‘‘பெற்றோரைப் பேணுவோம்’’

இறைவனுக்கு அடுத்தபடியாக நாம் அதிகம் கடமைப்பட்டிருப்பது நமது பெற்றோர்களுக்குத்தான்.

Update: 2017-09-15 00:30 GMT
றைவனுக்கு அடுத்தபடியாக நாம் அதிகம் கடமைப்பட்டிருப்பது நமது பெற்றோர்களுக்குத்தான். நமக்கு பெயரும், முகவரியும் கொடுத்து, நம்மை இந்த அளவுக்கு வளர்த்தெடுத்தது நமது பெற்றோர்களே.

இறைவன் தமக்கு அடுத்த அந்தஸ்தில் பெற்றோரை நிறுத்தி, அவர்களுக்கு உபகாரம் செய்வதை, பணிவிடை செய்வதை, பணிந்து நடப்பதை கடமையாக ஆக்கியுள்ளான். இது குறித்து இறைவன் பின்வருமாறு கூறுகிறான்:

‘‘என்னைத் தவிர யாரையும் வணங்காதீர்கள், பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள், என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால், அவ்விருவரை நோக்கி ‘சீ’ எனக் கூறாதீர். மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக. அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விரு வருக்காகவும் தாழ்த்துவீராக. ‘சிறுவனாக இருக்கும்போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா, இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக’ என்று கேட்பீராக’’ (திருக்குர்ஆன் 17: 23,24)

இப்னுமஸ்ஊத் (ரலி) அறிவிப்பதாவது:–

‘‘நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘செயலில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது’ என பதில் கூறினார்கள். ‘அதற்கு அடுத்தது எது?’ என்று கேட்டேன். ‘பெற்றோருக்கு நன்மை புரிவது’ என்றார்கள். ‘அதன்பிறகு எது?’ என்று கேட்டேன். ‘அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வது’ என பதில் கூறினார்கள்’’. (நூல்: முஸ்லிம், புகாரி)

அல்லாஹ்விற்கு ஆற்ற வேண்டிய கடமைகளுக்குப் பிறகு, பெற்றோருக்குச் செய்யவேண்டிய கடமைகள் மற்ற அனைத்து செயல்பாடுகளை விடவும் சாலச்சிறந்ததாக அமைந்துள்ளதை இதன் மூலம் அறியலாம்.

இறைவனுக்கு அடுத்தபடியாக உலகில் தாய்க்கு நிகர் வேறு எவரும் இல்லை. பிள்ளைகள் அதிகம் பணிவிடை செய்வதற்கும், அதிக நேரம் உறவாடி மகிழ்வதற்கும் தகுதியான நபர் தாயே. இது குறித்து நபி (ஸல்) அவர்களின் கருத்தை கேட்கலாம்.

‘‘ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே, மக்களில் நான் அதிகம் அழகிய தோழமை கொள்வதற்கு தகுதியானவர் யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘உமது தாய்’ என பதில் கூறினார்கள். ‘பிறகு யார்?’ என அவர் கேட்க.... ‘உமது தாய்’ என நபி (ஸல்) கூற... மூன்றாவது தடவையாக ‘பிறகு யார்?’ என அவர் கேட்கவும் நபியவர்கள் ‘உமது தாய்’ என கூறினார்கள். நான்காவது தடவையாக ‘பிறகு யார்?’ என அவர் கேட்டபோது ‘உமது தந்தை’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்)

இங்கு நபி (ஸல்) அவர்கள் முதல் மூன்று நிலைகளையும் தாய்க்கு வழங்கிய பிறகுதான் நான்காவது அந்தஸ்தை தந்தைக்கு வழங்கியிருப்பது சிந்திக்கத்தக்கது.

‘‘ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், ‘நான் இறையருளைப் பெற ஆசைப்பட்டு நாடு துறந்து (ஹிஜ்ரத்) செல்வதையும், அறப்போர் புரிவதையும் தங்களிடம் உறுதிமொழி கொடுக்கிறேன்’ என்று கூறினார். இதை கேட்ட நபியவர்கள் ‘உனது பெற்றோரில் ஒருவரேனும் உயிருடன் இருக்கிறார்களா?’ என்று கேட்டார்கள். ‘ஆம் இருவருமே உயிருடன் உள்ளார்கள்’ என்று அவர் கூறினார்.  ‘அப்படியானால் இறையருளை நீர் தேடவேண்டுமா?’ என நபி (ஸல்) அவர்கள் திரும்பவும் கேட்டார்கள். அப்போது, அவர் ‘ஆம்’ என்று பதில் கூறினார். அப்படியானால் ‘நீர் உமது பெற்றோரிடம் திரும்பிச் சென்று, அவ்விருவரிடமும் அழகான முறையில் தோழமையுடன் நடந்து கொள்வீராக’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’’. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்)

