அய்யா வைகுண்டர் அருளிய வாழ்க்கைக்கான அருளுரை

உலகில் எப்போதெல்லாம் தர்மம் குன்றி அதர்மம் ஆட்சி புரிகிறதோ, அப்போதெல்லாம் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட இறைவன் அவதரிக்கிறார்.

Update: 2017-10-10 03:00 GMT
லகில் எப்போதெல்லாம் தர்மம் குன்றி அதர்மம் ஆட்சி புரிகிறதோ, அப்போதெல்லாம் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட இறைவன் அவதரிக்கிறார். அப்படி அவதரித்தவரே அய்யா வைகுண்டர். அய்யா என்றதுமே மகானோ, மனிதச் சாமியாரோ என்று மக்கள் எண்ணுவது இயல்பு. சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த அடியார்கள் இறைவனை வணங்கும் போது, அம்மையேஅப்பா என்றும், அம்மை நீ அப்பன் நீ என்றும், மெய்யா, விமலா, விடைப்பாகா வேதங்கள் அய்யா என ஓதும் ஆழ்ந்தகன்ற நுண்ணியனே என்றும் பாடிப் பரவசம் அடைந்துள்ளனர். அதைப் போலவே அய்யா வைகுண்டரின் அருள் பிரதாபங்களை அனுபவித்து உணர்ந்த எல்லா மக்களும், வைகுண்டரை ‘அய்யா’ என்று வணங்கி மகிழ்ந்தனர்; மகிழ்கின்றனர்.

பொய்யையும், புரட்டையும், போலித் தனத்தையும், நயவஞ்சமான வெளி வேசத்தையும் மூலதனமாகக் கொண்ட உருவமே இல்லாத ஒரு வித மாயைதான் கலி. அது உலக மக்களின் சிந்தையில் எல்லாம் ஊடுருவி உறைந்திருக்கும் ஒரு கபடமான மாயை. உண்மையத்தான் பேச வேண்டும் என்று உறுதியாக இருந்தாலும், பொய் பேசத் தூண்டும் அந்த மாய சக்தியை, இதற்கு முன் நிகழ்ந்து நிறைவேறிய யுகங்களில் எல்லாம் ஆதிக்கம் செலுத்திய அரக்கர்களை, அவர்களுக்கு நிகரான பலத்தில், இறைவனே அவதரித்து தம் ஆயுதங்களால் அழித்ததைப் போல் அழித்து ஒழிக்க முடியாது. காரணம். அந்த அரக்கர்களுக்கு உடல் இருந்தது. கலியாகிய மாய்மாலத்திற்கு உடல் இல்லை. அரக்கர்களை அன்று அழித்தது போல் அழிக்க முற்பட்டால், அனைத்து மக்களையும் அழிக்க நேரிடும். ஏனெனில் எல்லாருடைய மனதிலும் கலியாகிய மாய்மாலம் ஆட்சிபுரிகிறது.

ஆகவேதான் எல்லா மக்களின் மனங்களிலும், அன்பை விதைத்து பொறுமையை வளர்த்து, தர்மம் என்ற ஆயுதத்தால் மக்களின் மனதில் மண்டிக்கிடக்கும் மாயையை, மாய்ப்பதற்காக மும்மூர்த்திகளும் ஒரு மூர்த்தியாகி, திருச்செந்தூர் கடலுக்குள்ளிருந்து எழுந்தருளினார். அவரே அய்யா வைகுண்டர். குமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பு திருத்தலத்தில் அமர்ந்திருந்து நாட்டு மக்களையெல்லாம், தன்னருளால், தம்மருகில் வரவழைத்து அந்த மக்களின் மனதைக் கெடுத்துக் கொண்டிருக்கும் வலிமையான நினைவு மாய்மாலத்தைக் கழுவிக் களைந்து மாயைகளில் இருந்து கரையேறுவதற்கான உபதேசங்களை அருளினார்.

