தமிழ் வருடங்கள்

நவக்கிரகங்களில் குரு என்னும் வியாழன், ஒரு முறை வான வட்டத்தை முழுமையாகச் சுற்றி வர, பன்னிரண்டு வருடங்கள் ஆகின்றன. அதுவே சனி பகவானுக்கு 30 வருடங்கள் தேவைப்படுகிறது.

Update: 2018-02-13 08:58 GMT
இரண்டு கிரகங்களும் எப்போது அசுவதி நட்சத்திரத்தில் சந்திக்கின்றனவோ, அதுவே தமிழ் வருடப் பிறப்புகளில் முதலாவது வருடமான ‘பிரபவ’ வருடம் ஆகும். அதனைத் தொடர்ந்து 60 வருடங்கள் கணக்கிடப்படுகின்றன.

தமிழ்நாட்டில் சுவாமிமலை முருகப்பெருமான் கோவில் படிக்கட்டுகள், புதுக்கோட்டையில் உள்ள குமரமலை ஆலய படிக் கட்டுகள் மற்றும் விராலிமலை முருகன் கோவில் படிக்கட்டுகள் ஆகியவை, தமிழ் வருடங்கள் அறுபதை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

ஈசனின் வாகனம் எமன்

திருவாரூர் மாவட்டம் ஸ்ரீவாஞ்சியத்தில் மங்களாம்பிகை சமேத வாஞ்சிநாதர் கோவில் அமைந்திருக்கிறது. அங்கே சென்று வழிபட்டால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மகாவிஷ்ணு இத்தலம் வந்து வாஞ்சிநாதரை வழிபட்டுதான், கோபத்தில் பிரிந்திருந்த தன் மனைவி மகாலட்சுமியோடு இணைந்தார். இந்த ஆலயத்தில் சிவபெருமானின் வாகனமாக எமதர்மராஜா இருக்கிறார். எனவே இத்தல மூர்த்தியை வழிபட்டால், எம பயம் நீங்கும், ஆயுள் கூடும் என்கிறார்கள். இங்குள்ள குப்த கங்கையில் நீராடினால், 9 நதிகளில் 90 முறை ஸ்நானம் செய்த புண்ணியம் கிடைக்குமாம்.

நலம் தரும் வழிபாடு

அஸ்வத்தாமா, மகாபலி, வியாசர், அனுமன், விபீஷணன், கிருபர், பரசுராமர் ஆகிய 7 சிரஞ்சீவிகளையும், அருந்ததி, அனுசுயா, சாவித்ரி, ஜானகி, சதிதேவி என்ற தாட்சாயிணி ஆகிய 5 கற்புக்கரசிகளையும் காலையில் எழுந்ததும் வணங்கும் ஆண்கள், பெண்களுக்கு எல்லா வளமும் நலமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பதவி தரும் முருகன்

புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கை வாசல் என்ற இடத்தில் அருள்பாலிக்கும் முருகப்பெருமான், தலையில் தொப்பி அணிந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். அவரை செவ்வாய்க்கிழமை தோறும் தொடர்ச்சியாக 9 வாரங்கள் அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால், உயர் பதவிகள் கிடைக்கும் என்கிறார்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளில் அமர்வதற்கான வாய்ப்புகள் உருவாகுமாம்.

தீமை அகற்றும் திருநீறு

ஞானம் என்ற நெருப்பில் வினைகள் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின், எஞ்சி நிற்பது பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை விளக்கும் பொருளே வெண்ணீறு என்னும் திருநீறு ஆகும். அதாவது நம் உடலில், எண்ணத்தில் உள்ள துரு நீரை (தீய சக்திகள்) அகற்றுவது, தன்னை தரிசிப்பவர்களுக்கு சகல ஐஸ்வரியங்களையும் வாரி வழங்குவது என்பதால் தான் அந்த திருநீற்றை, ‘விபூதி’ என்று அழைக்கிறார்கள்.

கல்யாண சுந்தரர் சன்னிதி

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் வைபவங்கள் அனைத்தும் சிறப்பு வாய்ந்தவை என்றாலும், அங்கு நடைபெறும் மீனாட்சி கல்யாணம் நம்மை அதிகமாக மெய் சிலிர்க்க வைக்கும் வைபவம் ஆகும். அம்பாள் திருக்கல்யாண கோலத்தில் உள்ள சன்னிதிக்கு ‘கல்யாண சுந்தரர் சன்னிதி’ என்று பெயர்.

திருமணம் செய்ய நினைப்பவர்கள், திருமணத் தடைகளைச் சந்திப்பவர்கள், புதியதாக மணம் முடித்தவர்கள் இந்த சன்னிதியில் வந்து வேண்டிக்கொண்டால், நினைத்தது நடக்கும். இனிய வாழ்க்கை அமையும்.

அமிர்த கலசத்துடன் ஐயப்பன்


கேரளாவில் உள்ள சபரிமலை தான் ஐயப்பன் வீற்றிருக்கும் ஆலயங்களிலேயே பிரசித்தி பெற்றது. அந்த ஐயப்பன், கேரளாவின் குளப்புள்ளி என்ற இடத்தில் கையில் அமிர்த கலசத்துடன் காட்சி தருகிறார். ஆயுள் விருத்திக்கும், செல்வச் செழிப்புக்கும் இவரிடம் வேண்டிக் கொள்ளலாம் என்கிறார்கள், இங்குள்ள பக்தர்கள். பாலக்காட்டில் இருந்து 47 கிலோமீட்டர் தூரத்திலும், குருவாயூரில் இருந்து 45 கிலோமீட்டர் தூரத்திலும் குளப்புள்ளி ஐயப்பன் சுவாமி ஆலயம் அமைந்திருக்கிறது.

மேலும் செய்திகள்