தட்சிணாமூர்த்தியாக வீற்றிருக்கும் ஈசன்

இந்த கோவில் நவக்கிரகத்தில் குருபகவான் ஆட்சி பெற்று ஏழாவது இடத்தை பெறுகிறது. குருபகவானின் அருள்பெற நாம் வழிபட வேண்டிய திருத்தலம் முறப்பநாடு ஆகும்.

Update: 2017-10-05 22:30 GMT
திருநெல்வேலி–தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நவ கயிலாயங்களில், ஐந்தாவது இடத்தை பெறுவது முறப்பநாடு. இந்த கோவில் நவக்கிரகத்தில் குருபகவான் ஆட்சி பெற்று ஏழாவது இடத்தை பெறுகிறது. குருபகவானின் அருள்பெற நாம் வழிபட வேண்டிய திருத்தலம் முறப்பநாடு ஆகும்.

திருநெல்வேலியில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ள ஊர் முறப்ப நாடு. இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து இறங்கி அங்கிருந்து நடந்து செல்லும் தூரத்தில் நவ கயிலாயத்தின் ‘வியாழ பகவானாய்’ வீற்றிருக்கும் அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த வனப்புடன் பசுமை கொஞ்சும் எழில் கண்ணுக்கு விருந்தாக வாழைத்தோட்டங்களும், வயல்வெளிகளும் நிறைந்த இடத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.

நவ கயிலாயத்தில் எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பு இந்த ஆலயத்திற்கு உள்ளது. அது என்னவென்றால், சிவபெருமான், குருபகவானாக அமர்ந்து அருள்பாலிக்கும் சிறப்பு இந்த கோவிலுக்கு மட்டுமே உண்டு. புண்ணிய நதியாம் தாமிரபரணி ஆறு, காசியில் உள்ள கங்கையைப் போன்று வடக்கில் இருந்து தெற்கு நோக்கி செல்கிறது. இதனால் இந்த இடத்திற்கு ‘தட்சிண கங்கை’ என்று பெயர். இங்கு நீராடுவது காசியில் நீராடுவதற்கு சமம் என்று கூறுவார்கள். 

அது மட்டுமல்லாது புராண சிறப்பு பெற்ற தசாவதார தீர்த்தக்கட்டம் இங்கு உள்ளது. அதாவது ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்கள் இந்தக் கோவிலில் உள்ளது. இது இந்தியாவிலேயே மிக சிறப்பு மிக்க இடமாகும். பருக்கை கற்கள் நிரம்பிய மேட்டு நிலத்தை ‘முரம்பு’ என்று கூறுவார்கள். முரம்பு உடைய நிலத்தை கொண்டதனால் இந்த ஊர் முறப்பநாடு என்று பெயர் பெற்றதாக பெயர்க்காரணம் கூறப்படுகிறது. 

முருகப்பெருமானால் வதம் செய்யப்பட்ட சூரபதுமனின் வழியில் வந்த அசுரன் ஒருவன், இந்தப் பகுதியில் வசித்து வந்த முனிவர்களுக்கு கடுமையான தொல்லைகளைக் கொடுத்து வந்தான். அந்த துன்பத்தைப் பொறுக்க முடியாத முனிவர்கள் அனைவரும் கயிலாயத்தில் வசித்து வரும் ஈசனிடம் முறைப்படி முறையிட்டனர். சிவபெருமான், உள்ளம் உருகி முனிவர்களுக்கு அருள்பாலித்தார். ஈசனை முறைப்படி முறையிட்ட காரணத்தால் இத்தலம் ‘முறைப்படு நாடு’ என்று பெயர் பெற்றது. அதுவே பின்னாளில் மருவி ‘முறப்பநாடு’ என்றானது.

இங்குள்ள கோவிலானது தாமிர பரணி ஆற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ளது. இங்கு சுவாமி கயிலாசநாதராகவும், அம்பாள் சிவகாமியாகவும் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். கோவிலின் தென்கிழக்கில் சூரிய பகவானும், வடக்கு நோக்கி அதிகார நந்தியும் அமைந்துள்ளனர். கோவில் வெளிச்சுற்றில் சுரதேவர் மற்றும் அஷ்டலட்சுமி களும், 63 நாயன்மார்களும் வீற்றிருக்கின்றனர். 

கருவறை சுவர் அருகே பஞ்சலிங்கமும், தென்மேற்கு மூலையில் கன்னி விநாயகரும் உள்ளனர். வடமேற்கில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி–தெய்வானையோடு காட்சியளிக்கிறார். பிரகாரத்தில் சனீஸ்வரர், சண்டேஸ்வரர் மற்றும் காலபைரவர் சிலை உள்ளது. கயிலாசநாதர் கருவறையின் மேல் விமானம் உள்ளது. இக்கோவிலானது நான்கு மண்டபங்களை கொண்டு உள்ளது. முதலில் உள்ள பந்தல் மண்டபத்தில் பத்து தூண்கள் உள்ளது. பின்னர் ஊஞ்சல் மண்டபம், மணி மண்டபம் என்ற அமைப்புகளை கொண்டுள்ளது.   