உலகமும், உலக வாழ்க்கையும் நிலையில்லாத ஒரு மாயத்தோற்றம். அதை நிஜமானது, நிலையானது என்றெண்ணி நேசம் கொள்ளாதீர்கள். இறைவனும், உண்மையுமே என்றென்றும் நிலையானது. உங்களைப் படைத்தவன் இறைவன். எனவே படைத்தவன் நம்மைப் பாழாக்க மாட்டான் என்பதை உறுதியாக நம்புங்கள். உண்மை சில சமயம் ஊமையாகுமே தவிர, ஒரு போதும் உருக்குலையாது, தடம்புரளாது. ஆகவே எந்த நிலையிலும் எதற்காகவும் பொய் சொல்லாதீர்கள். கேலிக்காக பொய் சொன்னாலும் உங்கள் உள்ளம் அழுக்காகும். அதனால் வாழ்க்கை இழுக்காகும்.

இல்லறம் என்பது ஓர் உயர்ந்த தவம். அதை இல்லற இயல்புகளோடும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற உணர்வோடும் விட்டுக்கொடுத்து, நெறி பிசகாமல் நெருக்கமாக வாழுங்கள். வரையறுக்கப்பட்ட வாழ்வியல் தர்மமே நிரந்தரமானது. நெறிகெட்ட நீசர்களிடம் உங்கள் வீரத்தைக் காட்டாதீர்கள். விவேகத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். விவேகமே சகிப்புத்தன்மைக்கும், சான்றாண்மைக்கும் வித்திடுவதாகும். எவரோடும் பிணக்கம் வேண்டாம். எல்லாரிடமும் இணக்கமாக இருங்கள். செல்வந்தர்களாயினும் ஏழைபோல் வாழுங்கள். எதற்கும் பொறுமையைக் கையாளுங்கள். அதனால் மனம் உறுதியாவதோடு, மகத்தான பெருமையையும் பெறுவீர்கள்.

எளியோருக்காக இரங்குங்கள். வலியோருக்காக மகிழாதீர்கள். உங்களைவிட ஏழையாக இருப்போருக்கு உதவுவதே உயர்ந்த தர்மமாகும். எல்லாருடைய மனதிலும் படிந்திருக்கும் மாயைகளை பணத்தால் கரைத்து விட முடியாது. தர்மத்தால் மட்டுமே கரைக்க முடியும். ஒவ்வொருவரும் தர்ம நினைவுகளோடு வாழ்ந்தால் தர்மம் கொடுப்பதற்கு ஆளுண்டு, அதை வாங்குவதற்கு ஆளில்லை என்ற நிலை உருவாகும்.

சாதித் துவேசங்கள் எல்லாம் தன்னால் அழிந்து, மனிதருள் சாதிபேதமே இல்லை என்ற சமநிலை உருவாகும் காலம் அருகிலேயே உள்ளது. ஆகவே நான் பெரிது.. நீ சிறிது என்று வம்புரைத்து மாளாமல் வான் பெரிது என்று வாழ்ந்திருங்கள். திருப்பணிகளுக்காகவோ, தர்மங்களுக்காகவோ மக்கள் மனமுவந்து தரும் பணத்தை காலம் தாழ்த்தாமல் அது அதற்கே பயன்படுத்துங்கள்.

இந்த அறநெறிகளை மனதில் கொள்ளாமல், இது மனித போதனைதானே என்று மதத்துடன் இருக்காதீர்கள். நல்ல நூல்களைக் கற்றுத் தெரிந்து, அந்த நூல் வழி வாழுங்கள். அப்படிக் கல்லாதார் வாழ்க்கை இனிமேல் கசந்து போகும் இந்தச் சத்திய வாக்குகளை மதிக்காமல் மத்திபமான செயல்களில் இன்னும் ஈடுபட்டீர்களேயானால் உங்கள் மனசாட்சியாக உங்களுக்குள் இருந்து கொண்டிருக்கும் இறைவனின் கோபத்திற்கு ஆட்படுவீர்கள். இது உண்மைதான் என்று கடைப்பிடிப்போர் தர்மபூமியில் வாழ்வார்கள்.

