தீபம் ஏற்றினால் கிடைக்கும் பலன்

தீப வழிபாடு என்பது நம் கலாசாரத்துடன் இரண்டறக் கலந்தது என்றால் அது மிகையல்ல.

Update: 2018-03-14 09:54 GMT
நாம் வசிக்கும் வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் தீபம் ஏற்றிவைத்து, அந்த தீபத்தை நமஸ்காரம் செய்தால், தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்கின்றன ஞான நூல்கள்.

வீட்டில் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்வதனால், சுபம், ஆரோக்கியம், நன்மை, தன வரவு அதிகரித்தல், நல்லபுத்தி ஆகியவை பெருகும். தீபங்களுக்கு என்று ஒரு வழிபாடு பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது தமிழ் மாதத்தில் தீபத்தை சிறப்பிக்கும் மாதம் ‘திருக்கார்த்திகை’ ஆகும். இந்த திருக்கார்த்திகை மாதத்தில் இல்லத்தில் திரு விளக்கேற்றி வழி படுவது மிகவும் விஷேசமானதாகும்.


தீபத்தின் வகைகள்

தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் ஏற்றியதும் ‘தீப லட்சுமியே நமோ நம’ என்று கூறி வணங்குவது அவசியம். தீபத்தில் பல வகைகள் உண்டு. அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

சித்திர தீபம்: வீட்டின் தரையில் வண்ணப் பொடிகளால் சித்திரக் கோலம் இட்டு, அதன்மீது ஏற்றப்படும் தீபம் ‘சித்திர தீபம்’ ஆகும்.

மாலா தீபம்: அடுக்கடுக்கான தீபத் தட்டுகளில் ஏற்றப்படும் தீபம் ‘மாலா தீபம்’ எனப்படும்.

ஆகாச தீபம்: வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றி வைக்கப்படும் தீபம் ‘ஆகாச தீபம்’ என்று அழைக்கப் படுகின்றது. கார்த்திகை மாதம் சதுர்த்தி திதிநாளில் இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டால், எம பயம் நீங்கும்.

ஜல தீபம்: தீபத்தை ஏற்றி நதி நீரில் மிதக்கவிடுவார்கள். இந்த வகை தீபத்திற்கு ‘ஜல தீபம்’ என்று பெயர்.

படகு தீபம்: வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றிவைத்தும், படகு வடிவங்களில் தீபங்கள் ஏற்றி வைத்தும் கங்கை நதியில் மாலை வேளைகளில் மிதக்க விடுவார்கள். இந்த தீபங்களுக்கு ‘படகு தீபம்’ என்று பெயர்.

சர்வ தீபம்: வீட்டின் அனைத்து பாகங்களிலும் வரிசையாக ஏற்றி வைக்கப்படுபவை ‘சர்வ தீபம்’ ஆகும்.

மோட்ச தீபம்: நம்முடைய முன்னோர்கள் நற்கதியடையும் பொருட்டு, கோவில் கோபுரங்களின் மீது ஏற்றி வைக்கப்படும் தீபங்களே ‘மோட்ச தீபம்’ என்று அழைக்கப்படுகின்றன.

சர்வாலய தீபம்: கார்த்திகை மாதம் பவுர்ணமி அன்று, மாலை வேளையில் சிவன் கோவில்களில் ஏற்றப்படுவது ‘சர்வாலய தீபம்’ ஆகும்.

அகண்ட தீபம்: மலை உச்சியில் பெரிய கொப்பரையில் ஏற்றப்படுவது ‘அகண்ட தீபம்’ எனப்படும்.

லட்ச தீபம்: ஒரு லட்சம் விளக்குகளால் கோவிலை அலங்கரிப்பது ‘லட்சதீபம்’ ஆகும்.

மாவிளக்கு தீபம்: அரிசி மாவில் வெல்லம் போட்டு, இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டையாக்கி, நடுவில் குழித்து நெய் ஊற்றி திரிபோட்டு ஏற்றுவது ‘மாவிளக்கு தீபம்.’


தீபம் வைக்கும் இடங்கள்

கோலமிட்ட வாசல் - ஐந்து விளக்குகள்

திண்ணைகளில் - நான்கு விளக்குகள்

மாடக்குழிகளில் - இரண்டு விளக்குகள்

நிலைப்படியில் - இரண்டு விளக்குகள்

வாசல் நடைகளில் - இரண்டு விளக்குகள்

முற்றத்தில் - நான்கு விளக்குகள்

பூஜையறையில் - இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றி வைத்து வணங்கினால் சர்வ மங்கலம் உண்டாகும்.

சமையல் அறையில் - ஒரு விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் அன்ன தோஷம் ஏற்படாது.

தோட்டம் உள்ளிட்ட வெளிப்பகுதி - எமனை வேண்டி தீபம் ஏற்ற வேண்டும். இதனால் மரண பயம் நீங்கும். ஆயுள்விருத்தி உண்டாகும்.

மேலும் செய்திகள்