21. இயேசு கொடுத்த வரம்

அந்தக்காலத்தில் இயேசுபிரான் அவருடைய சீடர்களை நோக்கிக் கூறுகிறார்: ‘விண்ணரசு நெருக்கமாக வந்து விட்டது எனப் பறைசாற்றுங்கள்.

Update: 2017-07-17 23:00 GMT
நற்செய்தி சிந்தனை

- செம்பை சேவியர்

ந்தக்காலத்தில் இயேசுபிரான் அவருடைய சீடர்களை நோக்கிக் கூறுகிறார்: ‘விண்ணரசு நெருக்கமாக வந்து விட்டது எனப் பறைசாற்றுங்கள். உடலாலும், உள்ளத்தாலும் நலம் குறைந்தவர்களைக் குணமாக்குங்கள். இறந்தவர்களை உயிர் பெற்று எழச்செய்யுங்கள். தொழு நோயாளிகளை நலம் பெறச்செய்யுங்கள். பேய்களை ஓட்டி விடுங்கள். கொடையாகப் பெற்றதைக் கொடையாக வழங்குங்கள். பொன், வெள்ளி, செப்பு எதையும் உங்கள் இடைக்கச்சைகளில் வைத்துக் கொள்ள வேண்டாம். பயணம் செய்யும் பொழுது, பையோ, இரண்டு அங்கிகளோ, மிதியடிகளோ, கைத்தடியோ எடுத்துக் கொண்டு போக வேண்டாம். ஏனென்றால், வேலையாள், நம் உணவுக்கு உரிமை உடையவரே’.

‘நீங்கள் எந்த நகருக்குள், ஊருக்குள் சென்றாலும், அங்கே உங்களை ஏற்றுக்கொள்ளத் தகுதியுடையவர், யாரெனக்கேட்டு அறியுங்கள். அவ்விடத்தில் இருந்து புறப்படும் வரை, அவர்களோடு தங்கியிருங்கள். அந்த இல்லத்திற்குள் செல்கிற போதே, அந்த இல்லத்தாருக்கு வாழ்த்தைக் கூறுங்கள்’.

‘அந்த வீட்டார்கள், தகுதி உள்ளவராக இருந்தால், நீங்கள் சொன்ன வாழ்த்தின் அமைதியானது, அவர்கள் மேல் தங்கட்டும். அவர்கள் தகுதி அற்றவர்களாக இருந்தால், அது உங்களிடமே திரும்பி வரட்டும். உங்களை யாராவது ஏற்றுக்கொள்ளாமலோ, நீங்கள் அறிவித்ததற்குச் செவி கொடுக்காமலோ இருந்தால், அவருடைய வீட்டை, நகரை விட்டு வெளியே வரும்போது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை, உதறி விடுங்கள். தீர்ப்பு சொல்லும் நாளில், ‘சோதோம் குமோரா’ பகுதிகளுக்குக் கிடைக்கும் தண்டனையை விட, அந்நகருக்குக் கிடைக்கும் தண்டனையானது கடினமாகவே இருக்கும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்’ என்றார்.

இந்த நற்செய்தியை மிகவும் கவனமாகக் கவனியுங்கள். தம்மைப் பின்பற்றக் கூடிய சீடர் களுக்குப் பல வரங்களை, மனப்பூர்வமாக அளிக்கின்றார்.

‘விண்ணரசு சமீபமாக வந்து விட்டது’ என்ற செய்தியை முதலில் கூறுங்கள் என்கிறார். அடுத்தபடியாக, உடலாலும், உள்ளத்தாலும் நலிவடைந்தவர்களை, குணமாக்க வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்துகிறார். இறந்து போனவர்களை, உயிர் பெற்று எழச் செய்யுங்கள். தொழுநோய்த் துன்பத்தால், துயரப்படக் கூடியவர்களை, நலம் பெற்று மகிழ்ச்சி அடையச்செய்யுங்கள். பேயினால் பீடிக்கப்பட்டவர்களை, பேயானது அவர்களிடம் இருந்து ஓடுவதற்குக் காரணி களாய் இருங்கள் என்கிறார். இப்படிப்பட்ட அரிய பெரும் செயல்களைச் செய்வதற்கு, அவர்களுக்குப் பெரிய வரங்களைப் பொழிகிறார்.

இவ்வளவு அதிகாரங்களையும், தம் சீடர்களுக்குக் கொடுத்த இயேசுபிரான், ஒரு கருத்தை வலியுறுத்திக் கூறுகிறார், ‘கொடையாகப் பெற்றதைக் கொடையாக வழங்குங்கள்’ என்கிறார். இத்தகைய வரங்கள், இயேசு பெருமானால், எதையும் எதிர்பார்க்காமல், கொடையாகச் சீடர்களுக்குக் கொடுக்கப்பட்டது என்பதால், கொடையாகப் பெற்றதைக் கொடையாகக் கொடுங்கள் என்கிறார்.

சீடர்கள் அவர்களுடைய சக்தியினால் பெறவில்லை. இயேசுபிரானிடம் இருந்து கொடையாகப் பெற்றது. கொடையாகப் பெற்றதைக் கொடையாக வழங்குவதுதானே நியாயம்.

