இறைவனுக்கு பிடித்தது எது?

இறைவன் படைத்த உலகில்.. அவனால் படைக்கப்பட்ட நீ.. அவன் படைத்த பொருளையே அவனுக்கு படைப்பாயா?’ என்று அடுக்கடுக்கான கேள்விகளைத் தொடுத்தார்.

Update: 2017-05-02 09:51 GMT
துறவி ஒருவர் தன் கால் போன போக்கில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருக்கு மிகவும் தாகமாக இருந்தது. அவர் சென்ற வழியில் ஒரு குயவன், பானை செய்து கொண்டிருந்தான். அங்கு ஏராளமான பானைகள், சட்டிகள், குடங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த குயவனுக்கு அருகில் ஒரு ஆடு கட்டிப்போடப்பட்டிருந்தது. அது ஒரு நொடிகூட ஓயாமல் கத்திக் கொண்டே இருந்தது.

துறவி அந்த குயவன் இருந்த இடத்திற்குச் சென்று தரையில் அமர்ந்தார். அவரது முகத்தில் தெரிந்த சோர்வைக் கண்டதும், குயவன் சிறிய மண் சட்டியில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான். அதை வாங்கிப் பருகிய துறவி, ‘இந்த ஆட்டை நீ வளர்த்து வருகிறாயா?’ என்று கேட்டார்.

‘இல்லை சுவாமி.. இது ஒரு காட்டாடு.. வழி தவறி வந்தது. நான் பிடித்து கட்டிப் போட்டேன்’ என்றான் அந்த குயவன்.

‘எதற்காக?’ என்று துறவி கேட்க.. அதற்கு குயவன், ‘பண்டிகை வரப்போகிறதே.. அந்த நாளில் இறைவனுக்கு பலி கொடுக்கலாம் என்றுதான்’.

துறவி வியப்பு மேலிட ‘பலியா?’ என்றார்.

‘ஆமாம் சுவாமி.. தெய்வத்துக்கு திருவிழா வரும்போது பலி கொடுப்பது விசேஷம். இதனால் தெய்வம் மகிழ்ந்து வரம் கொடுக்கும்’.

குயவன் இப்படிச் சொன்னதும் துறவி எழுந்து, தன் கையில் இருந்த மண் சட்டியை ஓங்கி தரையில் போட்டார். அது துண்டு துண்டாகச் சிதறியது. பின்னர் சிதறிய பாகங்களை எடுத்து குயவனிடம் கொடுத்தார்.

குயவன் கோபத்தில், ‘என்ன இது?’ என்றான்.

‘உனக்குப் பிடிக்குமே என்றுதான் இப்படி உடைத்துக் கொடுக்கிறேன்’ என்றார் துறவி.

‘உங்களுக்கு பைத்தியம் பிடித்திருக்கிறதா? இல்லை கேலி, கிண்டல் செய்கிறீர்களா? நான் செய்த பானையில் என் உழைப்பு இருக்கிறது. அதை உடைக்க நான் எப்படி சம்மதிப்பேன். இது எனக்கு பிடிக்கும் என்று யார் உங்களுக்குச் சென்னது?’ என்றான். துறவி மென்மையாக சிரித்தார். பின்னர், ‘ஆண்டவன் படைத்த ஒரு உயிரை கதறக் கதற வெட்டிக் கொன்று பலியிடலாம் என்று மட்டும் உனக்கு யார் சொன்னது? அதை ஏற்று மகிழ்ந்து இறைவன் வரம் தருவான் என்று எப்படி நம்புகிறாய்? எந்தத் தாய் தன் குழந்தை கதறுவதை விரும்புவாள்? எந்த தகப்பன் தன் குழந்தை கொல்லப்படுவதை சகிப்பான்?. இறைவன் படைத்த உலகில்.. அவனால் படைக்கப்பட்ட நீ.. அவன் படைத்த பொருளையே அவனுக்கு படைப்பாயா?’ என்று அடுக்கடுக்கான கேள்விகளைத் தொடுத்தார்.

அவரது வார்த்தைகளைக் கேட்ட குயவன், ஆட்டின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றை அவிழ்க்கத் தொடங்கினான்.

மேலும் செய்திகள்