கேட்ட வரங்கள் அருளும் ‘கந்தசஷ்டி’

விரத நாட்களில் அதிகாலையில் (பிரம்ம முகூர்த்தம்) கண்விழித்து, இயற்கைக் கடன்களை முடித்து, குளித்துவிட்டு தூய்மையான உடல் மற்றும் மனதுடன் திருநீறணிந்து முருக பக்தரான தேவராய சுவாமிகள் இயற்றிய கந்த சஷ்டிக் கவசம் பாடி முருகனை இருகரம் கூப்பித் தொழுது, ஆரத்தி நைவேத்தியம் படைத்துப் பிரார்த்திக்க வேண்டும்.

Update: 2017-10-24 03:30 GMT
விரத நாட்களில் அதிகாலையில் (பிரம்ம முகூர்த்தம்) கண்விழித்து, இயற்கைக் கடன்களை முடித்து, குளித்துவிட்டு தூய்மையான உடல் மற்றும் மனதுடன் திருநீறணிந்து முருக பக்தரான தேவராய சுவாமிகள் இயற்றிய கந்த சஷ்டிக் கவசம் பாடி முருகனை இருகரம் கூப்பித் தொழுது, ஆரத்தி நைவேத்தியம் படைத்துப் பிரார்த்திக்க வேண்டும்.

தொடர்ந்து ஆறுநாட்கள் விரதமிருக்க முடியாதவர்கள், ஆறாம் நாளன்று மட்டுமாவது விரதமிருந்து கந்தனை வணங்கி அடியார்களுக்கு உணவளித்துப் பின் ஒரு நேரம் மட்டும் புசிப்பது நல்லது. நாள் முழுவதும் விரதமிருந்து மதியம் ஒருவேளை மட்டும் பச்சரிசி சாதத்துடன், தயிர் அல்லது வெல்லம் சேர்த்து உண்ணலாம். காலை மற்றும் இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம்.

ராட்சஸ குணங்களை தூண்டக்கூடிய மசாலப் பொருட்கள், வெங்காயம் போன்றவைகளை விரத நாட்களில் தவிர்த்து சாத்வீக குணத்தைத் தரக்கூடிய வகையில் உணவுகளை நாம் எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்துடன், ஆன்மிக வெற்றிக்கும் வழிவகுக்கும். வயோதிகர்கள், நோயாளிகள் ஆகியோர் அவரவர் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அதன்படி விரதங்களை கடைப்பிடிக்கலாம்.

விரதம் இருக்கும் ஆறுநாட்களும் முருகன் ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதுடன் வீட்டிலேயே கந்தசஷ்டிக் கவசம், திருப்புகழ், சண்முகக் கவசம், கந்த புராணம், சுப்ரமணிய பஞ்ச ரத்னம், கந்தர் அனுபூதி போன்ற முருகன் புகழ்பாடும் நூல்களை பாராயணம் செய்யலாம்.

எதுவும் இல்லையெனில் ‘‘முருகா சரணம் கந்தா சரணம், கதிர்வேலா சரணம்’’ என சரண கோ‌ஷங்களுடன் சிந்தை எங்கும் சிங்காரவேலனின் நினைவுகளைத் தாங்கி சுய ஒழுக்கத்துடன் இருக்கவேண்டும். அதோடு மனதிலுள்ள காமம், குரோதம், உலோபம், மதம், மாச்சர்யம், கோபம், மயக்கம், கஞ்சத்தனம், அவா, செருக்கு, பொறாமை ஆகிய தீயகுணங்களை விட்டொழித்து, தேவகுணங்களான நற்குணங்களைப் பெறும் நோக்கத்துடன் கடைப்பிடிக்கப்பட்டு வருவதே சஷ்டி விரதத்தின் நோக்கம்.  

கந்த புராணம் போன்றவைகளை வாசிக்கும் போது நம் சிந்தனை வழிபாட்டில் ஒன்றிவிடும். கந்தனை தவிர வேறு எதுவும் சிந்தனைக்கு வராது. மேலும் படைக்கும் பிரசாதங்களை மற்றவர்களுக்கும் பகிர்ந்தளித்து, முருகனின் பெருமைகளை அவர்களும் உணரும் விதம் செய்வது புண்ணியம் தரும்.

விரத நாட்களில் குன்று தோறும் உள்ள முருகன் கோவில்களுக்கு சென்று, மலையை சுற்றி முருக கோ‌ஷம் இட்டபடி கிரிவலம் வருவதும் சாலச்சிறந்தது.

