ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தரும் ராமர்

இந்த ஆலயத்தில் வெடி வழிபாடு செய்பவர்களுக்கு, அவர்கள் வேண்டியதை இறைவன் மகிழ்ச்சியுடன் விரைவில் செய்து கொடுப்பார் என்பது ஐதீகம்.

Update: 2017-09-08 01:00 GMT
கேரளாவில் நாலம்பலம் என்று அழைக்கப்படும் ராம சகோதரர்களுக்கான நான்கு கோவில்களில், திருப்பிரையார் எனுமிடத்தில் அமைந்திருக்கும் ராமர் கோவிலே முதன்மையானது. 

ஆலய அமைப்பு

திருப்பிரையார் ராமர் கோவிலின் கருவறை சதுரமாகக் கட்டுமானம் செய்யப்பட்டு, அதன் மேற்கூரை கூம்பு வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது. இக்கோவிலில் இருக்கும் ராமர் சங்கு, சக்கரம், அட்சமாலை, கோதண்டம் ஆகியவற்றுடன் நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். ஒரு கையில் அட்ச மாலையை வைத்திருப்பது இங்கு மட்டுமே காணக்கூடிய காட்சி என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவில் இறைவனான ராமர் திருப்பிரையாறப்பன் என்று அழைக்கப்படுகிறார். 

இங்கு ராமருக்கு வலப்புறம் ஸ்ரீதேவியும், இடப்புறம் பூதேவியும் இருக்கின்றனர். ராமர் கோவிலில் சீதாதேவி இல்லாமல், ஸ்ரீதேவியும் பூதேவியும் இடம் பெற்றிருப்பது ஏன்? என்பதற்கு இங்கிருப்பவர்கள் ஒரு கதையைச் சொல்கின்றனர். 

கேரளத்தில் புகழ்பெற்ற வில்வ மங்கலம் சுவாமிகள், ஒரு சமயம் இக்கோவிலுக்கு வழிபாடு செய்ய வந்தார். அப்போது அவர் ராமர் சன்னிதி முன்பாக நின்றிருந்த போது, கோவிலின் மேற்கு வாசல் வழியாக ஸ்ரீதேவியும், பூதேவியும் இங்கு கோவில் கொண்டிருக்கும் ராமரை வழிபடுவதற்காக வந்ததைக் கண்டிருக்கிறார். அவர்கள் இருவரும் இங்கேயே இருக்க வேண்டும் என்று நினைத்த அவர், அவர்களிருவரும் திரும்பிச் செல்ல முடியாதபடி கோவிலின் மேற்கு வாசலை மூடித் தாளிட்டு விட்டாராம். 

அதன் பின்னர் ராமருக்கு இருபுறமும் ஸ்ரீதேவியையும், பூதேவியையும் இருக்கச் செய்துவிட்டுச் சென்றாராம். இதனை மெய்ப்பிக்கும் விதமாக, இந்த ஆலயத்தின் மேற்கு வாசல் இன்றும் மூடியே கிடக்கிறது.

கோவிலின் தென்மேற்கு மூலையில் கணபதி, தெற்கு வாசலுக்கு அருகில் தட்சிணாமூர்த்தி, வெளிச்சுற்றின் தென்பகுதியில் சாஸ்தா, வடக்குப் பகுதியில் கோசாலை கிருஷ்ணர் ஆகியோருக்கு தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கோவிலின் கிழக்குப் பகுதியில் திருப்பிரையாறு எனும் ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது.

விழாக்கள்

இந்த ஆலயத்தில் கார்த்திகை மாதத்தில் 21 நாட்கள் நடைபெறும் சிறப்புத் திருவிழா முக்கியமானதாகும். இத்திருவிழா காலத்தில், இக்கோவிலில் ‘ஆன்கியக் கூத்து’ எனும் இசை நாடகம் நடத்தப்படுகிறது. கார்த்திகை ஏகாதசிக்கு இரு வாரங்களுக்கு முன்பிருந்தே, தினமும் கோவில் முழுக்க அதிகமான மலர் மாலைகளால் அலங்கரிக்கப்படுகிறது. அதனை ‘நிறை மாலை’ என்று அழைக்கின்றனர். அவ்வேளையில் கோவிலில் லட்சதீபம் ஏற்றுகிறார்கள். 

பங்குனி மாதத்தில் ஏழு நாட்கள் கொண்ட திருவிழா ஒன்றும் நடத்தப்படுகிறது. பங்குனி பூரம் நாளில் சிறப்பு ஊர்வலத்துடன் இவ்விழா நிறைவடைகிறது. இது போல் தசமி நாளில் சாஸ்தாவும், ஏகாதசி நாளில் ராமரும் கோவிலில் இருந்து ஊர்வலமாகச் செல்கின்றனர். இந்த ஊர்வலத்தில் யானைகளின் அணிவகுப்பும் உண்டு.     