இவையாவும் பரலோக வார்த்தையல்லால் பூலோக வார்த்தை இல்லை என்றெல்லாம் பகுத்தறிவைப் பெற்றுள்ள மனிதகுலம் மாய நினைவுகளில் இருந்து விடுபட்டு மேம்படுவதற்காக மனத்திறன் போதித்த அந்த மாயாதி சூட்சன் எழுதிய எழுத்துகளுக்குள், எழுதப்படாத எண்ணறிய கருத்துப் புதையல்களைத் தன்னகத்தே வைத்துக் கொண்டிருக்கும் அகிலத்திரட்டு அம்மானை என்னும் ஆகமத்தையும், ஒட்டுமொத்த உலக நடப்புகளில் ஒன்றும் விடுபடாமல் உரைக்கும் அருள்நூல் என்ற அரிய பொக்கி‌ஷத்தையும் அருளியுள்ளார்.

இவ்விரு நூல்கள் கூறும் உபதேசங்களை எல்லாம் உலகுக்குச் சொல்லும் விதமாக தற்போது, அய்யா வைகுண்டர் வழிபாட்டு ஆலயங்கள் ஆறாயிரத்திற்கும் மேல் உள்ளன. சென்னையிலும், சென்னை புறநகர்களிலும் ஏறத்தாழ 26 ஆலயங்கள் இருக்கின்றன. அவற்றில் கோபுரமும், மண்டபங்களும், கொடிமரமும், தேரும் அமையப்பெற்ற ஆலயம் சென்னை மணலிப்புதுநகர், வைகுண்டபுரத்தில் அமைந்துள்ள தர்மபதியாகும். அய்யா ஆலயங்களிலேயே, சாமிதோப்பு தர்மபதியைப் போல நித்தமும் வாகன உலா, இங்கு இருக்கிறது. அதேபோல் எங்கும் இல்லாத வகையில் நித்திய அன்னதானமும் இங்கே உண்டு.

அய்யா வழிபாட்டு ஆலயங்களில் முதல் ராஜகோபுரம் கண்ட மணலிப்புதுநகர் வைகுண்டபுரம் தர்மபதியில் கடந்த 6–ந் தேதி கொடியேற்றத்துடன் திருஏடு வாசிப்புத் திருவிழா தொடங்கியது. 10 நாள் நடைபெறும் இந்த விழாவில் வருகிற 15–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டமும், இரவு பட்டாபிஷேக திரு ஏடு வாசிப்பும், பல்லக்கு வாகன பவனியும், திருக்கொடி அமர்தலும் விமரிசையாக நடைபெறும்.

–ஆ.மணிபாரதி.

ரூபா அரூவ வழிபாடு

ஆலயங்களில் கர்ப்பக்கிரகம் என்று சொல்லப்படும் மூலஸ்தானத்தை, அய்யா வழியில் பள்ளியறை என்று சொல்வார்கள். அதனுள் சிலைகள் கிடையாது. காவி வஸ்திரத்தலான ரூபா அரூவ வடிவம் அமைத்து, ருத்ராட்சம், துளசி மாலைகள், மலர் மாலை சூட்டப்பட்டிருக்கும். அதை மூலவர் என்றும், பள்ளியறை எழுந்தருளல் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. அதன் பின் பாகத்தில் ஒரு நிலைக்கண்ணாடி வைக்கப்பட்டிருக்கும். அது ஏனெனில் கண்ணாடி சுத்தமாக இருந்தால், அதன் எதிரில் உள்ளதெல்லாம் அதில் தெரிவது போல, நம்முடைய மனதைச் சுத்தமாக வைத்திருந்தால், அதில் இறைவன் வாசம் செய்வதோடு, உலக இயல்புகளை எல்லாம் உணர்வதற்கான ஞானத்தையும் பெறலாம் என்ற தத்துவ அடிப்படையிலாகும்.

