நவராத்திரி விழா: திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலில் அம்பாள் ஏகாந்த காட்சி

திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோவிலில் நவராத்திரி விழாவின் 2-ம் நாளான நேற்று அம்பாள் ஏகாந்த காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Update: 2017-09-22 23:00 GMT
ஸ்ரீரங்கம்,

பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்தாண்டு நவராத்திரி விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த விழா வருகிற 30-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.

நவராத்திரி விழாவின் முதல் நாளான நேற்று முன்தினம் மாலை அம்பாள் ஏகாந்த அலங்காரத்தில் 2-ம் பிரகாரத்தில் வலம் வந்து, கண்ணாடிசேவை கண்டருளி, கொலுமண்டபத்தில் எழுந்தருளினார்.

2-ம் நாளான நேற்று மாலை அம்பாள் சன்னிதானத்தில் இருந்து உற்சவர் அகிலாண்டேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி முதல் மற்றும் 2-ம் பிரகாரத்தில் வலம் வந்தார். இதில் அம்பாளை பல்லக்கில் சுமந்து வருபவர்கள், முன்னும் பின்னுமாக நடந்து அம்பாள் அசைந்து வருவது போல் காட்சியளிக்க செய்வது வையாளி எனப்படும். அதன்படி கொலு மண்டபத்தில் அம்பாள் வையாளி கண்டருளினார்.

பின்னர் பக்தர்களுக்கு ஏகாந்த காட்சி அளித்தார். இரவில் மகாதீபாராதனை நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து அம்பாள் புறப்பட்டு, சன்னிதானம் சென்றடைந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 3-ம் நாளான இன்றும்(சனிக்கிழமை) அம்மன் ஏகாந்த காட்சியில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

4-ம் நாளான நாளை(ஞாயிற்றுக்கிழமை) ராஜ அலங்காரத்திலும், 25-ந் தேதி தாம்பூலம் தரித்தல் அலங்காரத்திலும், 26-ந் தேதி ஜெபம் வழிபாடு அலங்காரத்திலும், 27-ந் தேதி சரஸ்வதி அலங்காரத்திலும், 28-ந் தேதி சிவலிங்கம் வழிபாடு அலங்காரத்திலும், 29-ந் தேதி மகிஷாசூரன் வதை அலங்காரத்திலும், 30-ந் தேதி குதிரை வாகனம் மற்றும் பல்லக்கிலும் அம்மன் எழுந்தருளி 4-ம் பிரகாரம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவையொட்டி நவராத்திரி மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மேலும் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கொலுவை பக்தர்கள் கண்டு களித்து செல்கின்றனர்.

மேலும் செய்திகள்