இழந்த செல்வத்தை வழங்கும் வராகி

திருமாலின் வராக அம்சமாக கருதப்படும், வராகி அம்மன், சப்த கன்னியரில் ஒருவராகவும் திகழ்கிறார்.

Update: 2018-04-11 06:15 GMT
வராக முகத்தையும், எட்டு கரங்களையும் கொண்டு அருள்பாலிக்கும் இந்த அன்னை, தன்னுடைய பின் இரண்டு கரங்களில் தண்டத்தையும், கலப்பையையும் தாங்கியிருக்கிறார். இவர் கருப்பு நிற ஆடை உடுத்தி சிம்ம வாகனத்தில் அமர்ந்திருப்பார்.

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமான வராகியை வணங்கினால் பகைவரை அழித்து பக்தரை காத்திடுவாள். கொடிய ஏவல், பில்லி சூனியத்தில் இருந்தும் காப்பாற்றுவாள். வராகியை வணங்கும் எவருக்கும் அனைத்து செல்வங்களும் வந்து சேரும்.

பெண் தெய்வங்களில் ஒருவர் வராகி அம்மன். இவர் ராஜராஜேஸ்வரி அம்மனின் குதிரைப்படைத் தலைவியாகவும், பத்மாவதி அம்மனின் காவல் தெய்வமாகவும், சப்த கன்னியரில் ஒருவராகவும் அறியப்படுகிறார். மகா வராகி, ஆதி வராகி, ஸ்வப்ண வராகி, லகு வராகி, உன்மத்த வராகி, சிம்ஹாருடா வராகி, மகிஷாருடா வராகி, அச்வாருடா வராகி என்போர் எட்டு வராகிகள் (அஷ்டவராகி) என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த எட்டு வராகி அம்மனையும் உள்ளடக்கிய ‘அஷ்டவராகி அம்மன்’ ஆலயம் சாலாமேட்டில் இருக்கிறது.

தமிழகத்தில் விழுப்புரம் அருகே உள்ளது சாலாமேடு என்ற ஊர். இங்கு அஷ்டவராகி அம்மன் ஆலயம் இருக்கிறது. உலகிலேயே வராகி அம்மனுக்கு அமைக்கப்பட்ட முதன் ஆலயம் இதுதான் என்று கூறப்படுகிறது.

இதேபோல் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வழுவூர் வீரட் டேசுவரர் கோவில், வராகி அம்மன் வழிபட்ட தலமாக அறியப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் எனும் ஊரில் சப்தமாதாக்கள் (செல்லியம்மன் எனும் பெயரில்) கோவில் உள்ளது. இங்கு வராகி அம்மனுக்கு பஞ்சமி திதியில் பூஜை மற்றும் மஹா யாகம் நடைபெறும்.

வராகி அம்மனுக்கு 8 சனிக்கிழமை காலை 6 மணியில் இருந்து முதல் 7 மணிக்குள் அல்லது இரவு 8 மணியில் இருந்து 9 மணிக்குள், மண் அகலில் கருநீல துணியில் சிறிது வெண் கடுகை இட்டு முடிந்து, அதில் நல்லெண்ணெய் விட்டு தீபமிட்டு வழிபட வேண்டும். இப்படி மனதார வேண்டினால் இழந்த செல்வங்களைத் திரும்பப் பெறலாம். கோவிலுக்குச் செல்ல இயலாதவர்கள், தங்களுடைய வீட்டிலேயே வராகி அம்மனின் படத்தை வைத்து தனி பரிகார தீபமாக ஏற்றி வந்தாலும் பலன் உண்டு.

அஷ்டவராகி அம்மன் ஆலயத்தில் மாத பவுர்ணமி, அமாவாசை மிகவும் சிறப்பாக அன்னதானத்துடன் நடக்கிறது. வராகி மாலை படித்தால் அனைத்து துன்பங்களும் நம்மை விட்டு அகலும். இரவு 10 அல்லது 11 மணியளவில் மந்திர உச்சாடனம் செய்ய வேண்டும். வராகியை மனம் உருகி வேண்டினால் கேட்டது கிடைக்கும்.

அமைவிடம்

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் சாலாமேடு அஷ்டவராகி கோவில் உள்ளது. தளவானூர், திருப்பாச்சனூர் செல்லும் அரசுப் பேருந்துகளிலும், ஷேர்ஆட்டோக்களிலும் கோவிலுக்குச் செல்லலாம்.

மேலும் செய்திகள்