ஆலயம் அதிகாலை 3 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை யிலும் திறந்திருக்கும். இக்கோவிலில் தினமும் ஐந்து கால பூஜைகள் செய்யப்படுகின்றன. தினமும் மூன்று வேளைகளில், கருவறையில் இருக்கும் மூலவரைப் போன்ற உற்சவர் சிலையை எடுத்துக் கொண்டு கோவிலை வலம் வரும் ‘சீவேலி’ ஊர்வலம் நடக் கிறது. நாலம்பலப் புனிதப் பயணத்தின் முதல் வழிபாடாக இக்கோவிலின் அதிகாலை வழிபாடு அமைந்திருப்பதால், அதிகாலை வேளையில் கூட்டம் அதிகமாக இருக்கும்.   

கோவிலின் கிழக்கே ஓடிக்கொண்டிருக்கும் திருப்பிரையாறு எனும் ஆற்றில், அதிக அளவில் மீன்கள் உள்ளன. இந்த மீன்களுக்கு அவல், செவ்வாழை போன்ற உணவுப் பொருட்களைப் போட்டுப் பக்தர்கள் வழிபடுகின்றனர். இதனை ‘மீனூட்டு’ என்று அழைக்கின்றனர். கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், கடலில் மிதந்து கொண்டிருந்த ராமர் மற்றும் அவரது சகோதரர்களின் சிலைகளைக் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்ததை நன்றியுடன் நினைத்துப் பார்க்கும் விதமாக, பக்தர்கள் இந்த ‘மீனூட்டு’ நடைமுறையைச் செயல்படுத்தி இருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள். 

அமைவிடம்

திருச்சூரில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும், குருவாயூரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும், கொடுங்கலூர் மற்றும் குருவாயூருக்கு இடையில் திருப்பிரையார் ராமர் கோவில் அமைந்திருக்கிறது. இக்கோவிலுக்குச் செல்ல திருச்சூர் மற்றும் குருவாயூர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.  

ஆஞ்சநேயர் மண்டபம்

இக்கோவிலில் ஆஞ்சநேயருக்குத் தனிச் சன்னிதி எதுவும் இல்லை. சீதையைத் தேடி இலங்கை சென்று திரும்பிய ஆஞ்ச நேயர், இந்தக் கோவில் இருக்கும் இடத்தில்தான் ‘கண்டேன் சீதையை’ என்று ராமரிடம் சொன்னதாகச் கூறப்படுகிறது. இதனால், இக்கோவில் கருவறைக்கு நேர் எதிரில் இருக்கும் வழிபாட்டு மண்டபத்தில் ஆஞ்சநேயர் எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கிறார் என்கிற நம்பிக்கை உள்ளது. இதனால் இந்த மண்டபத்தை ‘ஆஞ்சநேயர் மண்டபம்’ என்றே அழைக்கின்றனர்.

வெடி வழிபாடு

இந்த ஆலயத்தின் சிறப்பு வழிபாடுகளில் ஒன்று, வெடி வழிபாடு. சாஸ்தா சன்னிதிக்கு அருகில் குழாய் ஒன்றில் வெடி மருந்திட்டு, அதை வெடிக்கச் செய்து வழிபடுகின்றனர். ஒரு வெடியில் இருந்து ஆயிரம் வெடி வரை, அவரவர் வேண்டுதலுக்கேற்ப வெடிக்கச் செய்யப்படுகிறது. வெடிகளின் எண்ணிக்கைக்கேற்ப கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.  

இந்த வெடி வழிபாடு முக்கியத்துவம் பெறுவதற்கு அனுமன்தான் காரணம் என்கின்றனர். ராமனின் கட்டளைப்படி, சீதாதேவியைச் தேடிச் சென்ற அனுமன், இலங்கையில் ராவணனிடம் சிறைப்பட்டிருக்கும் நிலையைக் கண்டு வந்து, ராமனிடம், ‘கண்டேன் சீதையை’ என்ற இன்பச் செய்தியை அதிர்வெடியைப் போட்டுச் சொன்னது போல் சொல்லி மகிழ்ச்சியை ஏற்படுத்தினாராம். அதன்படி, அந்த மகிழ்ச்சியைத் தாமும் பெற வேண்டும் என்பதற்காக, பக்தர்களும் அதிர் வெடி போட்டு தங்கள் வேண்டுதலை இறைவனிடம் சொல்கின்றனர். வெடி வழிபாடு செய்பவர்களின் வேண்டுதலைக் கேட்கும் இறைவன், அவர்கள் வேண்டுதலை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு, அதை விரைவில் நிறைவேற்றிக் கொடுப்பார் என்பது பக்தர் களின் நம்பிக்கை.

மேலும் செய்திகள்