ஆறுநாட்களும் முருகனை நினைத்து விரதமிருந்து, ஆறாம் நாளான சூரசம்ஹாரம் தினத்தன்று அதிகாலை எழுந்து நீராடி, தூய உடை உடுத்தி, நெற்றியில் விபூதி, சந்தனம் பூசி கொள்ளவேண்டும். பிறகு பூஜை அறையில் முருகப்பெருமானுக்குரிய ஆறுகோண கோலத்தை பச்சரிசி மாவினால் இட்டு ‘‘சரவணபவ’’ எனும் மந்திரம் எழுதி, மங்களத்தை நல்கும் ஐந்து முகவிளக்கேற்றி பூஜைக்கு தயார்படுத்தவேண்டும்.

வீட்டிலுள்ள முருகப்பெருமானின் படம் அல்லது விக்ரகத்திற்கு தேன், பால், பன்னீர் போன்றவற்றால் அபிஷேகம் செய்து, மஞ்சள், குங்குமத்தால் அலங்கரித்து, வாசனை மிகு வண்ண மலர்களை சூடியும், நறுமணம் கமழும் சாம்பிராணி ஊதுபத்தி ஏற்றியும், சர்க்கரைப் பொங்கலை நைவேத்தியம் செய்ய வேண்டும். அத்துடன் கந்தகுரு கவசம், சஷ்டிக் கவசம் போன்றவைகளுடன் சரண கோ‌ஷங்களை எழுப்பியும் இறுதியில் அசுரனான சூரனை அழித்து இன்பம் தந்த முருகப் பெருமானை நினைத்து, தூய பழங்களை வெற்றிலை பாக்குடன் சமர்ப்பித்து, தேங்காய் உடைத்து கற்பூர ஆரத்தியுடன் மனதாரம் கோரிக்கைகளை வேண்டி விரதத்தை நிறைவு செய்யவேண்டும்.

கந்த சஷ்டி விழாவானது முருகன் குடிகொண்டுள்ள அனைத்து இடங்களிலும் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அறுபடை வீடுகளான பழனி, திருச்செந்தூர், திருத்தனி, சுவாமிமலை, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை ஆகிய தலங்களில் மட்டுமின்றி இலங்கையின் கதிர்காமம், மலேசியாவின் பத்துமலை முருகன் போன்ற வெளிநாட்டு ஆலயங்களிலும் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

சூரபத்மனை சம்ஹாரம் செய்த திருச்செந்தூர் கடற் கரையில் வருடந்தோறும் நிகழும் சூரனை வதைக்கும் நிகழ்ச்சியை முருகா எனும் கோ‌ஷங்கள் முழுங்க லட்சக் கணக்கான முருக பக்தர்கள் கூடிக்கண்டுகளிக்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். ஆறுமுகமும், 12 கரங்களும் கொண்ட முருகனின் திருக்கோலத்தை சஷ்டி விழாவின் போது மட்டுமே திருச்செந்தூரில் முழுமையாக தரிசிப்பது நல்லது.

‘‘சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’’ என்னும் சொல்வழக்கில் திரிந்து போன பழமொழியின் உண்மையான பொருள் ‘‘சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும்’’ என்பதே. இவ்விரதத்தின் பலனாக குழந்தைப் பேறு பெற்றவர்கள் எண்ணற்றவர்கள். முழுமனதோடும் நம்பிக்கையோடும் விரதத்தை மேற்கொள்ளும் பக்தர்கள் கண்டிப்பாக முருகப்பெருமானின் அருள் கிடைக்கும் என்பது அநேக மக்கள் தங்கள் அனுபவங்களால் உணர்ந்த உண்மை. குழந்தைப்பேறு மட்டுமின்றி குடும்பப் பிரச்சினைகள் நீங்கவும், வேலை வாய்ப்புகள் பெறவும், கடன், பிணி போன்ற தொல்லைகள் அகலவும் கந்த சஷ்டிவிரதம் பெருமளவு துணை புரிகிறது.

அசுரனான சூரனை வதம் செய்த திருவிளையாடலே கந்த சஷ்டி விழா. சூரபத்மன் ‘நான்’ எனும் அகங்காரத்தாலும், அவனது தம்பிகளான தாரகாசூரன், சிங்கமுகன் ஆகியோர் மாயை மற்றும் கன்மத்தினாலும் வீழ்ந்தனர். இவர்களை கந்தனது ஞானவேல் வென்று உலகில் நீதியை நிலைநாட்டி மக்களை வீடுபேறடைய செய்த நிகழ்வே ‘கந்த சஷ்டி விரதம்’.  இதனை அனுசரிக்கும் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை நல்குவதே இந்த விரதத்தின் மகிமை.

–சேலம் சுபா.

மேலும் செய்திகள்