புளிப்பற்ற அப்பப் பண்டிகை

‘பாஸ்கா விழா’ வுக்கு அடுத்த நாளிலிருந்து இந்த விழா ஆரம்பமாகிறது. இந்த விழா ஏழு நாட்கள் தொடர்ச்சியாகக் கொண்டாடப்படும் ஒரு விழா.

Update: 2018-02-28 10:32 GMT
எகிப்தில் அடிமைத்தனத்தில் கிடந்த இஸ்ரவேல் மக்களை மோசேயின் மூலமாக கடவுள் மீட்கிறார். அவர்கள் விடுவிக்கப்படுகின்றனர். அவசர அவசரமாக அவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போது கடவுள் இந்தக் கட்டளையைக் கொடுக்கிறார்.

“வீடுகளில் இருந்து புளிப்பானவற்றை அகற்றுங்கள். புளிப்பான எதையும் எடுத்துக் கொள்ள வேண்டாம். புளிப்பற்ற அப்பத்தை மட்டுமே ஏழு நாட்கள் உண்ணுங்கள்.”

அப்படி இஸ்ரவேல் மக்கள் புளிப்பற்ற அப்பத்தையும், புளிக்காத திராட்சை ரசத்தையும் ஒரு வாரம் குடித்து இந்த விழாவைக் கொண்டாடுகின்றனர். கடவுள் அவர்களை வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு அழைத்துச் செல்வதற்கான முதல் நிலையாக இந்த விழா அமைகிறது.

புளிப்பற்ற அப்பத்தைத் தயாராக்கும் முறை வித்தியாசமானது. அப்பத்தின் மீது கோடுகளையும், துளைகளையும் போட்டு அதை சுடுவார்கள். இதனால் அப்பம் விரைவாக தயாராகி விடும். வரலாற்றுப் பதிவுகள் இந்த அப்பம் சுட 18 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும் என்கின்றன.

சுட்டு முடித்தபின் அதன் உடலெங்கும் சாட்டையால் அடித்தது போன்ற காயங்களும், துளைகளும் காணப்படும்.

புளிப்பு என்பது பாவத்துக்கு ஒப்பீடாக விவிலியத்தில் பயன்படுத்தப்படுகிறது. இறைமகன் இயேசு தனது போதனைகளில் “புளிப்பு மாவை விலக்க வேண்டும் எனவும், புளிப்பு மாவு குறித்து கவனமாய் இருக்க வேண்டும் எனவும்” பல முறை வலியுறுத்தியிருக்கிறார்.

அதற்கு மாறாக, புளிப்பற்ற மாவு என்பது தூய்மையைக் குறிக்கிறது. இறை மகன் தருகின்ற புனித வாழ்வுக்கு அது ஒப்பீடு செய்யப்படுகிறது. புளிப்பை விலக்கி விட்டு புளிப்பற்ற அப்பத்தை எடுப்பது, பாவத்தை விலக்கி விட்டு புனிதத்தை அணிவது எனும் பொருளில் வருகிறது!

புளிப்பற்ற அப்பத்தின் உடலில் உள்ள வரிகள், பாவமற்ற இயேசுவின் உடலில் சாட்டையால் கொண்ட தழும்புகளைக் குறிக்கின்றன. அப்பத்தின் துளைகள் இயேசுவின் உடலில் ஆணிகளாலும், ஈட்டியாலும் உருவான காயங்களைக் குறிக்கின்றன. திராட்சை ரசம் அவரது குருதியைக் குறிக்கிறது. “என் உடலை உண்டு, ரத்தத்தைக் குடியுங்கள்” என இயேசு சொன்னது அவரால் புனிதமாக வேண்டும் என்பதன் குறியீடே.

“ஆகையால் பழைய புளிப்பு மாவைத் தவிர்க்க வேண்டும். தீமை, பரத்தைமை போன்ற புளிப்பு மாவோடு அல்ல, மாறாக நேர்மை, உண்மை போன்ற புளிப்பற்ற அப்பத்தோடு பாஸ்காவைக் கொண்டாடுவோமாக” 1 கொரி 5:8 எனும் விவிலிய வசனம் புளிப்பு என்பது பாவம் என்பதை தெளிவாக விளக்குகிறது.

அதே போல புளிப்பு என்பது வெளி வேடம் என்பதையும் இயேசு குறிப்பிடுகிறார். “பரிசேயருடைய வெளிவேடமாகிய புளிப்பு மாவைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள்” என அவர் மிகத் தெளிவான போதனையை தருகிறார். பரிசேயர் சதுசேயர் ஆகியவர்களுடைய வெளிவேடமும், அவர்களுடைய போதனையும் புளிப்பு மாவைப் போன்றது. அதை விலக்க வேண்டும் என்பதே அவருடைய அறிவுறுத்தலாய் இருந்தது.

அதேபோல ஏரோதியரின் புளித்த மாவு என உலகு சார்ந்த சிந்தனைகளை இயேசு குறிப்பிடுகிறார். உலகின் போக்கில் வாழ்வதையே வாழ்க்கை எனக் கொள்ளாமல் இறைவனின் வாக்கில் வாழ்வதையே வழக்கமாகக் கொள்ளவேண்டும் என்பது அவரது அறிவுரையாய் இருந்தது.

இயேசு தன்னை அப்பம் என அழைத்தார். ஜீவ அப்பம் நானே என்றும் வாழ்வு தரும் உணவு நானே என்றும் அவர் தனது போதனைகளில் குறிப்பிட்டார்.

இன்றைக்கு புளிப்பற்ற அப்பத் திருவிழா பழைய நாட்களைப் போல கொண்டாடப்படாமல் புதிய சிந்தனையின் அடிப்படையிலேயே கொண்டாடப்படுகிறது. நமது வாழ்க்கையில் கலந்திருக்கின்ற பாவங்களை முழுவதுமாய் அகற்றி விட்டு புனிதமான வாழ்க்கையில் பயணிக்க வேண்டும் என்பதே அந்த புதிய சிந்தனை.

ஏழு என்பது விவிலியத்தில் முழுமையைக் குறிப்பிடும் சொல். ஏழு நாள் புளிப்பற்ற அப்பம் உண்ண வேண்டும் என்பது வாழ்நாள் முழுதும் புனிதமாய் இருக்க வேண்டும் என்பதன் அடையாளம். கொஞ்சம் புளிப்பு மாவை நல்ல மாவோடு சேர்த்து வைத்தால் மொத்த மாவும் புளித்துப் போய்விடும். அதே போல கொஞ்சம் பாவம் தானே என நம்மோடு அதை சேர்த்துக் கொண்டால் அது நமது வாழ்க்கையை முழுவதுமாய் செல்லரித்துப் போகச் செய்து விடும்.

புதிய ஏற்பாட்டின் பின்னணியில், இறைமகன் இயேசுவின் போதனையின் வெளிச்சத்தில் இந்த புளிப்பற்ற அப்பப்பண்டிகை பாவத்தை விலக்கும் விழாவாகக் கொண்டாடுவதே சரியானது.

(பண்டிகை தொடரும்)

மேலும் செய்திகள்