சாளக்கிராம ஆஞ்சநேயர்

ராமபிரானின் சிறந்த பக்தனாக திகழும் ஆஞ்சநேயருக்கு, சுசீந்திரம், நாமக்கல், நங்கநல்லூர், தெய்வச் செயல்புரம், குலசேரகன்கோட்டை, பஞ்சவடி ஆகிய ஊர்களில் மிக உயரமான சிலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

Update: 2017-07-04 00:15 GMT
ராமபிரானின் சிறந்த பக்தனாக திகழும் ஆஞ்சநேயருக்கு, சுசீந்திரம், நாமக்கல், நங்கநல்லூர், தெய்வச் செயல்புரம், குலசேரகன்கோட்டை, பஞ்சவடி ஆகிய ஊர்களில் மிக உயரமான சிலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பல ஊர்களில் தனிக்கோவில்களும் ஆஞ்சநேயருக்கு அமைந்துள்ளன. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டிக்கு அருகில் உள்ள மேட்டுப்பட்டி என்ற இடத்தில் 16 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சிலை, கைகூப்பி வணங்கிய நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை மிகப்பெரிய சாளக் கிராமக் கல்லால் செய்யப்பட்டதாகும்.

கேதுவின் அதிதேவதை

நவக்கிரகங்களில் கேது பகவானின் அதிதேவையாக திகழ்பவர் சித்திரகுப்தன். கேது தோ‌ஷம் உள்ளவர்கள் தங்கள் நட்சத்திர நாளில், சித்திரகுப்தன் வீற்றிருக்கும் ஆலயத்திற்குச் சென்று வழிபடுவதுடன் சிறப்பு பூஜை செய்வது நல்ல பலனைத் தரும். பிறந்த கிழமை, பிறந்த நட்சத்திரம் கூடும் நல்லநாளில் வழிபாடு செய்வது மேலும் சிறப்பை அளிக்கும். வழிபாட்டின் போது நீல மலர்கள், பலவண்ண ஆடை கொண்டு சித்திரகுப்தனை வழிபடுங்கள்.

அபிஷேகத்தால் வெளியேறும் நண்டு

தஞ்சாவூர் மாவட்டம் திரு விடைமருதூர் தாலுகாவில் வேப்பத்தூர் என்ற ஊரின் அருகில் உள்ளது திருந்துதேவன்குடி. இங்குதான் கற்கடேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 42–வது தலமாக இது விளங்கு கிறது. இந்த ஆலயத்தில் இரண்டு அம்பிகை சன்னிதிகள் இருக்கின்றன. கோவில் கருவறையில் இருக்கும் சிவலிங்கத்தின் மீது, இந்திரன் வாளால் வெட்டிய வடுவும், சிவலிங்கத்தில் நண்டு நுழைந்து வெளியேறியதற்கான துவாரமும் காணப்படுகின்றன.

ஆடி அமாவாசையும், பூர நட்சத்திரமும் கூடிய நேரத்தில், 21 குடம் காராம் பசும்பாலைக் கொண்டு இங்கிருக்கும் சிவலிங்கத்தை நீராட்டினால், சிவலிங்கத்தில் இருந்து நண்டு வெளியில் வந்து காட்சி தரும் என்று வசிஷ்ட மகாத்மியத்தில் சொல்லப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். ஆணவத்தின் காரணமாக நண்டை வெட்ட முயன்ற இந்திரன், வாள் சிவலிங்கத்தின் மீது பட்டதும் பதறினான். அங்கு சிவபெருமான் தோன்றி, அவனுக்கு அறிவுரை கூறியதும் வருந்தி திருந்தினான். இதன் காரணமாகவே அந்த திருத்தலத்திற்கு ‘திருந்துதேவன்குடி’ என்ற பெயர் வந்ததாக சொல்கிறார்கள்.

பக்தர்கள்  பூஜை  செய்யும்  தலம்

காசி, ஸ்ரீசைலம் ஆகிய இரண்டு தலங்களில் மட்டுமே ஜோதிர்லிங்கமும், அம்பாளும் ஒன்றாக தரிசனம் தருகிறார்கள். இதில் ஸ்ரீசைலம் ஆலயம் வில்வ மரங்கள் சூழ, ஸ்ரீசக்கர வடிவமாக உள்ள மலையின் நடுவில் அமைந்திருக் கிறது. ஆதிசே‌ஷனின் தலை அகோபிலத்திலும், உடல் திருப்பதியிலும், வால் ஸ்ரீசைலத்திலும் இருப்பதாக ஐதீகம். காசி விசுவநாதர் ஆலயத்தைப் போலவே, ஸ்ரீசைலத்தில் உள்ள லிங்கத்திற்கும், பக்தர்கள் தாங்களாகவே பூஜை செய்து வழிபடலாம்.

மேலும் செய்திகள்