இக்காலத்தில் அப்படியா நடக்கிறது?

ஏதோ சில செயல்கள், நம்மையும் அறியாமல் நடக்கின்றபொழுது, நம்மால்தான் நடந்தது என்ற அகம்பாவமும், மனோபாவமும் சிலருக்கு ஏற்பட்டு விடுகிறது.

‘நீங்கள் எதையும் தனக்கென வைத்துக் கொள்ளக் கூடாது. எதையும் எடுத்துச் செல்லவும் கூடாது’.

இதில் இருந்து நாம் உணர்வது என்ன?

‘இறை மகனின் வார்த்தை ஒன்றுதான்’ குணப் படுத்தும் என்ற கருத்து, இங்கே வலியுறுத்தப்படு கிறது.

அடுத்தபடியாக ஓர் எச்சரிக்கையும் விடுக் கிறார்.

நீங்கள் எந்த நகரத்திற்குள் சென்றாலும் அல்லது எந்த ஊருக்குச் சென்றாலும், உங்களை ஏற்றுக்கொள்வதற்குத் தகுதி உடையவர்கள் யார் என்பதைக் கேட்டு, அதற்குப் பிறகு அறிவியுங்கள் என்கிறார். இப்படிப்பட்டவர்களை, ஏற்றுக் கொள்பவர்கள் மிகுதியாக இருக்க மாட்டார்கள் என்பதால்தான், இவ்வார்த்தையைக் கூறுகிறார். முதலில் ஒருவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்; பிறகு நம்ப வேண்டும். பிறகுதானே நலம் கிட்டும்.

‘உங்களை ஒருவர் ஏற்றுக் கொண்ட பிறகு, அங்கிருந்து வரும் வரை அவரோடு தங்கி இருங்கள்’ என்ற வார்த்தையைக் கூறி விட்டு, ‘அந்த இல்லத்திற்குள் நுழைகிறபொழுதே வாழ்த்தைக் கூறுங்கள்’ என்கிறார். இப்படிச் செய்வதால் ஏற்படும் பயன் என்ன என்பதையும் எடுத்துரைக்கிறார்.

‘நீங்கள் செல்லும் அந்த இல்லத்தார்கள், தகுதி உடையவர்களாக இருந்தால், நீங்கள் சொன்ன வாழ்த்து அவர்களின் மேல் தங்கட்டும்’ என்கிறார். ‘தகுதி அற்றவர்களாக இருந்தால், நீங்கள் சொன்ன வாழ்த்தானது, உங்களிடமே திரும்பி வரட்டும்’ என்கிறார். ஒருவர் தகுதி உடையவரா? இல்லையா? என்பதை வாழ்த்தால் ஏற்படும் செயற்பாடுகளை வைத்து உணர்ந்து கொள்ளலாம்.

உங்களை யார் ஏற்றுக் கொள்ளவில்லையோ அல்லது உங்கள் வார்த்தைகளுக்குச் செவி சாய்க்கவில்லையோ அவரது வீட்டையோ, அந்த நகரத்தையோ விட்டு வெளியே வரும்பொழுது, உங்கள் கால்களில் படிந்திருக்கும் ‘தூசி’யை உதறி விட்டு வாருங்கள்.

பாவச் சேற்றில் உழன்று கொண்டிருந்த, ‘சோதோம் குமோரா’ பட்டணத்திற்குக் கிடைத்த தண்டனையை விட, ஏற்றுக் கொள்ளாத நகருக்குத் தண்டனை கிடைக்கும் என்கிறார்.

இயேசுபிரான் நாடு முழுவதும் அலைந்து நல்ல செய்திகளை மக்களிடையே பரப்பினார் என்பதை நாம் அறிவோம். ஆகவேதான் அவர் சீடர்களை எல்லா வகையிலும் தயார்படுத்து கிறார். அதோடு மட்டும் அவர் விட்டு விடவில்லை. நாடு முழுவதும் சுற்றிச் சுழன்று, நற்செய்திகளை அறிவிக்க, அவர்களுக்குக் கட்டளையிடுகிறார். கட்டளையிட்டால் மட்டும் போதாது; எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு வழிகாட்டுகிறார்.

பாவத்தில் இருந்து விடுபட்டு, நற்செய்திகளை செவி மடுத்து, விண்ணரசை அடைய வேண்டும் என்று இயேசுபிரான் விரும்புகிறார். விண்ணரசு நெருக்கமாக வந்து விட்டது என்பதை உணர்த்து கிறார்.

விண்ணரசுக்குத் தகுதியுடையவர்களாக ஆக்குவதற்காக, மக்களைத் தயார்படுத்தும்படி, தன் சீடர் களுக்கு இடும் கட்டளை என்பது, உண்மையானதாக இருப்பதால், இந்தக் கட்டளையை ஏற்போம். இயேசுவின் நற்செய்திக்குச் செவி மடுப்போம்.

(தொடரும்)

மேலும் செய்திகள்