பெற்றோருக்கு பணிவிடை செய்வது போர்க்களம் சென்று போர் புரிவதற்கு நிகரான நன்மை பயக்கும் காரியமாகும். ஆதலால்தான் பெற்றோர்களை அன்புடன் கவனிக்கும்படி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘பெற்றோர் சுவன வாசல்களின் மத்திய பகுதி உடையவர்கள். நீ நாடினால் அதை வீணடித்துக் கொள், அல்லது அதை பாதுகாத்துக்கொள்’ என்பது நபி மொழியாகும். (அறிவிப்பாளர்: அபூதர்தா (ரலி) நூல்: இப்னுமாஜா)

சொர்க்கத்திற்கு பல வாசல்கள் உண்டு. அதில் சிறந்தது அதன் மத்திய பகுதிதான். அந்த பகுதியை அடைவதற்கு ஒரே வழி பெற்றோரைப் பேணுவதுதான். பெற்றோருக்குச் செய்ய வேண்டிய உரிமைகளையும், கடமைகளையும், பணி விடைகளையும் ஒழுங்காக குழந்தைகள் நிறைவேற்றினால், நிச்சயம் அவர்கள் சொர்க்கத்தின் சிறந்த மையப் பகுதியை அடைவார்கள். இதில் குறை வைப்பவர்கள் சொர்க்கத்தில் நுழைய முடியாது என்பதையும் இஸ்லாம் எச்சரிக்கை செய்கிறது.

கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றி நடப்பதன் மூலம், ஒருவர் தனது பெற்றோரைப் பேணி நடக்கமுடியும்.

பெற்றோர்களை மதித்து நடப்பது. அவர்களை அவர்களுக்கு தகுதியான ஆசனத்தில் அமரவைப்பது. அவர்களுக்கு பணிவிடை செய்வது. அவர்களுக்கு தகுதியில்லாததைக் கொண்டு பரிகாசம் செய்வதை தவிர்ப்பது. அவர்களுக்கு எரிச்சலூட்டும் விதங்களில் நடந்து கொள்ளாமல் இருப்பது.

பெற்றோர்கள் சபைக்கு வரும்போது, நாம் நமது இடத்திலிருந்து எழுந்து, மகிழ்ச்சியோடு அவர்களை வரவேற்பது. நடந்து செல்லும் போது அவர்களுக்கு முன்னே செல்லாமல் இருப்பது. அவர்களை விட உயர்ந்த இடத்தில் அமரக்கூடாது. அவர் களுக்கு முன்னால் கால் நீட்டவும் கூடாது, காலுக்கு மேல் கால் போடவும் கூடாது. அவர்களின் அனுமதியின்றி சபையில் தூங்குவதோ, படுப்பதோ கூடாது.

பெற்றோர்களை நோக்கி கை நீட்டி பேசக்கூடாது. அவர்களை முறைத்துப் பார்க்கக் கூடாது. அவர்களின் அனுமதியின்றி சபையிலிருந்து வெளியேறக் கூடாது. அவர்களின் பேச்சை புத்திக் கூர்மையுடன், செவி தாழ்த்தி, மன ஓர்மையுடன் கேட்கவேண்டும். அவர்களின் அனுமதியின்றி பேச்சை தொடங்கக்கூடாது.

பெற்றோர்களிடம் தேவையில்லாமல் அதிக கேள்வி கேட்கக் கூடாது. அவர் களின் கைகளை முத்தமிட வேண்டும். அவர்களுடன் பேசும் போது பணிவுடன் பேச வேண்டும். பேசும்போது பேச்சை முறித்து, முதுகை திருப்பக்கூடாது. பாவமான காரியங்களை தவிர்த்து மற்ற வி‌ஷயங்களில் அவர்களை பின்பற்ற வேண்டும்.

வாழ்வின் அனைத்து நிலைகளிலும் பெற்றோர்களின் ஆலோசனை பெற வேண்டும். அவர்கள் கூறும் ஆலோசனையை மனமுவந்து ஏற்க வேண்டும்.

இவ்வாறு பெற்றோருக்குச் செய்ய வேண்டிய மரியாதைகளையும், உரிமை களையும் நிறைவேற்றி வந்தால், அவர்களின் எதிர்காலம் நல்லவிதமாக அமைவதுடன், அவர்களின் இவ்வுலக வாழ்வும் சிறக்கும், மறுவுலக வாழ்வும் சிறக்கும். இரு உலக நற்பேறுகள் கிடைத்திட ஈடில்லாத ஒரே வழி பெற்றோரைப் பேணுவது மட்டுமே.

பெற்றோரைப் பேணுவோம், நற்பேறுகளை பெறுவோம்.

மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுன்.

மேலும் செய்திகள்