சோழ மன்னன் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்தது. குதிரை முகத்தோடு பிறந்த பெண்ணின் நிலையை கண்டு கவலை கொண்டான் மன்னன். தனது மகளுக்கு அமைந்துள்ள குதிரை முகம் மாற வேண்டி பல்வேறு திருக்கோவில்களுக்கு சென்று சிவபெருமானை வணங்கி தவம் இருந்தான். 

சிவபெருமான் அந்த மன்னன் முன்பு தோன்றி, முறப்பநாடு செல். அங்குள்ள தாமிரபரணி நதிக்கரையில் நீராடு என்று ஆசி வழங்கினார். சிவபெருமானின் திருவுளப்படி அந்த மன்னன் தனது மகளோடு இங்கு வந்து தட்சிண கங்கை தீர்த்த கட்டத்தில் நீராடினான். என்ன ஆச்சரியம்! அந்த மன்னனின் மகள் குதிரை முகம் நீங்கி மனித முகம் கொண்டு மிகவும் அழகாக தோன்றினாள். மன்னன் மகளின் குதிரை முகத்தை இந்த கோவிலில் உள்ள நந்தி ஏற்றுக்கொண்டது. மன்னன் மகளின் குதிரை முகத்தை தான் ஏற்றுக்கொண்டதால் இங்குள்ள நந்தி குதிரை முகத்துடன் காட்சியளிப்பதை காணலாம். உடனே மன்னன் மனம் மகிழ்ந்து சிவபெருமானுக்கு கோவில் கட்டியதாக வரலாறு தெரிவிக்கிறது.

பதினோராம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசு சிறப்புற்று இருந்த காலம். அப்போது பேரரசர் கிருஷ்ண தேவராயருக்கு பின் அச்சுத தேவராயர் ஆட்சியில், ராமராயன் என்ற சிற்றரசர் இருந்து வந்தார். அவருடைய தம்பி விட்டலராயன், தமிழக பிரதிநிதியாக ஆட்சி புரிந்தார். தன்னை எதிர்த்த சிற்றரசர்களை வென்று தெற்கு நோக்கி தனது படைகளுடன் வந்தார். பேரரசருக்கு கப்பம் கட்ட மறுத்த திருவாங்கூர் மகாராஜா மீது படையெடுக்க விட்டலாயப் பேரரசர் முறப்பநாட்டில் முகாமிட்டு இருந்தார். அவர் ஒரு வைணவராக இருந்தாலும் கூட, ஸ்ரீகயிலாசநாதர் கோவிலுக்கு வந்து வழிபட்டார் என கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கிறது. 

இத்திருத்தலத்தில் சிவபெருமானே தட்சிணாமூர்த்தியாக, குருவாக, தென்முக கடவுளாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். நவகைலாயங்களில் முறப்பநாடு நடு கைலாயமாகும். இது குரு(வியாழன்) தலமாகும். பிருகண்ட முனிவர் பாதம் பட்ட இடமும், காஞ்சனமாலை மோட்சம் பெற்றதும், மார்க்கண்டேயன் பூஜை செய்ததும் இவ்விடமே ஆகும். 

இங்கு பைரவர் சன்னிதியில் இரண்டு பைரவர்கள் இருக்கின்றனர். வழக்கம்போல் நாயுடன் காட்சி தரும் பைரவர் கால பைரவர் என்றும், வாகனம் இன்றி காட்சி தரும் மற்றொரு பைரவர் வீரபைரவர் என்றும் அழைக் கின்றனர். இங்குள்ள கயிலாசநாதர் குரு அம்சமாக இருப்பதால் சுவாமிக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி, கொண்டைக்கடலை நைவேத்தியம் செய்யப்படுகிறது. 

சிவராத்திரி, குருப்பெயர்ச்சி, திருக்கார்த்திகை, ஆடி அமாவாசை, தை அமாவாசை போன்ற திருவிழாக் கள் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. தினசரி இக்கோவிலில் நான்கு கால பூஜைகள் நடைபெறுகிறது. காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் நடை திறந்து இருக்கும். 

இத்தலத்து இறைவனை வழிபட்டால் திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள குருபகவானை(சிவபெருமானை) வழிபட்டதற்கு சமம் ஆகும். இங்குள்ள இறைவனையும், அம்பாளையும் வழிபட்டால் திருமண தடை நீங்கும், நல்ல குடும்பம் அமையும், உடல் ஆரோக்கியம் கிட்டும் என்பது பக் தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

திருநெல்வேலியில் இருந்தும், தூத்துக்குடியில் இருந்தும் பஸ் வசதி உள்ளது. திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் அனைத்து பஸ்களும் முறப்பநாட்டில் நின்று செல்லும். 

–நெல்லை வேலவன்.

மேலும் செய்திகள்