மழையை தரும் “மிளகு பிள்ளையார்”

திருநெல்வேலி மாவட்ட சேரன்மாதேவியில் அமைந்துள்ளது மிளகு பிள்ளையார் கோவில். இந்தக் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இந்த ஆலயத்தின் வரலாற்றைக் காண்போம்.

Update: 2017-08-22 07:13 GMT
திருநெல்வேலி மாவட்ட சேரன்மாதேவியில் அமைந்துள்ளது மிளகு பிள்ளையார் கோவில். இந்தக் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இந்த ஆலயத்தின் வரலாற்றைக் காண்போம்.

கேரளத்தை ஆண்ட மன்னன் ஒருவனுக்கு தீராத வியாதி உண்டாயிற்று. மருந்தால் அது தீரவில்லை. ஒருநாள் அவனது கனவில், ‘மன்னா! நீ உன் உயரத்துக்கு ஒரு பொம்மை தயார் செய்து, அதனுள் துவரம் பருப்பு அளவுள்ள மாணிக்க கற்களை கொட்டி, உன் வியாதியை அதற்குள் இடம் மாற்றி, ஒரு பிராமணனுக்கு தானமாக கொடுத்து விடு. உன்னிடம் உள்ள அந்த வியாதி அந்த பிராமணனை சேர்ந்து விடும்’ என அசரீரி ஒலித்தது.

அந்த அசரீரியை தெய்வத்தின் கட்டளையாக ஏற்ற மன்னன், ஒரு பொம்மையை செய்தான். ஆனால் அந்த பொம்மையை எந்த பிராமணனும் வாங்க முன்வரவில்லை. இந்த தகவலை கர்நாடகாவில் உள்ள பிரம்மசாரி பிராமண இளைஞன் ஒருவன் கேள்விப்பட்டான். இதனையடுத்து அவன் அங்கிருந்து புறப்பட்டு வந்து மன்னரிடம் இருந்து அந்த பொம்மையை வாங்கிக் கொண்டான்.

பிரம்மசாரியின் கைக்கு வந்தவுடன் அந்த பொம்மை உயிர் பெற்றது. தனக்கு அந்த பிரம்மசாரி செய்திருந்த காயத்ரி மந்திரத்தின் பலனில் ஒரு பகுதியைக் கேட்டது. ‘அப்படி கொடுத்து விட்டால் வியாதி உன்னை அண்டாது’ என்றும் அந்த பொம்மை சொன்னது. இதனைக்கேட்ட அந்த பிரம்மசாரி பொம்மை கேட்டபடி காயத்ரி மந்திரத்தின் பலனின் ஒரு பகுதியை கொடுத்து விட்டான். ஆனால் கொடுத்த பின்னர் அவனது மனது துன்பம் அடைந்தது.

‘வியாதியால் அவதிப்படுவோம் என்ற பயத்தில், சுயநலம் கருதி தர்மத்துக்கு மாறாக காயத்ரி மந்திரத்தின் பலனை தானம் செய்து விட்டோமே’ என்று அவன் கலங்கினான். இதற்கு பிராயச்சித்த மாக தனக்கு கிடைத்த மதிப்பு மிக்க மாணிக்க கற்களை பொதுநலன் கருதி செல வழிப்பது என்று அவன் முடிவெடுத்தான். ‘என்ன நன்மை செய்யலாம்?’ என்பதில் குழப்பம் வரவே, பொதிகை மலையில் வசித்து வரும் அகத்திய முனிவரிடம் சென்று யோசனை கேட்பது என்று முடிவு செய்தான்.

பிறகு பொதிகை மலை சென்று அகத்தியரை சந்தித்தான். அவனது பிரச்சினையை அறிந்து கொண்ட அகத்தியர், ‘நல்ல விஷயங்களிலேயே தலை சிறந்தது தண்ணீர் தானம் தான். நீ மலையில் இருந்து கீழே இறங்கி செல்லும்போது, வழியில் ஒரு பசுவை காண்பாய். அதன் வாலைப் பிடித்துக்கொண்டே செல். அது போகும் வழியை குறித்துக்கொள். அதன்படி கால்வாய் வெட்டு. பசு சாணம் போடும் இடத்தில் மதகு ஏற்படுத்து. அது கோமியம் பெய்யும் இடங்களில் மறுகால் ஏற்படுத்து. பசு படுக்கும் இடங் களில் ஏரி தோண்டு. ஒரு குறிப்பிட்ட இடத்தில் பசு மறைந்து விடும். அங்கே கால்வாய் பணியை முடித்து மீதி தண்ணீர் அங்கே சேரும்படியாக ஒரு குளம் தோண்டு’ என்றார்.

அந்த இளைஞன் பசுவை கண்ட இடம்தான் சேரன்மாதேவி. அகத்திய முனிவரே அந்த பசுவாக மாறி வந்து நின்றதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. பசு சென்ற பாதையில் மதகு, ஏரிகளை அமைத்தான் இளைஞன். கடைசியாக பிராஞ்சேரி என்ற ஊரில் பசு மறைந்து விட்டது. அங்கே மிகப்பெரிய ஏரியை தோண்டினான். இப்போதும் மழை வெள்ள காலங்களில் நீர் நிறைந்து காணப்படும் இந்த ஏரியை பார்த்தால், கடல் போல் காட்சியளிக்கும்.

மக்களுக்காக நல்லது செய்பவர்கள், தங்கள் பெயரை விளம்பரப்படுத்துவதில்லை. அந்த இளைஞனின் பெயரும் கூட இன்றுவரை யாருக்கும் தெரியாது. அவனது மொழியின் பெயராலே அந்த கால்வாய்க்கு ‘கன்னடியன் கால்வாய்’ என்று பெயர் வைத்து விட்டனர். கன்னடத்தில் இருந்து வந்த ஒரு இளைஞன், மலையாள மன்னனிடம் உதவி பெற்று, தமிழ்நாட்டில் கால்வாய் தோண்டிக் கொடுத்திருக்கிறான்.

அந்த இளைஞன் கால்வாய் வெட்டியதோடு நின்று விடவில்லை. அந்த கால்வாயில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வரவேண்டுமே என்று கவலைப்பட்டான். அவன் கவலைப்பட்டது போலவே, தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மழையே இல்லை. கால்வாய் தண்ணீர் ஓடாமல், காய்ந்து போய் விட்டது.

உடனே அவன் ஒரு விநாயகரை பிரதிஷ்டை செய்து, அவரது உடலில் மிளகை அரைத்துத் தேய்த்து அபிஷேகம் செய்தான். அந்த அபிஷேக நீர், கால்வாய்க்குள் விழும்படி செய்தான். என்ன ஆச்சரியம்! உடனே மழை கொட்டி தீர்த்தது. இப்போதும் மழை இல்லாத காலங்களில் சேரன்மாதேவி பகுதி விவசாய சங்கத்தினர் இந்த வழிபாட்டை செய்கின்றனர்.

அவன் பிரதிஷ்டை செய்த விநாயகரே ‘மிளகு பிள்ளையார்’ என்று அழைக்கப்படுகிறார்.

மழை இல்லாத காலங்களில் இத்தலத்தில் வீற்றிருக்கும் விநாயகரது உடலில் மிளகை அரைத்துத் தேய்த்து அபிஷேகம் செய்து, அந்த புனித நீர் கால்வாய்க்குள் விழும்படி செய்தால் மழை வரும் என்பது ஐதீகம்.

திருநெல்வேலியில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சேரன்மாதேவி திருத்தலம்.

-நெல்லை வேலவன்.

மேலும் செய்திகள்