இறைவன் உருவமில்லாதவன் என்பதால், அரூவமான இறைவனை, அரூவமாகவே வழிபட வேண்டும் என்பதே அய்யா வழி கோட்பாடாகும். ஆனால் மக்கள் இவ்வழிபாட்டில் ஆரம்ப நிலையில் இருப்பதால், தற்போது ரூபா அரூவ வழிபாடு நடைபெற்று வருகிறது. வாகனங்களில் பவனி வரும் உற்சவரும், வஸ்திரங்களாலும், மலர் மாலைகளாலும் அலங்கரிப்பட்ட ரூபா அரூவ வடிவமாகவே அய்யா வைகுண்டர் எழுந்தருள்கிறார்.

உகப்படிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமையப்பெற்ற வாகைப் பதியில் துவையல் தவமிருந்த மக்களுக்கு, அய்யா ஞான போதகமாக அருளியதே ‘உகப்படிப்பு’. அது ஒரு வரி, இரு வரி, மூவரி பாடல்களாக மொத்தம் ஏழு பாடல்கள் கொண்டது. அதில் ஆறு பாடல்களை பதினொரு முறை வீதம் பாடியபின் ஏழாவது பாடலை ஒரு முறை மட்டும் வசன கவியாக சொல்லி நிறைவு செய்ய வேண்டும். பதினொரு முறை வீதம் பாடுவதற்கான காரணம் யாதெனில், உடல், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஞானேந்திரியங்கள் ஐந்திற்கும், பாலுறுப்பு, கை, கால், மலவாயில், சொல் ஆகிய கர்மேந்திரங்கள் ஐந்திற்கும் மனதிற்கும் சேர்த்து மொத்தம் ஒவ்வொரு பாடலையும், பதினொரு முறை வீதம் புறச் சிந்தனைகளுக்கு இடம் தராமல் பாடினால், பாடியவர்களின் முயற்சிக்கும், மகிழ்ச்சிக்கும், அவர்தம் ஞான தாகம் நிறைவேறுவதற்கும், முக்திக்கும், இந்த யுக முடிவுக்கும், தம் ஞானேந்திரியம், கர்மேந்திரியம், மனம் ஆகியவற்றின் நலத்திற்கும் வலுசேர்க்கும் என்பது அய்யாவின் அருளுரையாகும். இந்த உகப்படிப்பை எப்போதெல்லாம் இறைவழிபாடு செய்கிறோமோ, அப்போதெல்லாம் பாடலாம். கூட்டு வழிபாடு என்றால், ஒருவர் பாடியபின் மற்றவர்களெல்லாம் சேர்ந்து பாட வேண்டும்.

உச்சிப்படிப்பு

வாகை பதியில் துவையல் தவமிருந்த மக்களுக்கு, அய்யா ஞானபோதகமாக அருளிய மற்றொன்று இந்த உச்சிப்படிப்பு. இது முப்பத்து ஐந்து ஒற்றை வரிகளையும், பதிமூன்று தவ வார்த்தல் வாக்கியங்களையும் கொண்ட பாடலாகும். இதை வரிசையாக தினமும் மதியம் 12 மணிக்கு ஒரு முறை நின்ற படியே பாடி வழிபடலாம். வாரத்தில் ஒரு நாள் மட்டும் பாடுவதானால், ஒரு முறை நின்று கொண்டும், ஆறுமுறை அமர்ந்து இருந்த நிலையிலும் பாட வேண்டும். இவ்வாறு உச்சிப்படிப்பை பாடி வழிபட்டு வந்தால், நம்மை அறியாமல் நாம் செய்த தவறுகளால் உண்டான தோ‌ஷங்கள் அன்றாடம் அகன்றுபோகும் என்பது அய்யாவின் அறிவுரையாகும்.

மேலும் செய்திகள்