சந்திரனை பிறையாக சூடிய இறைவன்

சந்திரனை தலையில் சூடியபடி அருள் பாலிக்கும் சிவபெருமான் மூலவராய் கருணை பொழியும் இந்த ஆலயம் முசிறியில் உள்ளது.

Update: 2017-12-26 08:03 GMT
ரு முறை சந்திரன் விநாயகரிடம் சாபம் பெற்றார். சந்திரன் தனது சாபம் நீங்க முசிறியில் அருள்பாலிக்கும் சந்திர மவுலீஸ் வரரை ஆராதித்து, தனது சாபம் நீங்கப் பெற்றார். சந்திரனுக்கு சாப விமோசனம் தந்ததால் இத்தல இறைவன் ‘சந்திர மவுலீஸ்வரர்’ என அழைக்கப்படுகிறார். அத்துடன் மூன்றாம் பிறை சந்திரனை தனது தலையிலும் சூடியுள்ளார் இத்தல இறைவன்.

சந்திரனை தலையில் சூடியபடி அருள் பாலிக்கும் சிவபெருமான் மூலவராய் கருணை பொழியும் இந்த ஆலயம் முசிறியில் உள்ளது. இறைவனின் திருநாமம் சந்திர மவுலீஸ்வரர். இறைவியின் திருநாமம் கற்பூரவல்லி.

ஆலயம் கீழ் திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் நீண்ட நடைபாதை, அடுத்து வாத்திய மண்டபம், கொலு மண்டபம், உற்சவ மண்டபம் அடுத்து மகா மண்டபம் அமைந்துள்ளது. மகா மண்டபத்தில் ஒரு நீண்ட சுரங்க பாதை இருந்து, பின்னர் அதை அடைத்து விட்டதாகவும் அர்ச்சகர் கூறுகிறார். அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவாயிலில் துவார பாலகர்களின் சுதை வடிவ திருமேனிகள் அலங்கரிக்க, உள்ளே கருவறையில் இறைவன் சிவலிங்கத் திருமேனியில் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

ஆலய திருச்சுற்றில் நால்வர், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, விசுவநாதர், விசாலாட்சி ஆகியோர் திருமேனிகள் உள்ளன. தேவக் கோட்டத்தில் பிள்ளையார், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

வடக்குப் பிரகாரத்தில் இறைவியின் ஆலயம் தனியாக உள்ளது. அன்னை கற்பூரவல்லி நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் அருள்புரிகிறாள். அன்னை மேல் இரு கரங்களில் தாமரை மலரையும், கீழ் இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் கீழ் திசை நோக்கி காட்சி தருகிறாள்.

மிருகசீரிஷ நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஆலயம் இது. இந்த நட்சத்திரக்காரர்கள் பலன் பெறவும், பரிகாரம் பெறவும் அன்னையை வணங்க வேண்டிய முறை உள்ளது. தாமரைப் பூவில் அகல் வைத்து தீபமேற்றி ஆலயத்தை மூன்று முறை வலம் வர வேண்டும். பின், அந்த அகல் விளக்கை அன்னை சன்னிதியில் வைத்து வாசனை மலர்களால் அன்னையை அர்ச்சனை செய்து வணங்க, நல்ல பரிகாரம் பெற முடியும் என்கின்றனர் பக்தர்கள். பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

வைகாசி விசு, ஆனி திருமஞ்சனம், ஆடி பூரம், ஆவணி மூலம், சஷ்டி, கார்த்திகை தீபம், ஆருத்ரா, தை பூசம், மாசி மகம் போன்ற நாட்களில் இறைவனும் இறைவியும் வீதியுலா வருவதுண்டு.

ஐப்பசி பவுர்ணமியில் ஏராளமான பக்தர்கள் இறைவனுக்கு நடைபெறும் அன்னாபிஷேகத்தைக் காண இங்கே வருகை தருகின்றனர்.

800 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், தினமும் காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

இத்தல இறைவன் - இறைவியை ஆராதிப்பதால் கடன் நிவாரணம் பெறலாம் எனவும், புத்திர பாக்கியம் கிடைக்கும் எனவும், தொழிலில் அபிவிருத்தி அடையலாம் எனவும் பக்தர்கள் திடமாக நம்புகிறார்கள்.

திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ளது முசிறி என்ற இந்த தலம்.

-சி.செல்வி, திருச்சி. 

மேலும் செய்திகள்