இரண்யகசிபுவை வதம் செய்த நரசிம்மர்

நாரதரின் உபதேசத்தால், வளரும் பருவத்தில் பிரகலாதன், நாராயணரின் நாமத்தையே உச்சரித்து வந்தான்.

Update: 2017-05-02 07:55 GMT
ரண்யாட்சன் என்ற அசுரன், பூமியை கடலுக்குள் ஒளித்து வைத்தான். இதையடுத்து மகாவிஷ்ணு, வராக அவதாரம் எடுத்து இரண்யாட்சனை வதம் செய்து பூமியை மீட்டார். இதையறிந்த இரண்யாட்சனின் சகோதரன் இரண்யகசிபு, மகாவிஷ்ணுவின் மீதும் தேவர்கள் மீதும் கோபம் கொண்டார். அவர்களை பழி தீர்க்க தன் சக்தியை அதிகரிக்க எண்ணினான். எனவே பிரம்மதேவனை நோக்கி தவம் இருந்தான்.

இந்த நிலையில் இரண்யகசிபுவின் மனைவி கயாது கர்ப்பிணியாக இருந்தாள். இரண்யகசிபுவின் தவத்தை கலைக்கும் நோக்கில், இந்திரன் கயாதுவை சிறை பிடித்து, அவள் வயிற்றில் வளர்ந்த சிசுவை கொல்ல முயன்றான். இதையறிந்த நாரதர், கயாதுவை மீட்டு தனது குடிலில் வைத்து பாதுகாத்து வந்தார். அப்போது நாள்தோறும் நாராயணரின் பெருமைகளை கயாதுவுக்கு கூறி வந்தார். அதனை கருவில் வளர்ந்த குழந்தையும் கேட்டு வந்தது. குழந்தைக்கும் நாரதர் அஷ்டாட்சர மந்திரத்தை கூறி வந்தார். சகல சாஸ்திரங்களை கருவில் இருக்கும் போதே அந்தக் குழந்தைக்கு கற்பித்து தர்ம உபதேசம் செய்தார்.

இதற்கிடையில் இரண்யகசிபுவின் கடும் தவத்திற்கு மகிழ்ந்த பிரம்மன், அவன் முன்பு தோன்றி, ‘என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்டார்.

அதற்கு இரண்யகசிபு, ‘எனக்கு மூவுலகையும் ஆளும் வல்லமை வேண்டும். இரவிலோ, பகலிலோ, தேவர்களாலோ, மனிதனாலோ, விலங்காலோ, பறவையாலோ, ஆயுதங்களாலோ, நீரிலோ, நிலத்திலோ, ஆகாயத்தாலோ, வீட்டிற்கு உள்ளேயோ, வீட்டிற்கு வெளியேயோ எனக்கு மரணம் ஏற்படக்கூடாது. என் உடலில் இருந்து ஒரு சொட்டு ரத்தம் நிலத்தில் சிந்தினாலும் என்னை கொல்ல முயற்சிப்பவன் தலை சுக்குநூறாக வெடித்துவிட வேண்டும்’ என்ற வரத்தைக் கேட்டான்.

பிரம்மதேவனும் அவன் கேட்ட வரத்தை அளித்து மறைந்தார். பின் நகரத்திற்கு திரும்பினான் இரண்யகசிபு. அவனிடம் நாரதர் கயாதுவை ஒப்படைத்தார். கயாது அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். அந்தக் குழந்தைக்கு பிரகலாதன் என்று பெயரிட்டனர்.

இந்த நிலையில் பிரம்மன் கொடுத்த வரத்தைக் கொண்டு, இரண்யகசிபு மூன்று உலகங்களையும் ஆட்டிப் படைத்தான். தேவர்களையும், முனிவர்களையும் கொன்று குவித்தான். தன் சகோதரனை கொன்ற நாராயணனின் பெயரை ஒருவரும் உச்சரிக்கக்கூடாது என்று கட்டளையிட்டான். ஆனால் அவனது உத்தரவை அவனது மகனே மீறும்படி ஆகிப்போனது.

நாரதரின் உபதேசத்தால், வளரும் பருவத்தில் பிரகலாதன், நாராயணரின் நாமத்தையே உச்சரித்து வந்தான். இதைக் கேள்விபட்ட இரண்யகசிபு, மகனிடம் பக்குவமாக எடுத்துக்கூறினான். ஆனால் பிரகலாதன், நாராயணரின் சிறப்பு பற்றி தந்தைக்கே பாடம் எடுக்கத் தொடங்கிவிட்டான்.

இதைக்கேட்டு கோபம் கொண்ட இரண்ய கசிபு, மகன் என்றும் பாராமல் பிரகலாதனை கொல்ல உத்தரவிட்டான். மலையில் இருந்து உருட்டி விட்டனர். நாராய ணரின் நாமத்தை உச்சரித்த காயமின்றி தப்பினான். இந்த விவரம் இரண்யகசிபுவுக்கு தெரியவர அதிர்ந்து போனான். கொடிய நாகங்களை விட்டு கடிக்க விட்டான். ஆனால் சீறி வந்த நாகங்கள், பிரகலாதனின் பாதத்தில் படுத்து விட்டன. பின்னர் யானைக் கொண்டு மிதிக்க வைத்தான். யானை ஆசீர்வாதம் செய்து சென்று விட்டது.

பல வழிகளில் முயற்சித்தும் பிரகலாதனை ஒன்றும் செய்ய முடியவில்லை. பொறுமை இழந்த இரண்யகசிபு தன் மகனிடம் ‘மூடனே, உனக்கு யார் கொடுத்த தைரியம்? மூவுலகிலும் என்னை விட மேலானவன் யார் இருக்கிறார்கள்’ என்று கேட்டான்.

அதற்கு, ‘முத்தொழிலையும் செய்யும் பரந்தாமனே காரணம்’ என்றான்.

‘அவன் எங்கு இருக்கிறான்?’.

‘அவர் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்’ என்று அமைதியாக பிரகலாதன் கூற, ‘இந்த தூணிலும் இருப்பானா?, காட்டுபார்க்கலாம்’ என்று தூணை வாளால் வெட்டினான்.

அப்போது தூண் இரண்டாக பிளந்து அதற்குள் இருந்து நரசிம்மர் தோன்றினார். அவர் விலங்காகவும் இல்லை.. மனிதனாகவும் இல்லை. சிங்க தலையும், மனித உடலுமாக தோன்றினார். இரவிலோ, பகலிலோ மரணம் நிகழக்கூடாது என்று இரண்யகசிபு வரம் வாங்கியிருந்ததால், அந்தி சாயும் நேரம் வரை அவனுடன் மல்யுத்தத்தில் ஈடுபட்டார் நரசிம்மர். பின்னர் அவனை வீட்டின் வாசல் படியில் வைத்து தன் கை நகங்களாலேயே வயிற்றை கிழித்து கொன்றார்.

பின்னர் பிரகலாதனை ஆசீர்வதித்த நரசிம்மர், அவனுக்கு முடிசூட்டினார். அசுர குலத்தில் பிறந்தால், நாராயணரின் நாமத்தால் நற் செயல்களைச் செய்த பிரகலாதன் பல ஆண்டு காலம் நல்லாட்சி செய்து இறைவனை அடைந்தான். 

மேலும் செய்திகள்