மக்களுக்கு நல்லுபதேசங்களையும், நல்ல கருத்துகளையும் எடுத்துரைத்தார். அவ்விதம் போதித்த காலத்தில் அவர் கூறியதாவது:–

‘‘நல்ல ஆயன் நானே! நல்ல ஆயன் தன் ஆடுகளுக்காக உயிரைக் கொடுப்பான். கூலிக்கு மேய்ப்பவன் அவனுக்குச் சொந்தம் இல்லாததால், ‘ஓநாய்’ வருகிறபொழுது, ஆடுகளை விட்டு விட்டு ஓட்டம் பிடித்து விடுவான். ஏனென்றால் அவன் உண்மையான ஆயனும் இல்லை. ஆடுகள் அவனுக்குச் சொந்தமும் இல்லை’’.

‘‘நல்ல ஆயன் நானாக இருப்பதால் தந்தை என்னை அறிந்திருக்கிறார். நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல் நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன். என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக என் உயிரைக் கொடுக்கிறேன். இந்தக் கொட்டிலைச் சேராத வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. அவற்றையும் இணைத்து நான் நடத்திச் செல்ல வேண்டும். அவையும் என் குரலுக்குச் செவி கொடுக்கும். அப்போது ஒரே மந்தையும், ஒரே ஆயனும் என்ற நிலை ஏற்படும்’’.

‘‘தந்தை என் மீது அன்பு செய்கிறார். ஏனெனில் நான் உயி ரைக் கொடுக்கிறேன். அதை மீண்டும் பெற்றுக் கொள்ளவே கொடுக்கிறேன். என் உயிரை என்னிடம் இருந்து யாரும் பறித்துக் கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு. அதைப் பெற்றுக் கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. என் தந்தையின் கட்டளைப்படியே நான் இவற்றையெல்லாம் செய்கிறேன்’’.

இவ்வாறு இயேசு பிரான் கூறினார்.

இந்த உவமை வழியாக நாம் என்ன உணர்ந்து கொள்கிறோம் என்பதைப் பற்றி சிந்திப்போம். இயேசு பிரான் வாழ்ந்த காலத்தில், எளிய உவமைகளைப் பயன்படுத்தி மக்கள் மத்தியில் பேசினார். மக்களுக்குப் புரிகிற செய்திகளை எடுத்துரைத்தார்.

‘‘நானே நல்ல ஆயன் என்று கூறுவதில் இருந்து மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டுகிறார். ‘உங்களைக் கைவிடும் கூலிக்காரன் நான் அல்ல’ என்று விளக்கம் தருகிறார்.

‘நல்ல ஆயன்’ என்பதற்கு அவர் கூறும் கருத்து, ‘‘நல்ல ஆயன், தன் மக்களுக்காக உயிரைக் கொடுப்பவன்’’ என்கிறார். ‘‘கூலிக்கு ஆடுகளை மேய்ப்பவன், ஓநாய் வருகின்றபொழுது, தான் தப்பித்துக் கொள்வதற்காக, ஆடுகளை அங்கேயே விட்டு விட்டு ஓடி விடுவான்’’ என்கிறார்.

தன்னை நல்லதோர் ஆயனாகவும், மக்களை ஆடுகளாகவும் சித்தரிக்கிறார். என் தந்தையை நான் அறிவேன். என் தந்தையும் என்னை அறிவார் என்கிறார். இதோடு அவர் நின்று விடவில்லை. ‘‘இந்தக் கொட்டிலைச் சேராத ஆடுகளும் இருக்கின்றன. அவற்றையும் சேர்த்து வழி நடத்த வேண்டும்’’ என்கிறார். மக்களை நல்வழிப்படுத்த அவர் எடுத்துக் கொள்ளும் முயற்சி அளவிட முடியாதது. கணக்கில் அடங்காதது.

மக்களுக்காக வாழ வேண்டும் என்ற கருத்தை உடையவர்கள் இந்தப் பகுதியைப் படித்து உணர்தல் வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் மக்கள் பணியில் சிறந்தோங்க வேண்டும். இடையூறு வருகின்றபொழுது தன் உயிரைக் கொடுத்தாவது இடையூறைக் களைந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும்.

கிறிஸ்துவைப் பின்பற்றும் குருமார்களுக்கும், ஆயர்களுக்கும், மக்களுக்கும் இந்த உவமை, இக்காலத்தில் பெரிதும் தேவைப்படுகிறது. இயேசு பெருமானின் போதனையில் வரும் ஒவ்வொரு சொல்லும் பொருள் பொதிந்தவையாக இருக்கின்றன.

யோவானின் நற்செய்திகளாக இந்த வரிகள் வருகின்றன. நல்ல ஆயனுடைய குரலை, ஆடுகள் கண்டிப்பாய்ச் செவி மடுக்கும். அதைப்போல, நான் நல்ல ஆயன் என்பதால் என் போதனைகளை மக்கள் செவி மடுப்பர் என்கிறார்.

இயேசுவைப் பின்பற்றுவது என்பது கடினமானது அல்ல. தூய்மையான எண்ணம் இருந்தால்–பிறரை நேசிக்கும் பண்பு இருந்தால்–சுயநலம் இல்லாமல் இருந்தால் பின்பற்றலாம். எளிமையும், உண்மையும் மனித வாழ்க்கையில் இணைந்து செயல்பட வேண்டும்.

‘‘நானே நல்ல ஆயன்’’ என்ற வார்த்தை மிகவும் ஆழமானது. இதைத் துணிந்து யாரும் எளிதாகச் சொல்லி விட முடியாது. ஆயர்கள் பலர் இருக்கலாம். ‘நல்ல’ என்ற அடைமொழி என்பது முக்கியமானது. ‘நல்ல ஆயன்’ என்று சொன்னால், ‘பரிசுத்தம்’ என்பது முன்னே வருகிறது என்பதைப் படிப்போர் உணர வேண்டும்.

ஆடுகளை மேய்க்கக்கூடிய ஒருவரை ஒருகணம் உற்றுக் கவனியுங்கள். ஆடுகளை காலையில் எழுந்ததும் பட்டியில் இருந்து கூட்டமாக ஓட்டிச் செல்வார். ஆடுகளை மட்டுமே அவர் சிந்திப்பார். புல் உள்ள இடங்களைத் தேடிச் செல்வார்; அங்கு அவைகளை மேய விடுவார். தண்ணீர் உள்ள இடங்களை நோக்குவார். ஆடுகள் தாகம் தீர்க்க அங்கே அவற்றை அழைத்துச் செல்வார். அந்த ஆடுகள் நீரை அருந்தியவுடன் மாலை நேரம் வந்து விடும். மீண்டும் ஆடுகளை பட்டியில் கொண்டு போய் அடைப்பார். அத்தனை ஆடுகளும் இருக்கின்றனவா? அல்லது ஏதாவது காணாமல் போய் விட்டதா? என்றெல்லாம் கண்ணும் கருத்துமாகக் கவனிப்பார். அத்தனை ஆடுகளும் திரும்ப வந்து விட்டால் மகிழ்ச்சி அடைவார்.

ஒருவேளை ஓர் ஆடு காணாமல் போய் விட்டால், ஆடுகளைப் பட்டியில் விட்டு விட்டு, காணாமல் போன ஆட்டைத் தேடிச் செல்வார். அதற்காகத் தன் குரலை எழுப்புவார். ஆயனின் ஒலியைக் கேட்ட ஆடு, தன் குரலை மறுமொழியாகக் கொடுக்கும். பிறகு ஆட்டைக் கண்டுபிடித்து பட்டியில் சேர்ப்பார். மகிழ்ச்சி அடைவார். இதைப்போலத்தான் இயேசுவின் வாழ்க்கையும் இவ்வுலகில் அமைந்திருந்தது.

இது மட்டுமல்ல, ‘‘என் கொட்டிலைச் சேராத ஆடுகளும் உண்டு’’ என்கிறார். ‘‘அவற்றையும் நான் கொண்டு வந்து சேர்க்க வேண்டும்’’ என்கிறார். ‘‘என் குரலுக்கு அவை செவி மடுக்கும்’’ என்கிறார்.

வாழ்க்கை என்பது கரடு முரடாக இருக்கும் இந்தக் காலகட்டத்தில் இயேசுவின் நம்பிக்கையை நாமும் ஏற்போம். அவர் வழி நடப்போம், தெளிவடைவோம்.

(தொடரும்)

மேலும் செய்திகள்