புல் சாப்பிட்ட கல் நந்தி

கஞ்சனூரில் தேவசர்மா என்ற அந்தணன் இருந்தான். அவன் ஒரு முறை வைக்கோல் கட்டுகளை, அறியாமலும்.. தெரியாமலும் ஒரு பசுங்கன்றின் மீது போட்டு விட, அந்தக் கன்று துடிதுடித்து இறந்து போனது.

Update: 2018-05-01 05:47 GMT
ஞ்சனூரில் தேவசர்மா என்ற அந்தணன் இருந்தான். அவன் ஒரு முறை வைக்கோல் கட்டுகளை, அறியாமலும்.. தெரியாமலும் ஒரு பசுங்கன்றின் மீது போட்டு விட, அந்தக் கன்று துடிதுடித்து இறந்து போனது. அந்தக் கன்று, சிறந்த பக்திமானான ஹரதத்தர் என்பவருக்குச் சொந்தமானது.

பசுங்கன்றைக் கொன்றதால், அவனை மகாபாவி என்று பலரும் ஒதுக்கினார்கள். இந்த நிலையில் நடந்த விபரீதத்தை எடுத்துக் கூறுவதற்காக, பசுங்கன்றின் உரிமையாளரான ஹரதத்தரின் வீட்டிற்குச் சென்றான், தேவசர்மா. அங்கு வீட்டுக்குள் நுழைந்தபோது, வாசல்படி தலையில் இடித்து ‘சிவ.. சிவா’ என்று கத்தினான்.

குரல் கேட்டு வெளியே வந்த ஹரதத்தர், தேவசர்மா பற்றி யும், அவன் வந்த நோக்கம் பற்றியும் அறிந்து கொண்டார். பின்னர், ‘நீ சிவ என்று சொன்னதுமே, பசுவைக் கொன்ற உன்னுடைய பாவம் நீங்கிவிட்டது. இரண்டாவதாக சிவா என்று கூறியதற்காக, உனக்கு கயிலாய பதவியும் கிடைக்கப் போகிறது’ என்று தேவசர்மாவுக்கு ஆறுதல் கூறினார்.

ஆனாலும் கூட ஊர்மக்கள் பலரும் தேவசர்மாவை மனதார மன்னிக்கவில்லை. ஊரைவிட்டு விலக்கியே வைத் திருந்தார்கள்.

ஒரு நாள் ஹரதத்தர், கஞ்சனூரில் உள்ள அந்தணர்கள் அனைவரையும், அங்குள்ள ஈசன் எழுதருளியுள்ள அக்னீஸ்வரர் ஆலயத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதன்படியே ஊர் மக்கள் அனைவரும் ஆலயத்தில் கூடியிருந்தனர்.

அப்போது ஹரதத்தர், தேவசர்மாவிடம் ஒரு புல் கட்டைக் கொடுத்து, ‘நீ சிவ.. சிவா என்று சொன்னதுமே உன்னுடைய பசுவைக் கொன்ற பாவம் நீங்கிவிட்டதாக நான் கூறினேன். ஆனால் அதை ஊர் மக்கள் யாரும் நம்பவில்லை. எனவே நீ இங்குள்ள கல் நந்திக்கு இந்தப் புல்லைக் கொடு. அது அதை சாப்பிட்டால் உன்னுடைய பாவம் நீங்கிவிட்டதாக இங்கிருப்பவர்கள் உணர்ந்து கொள்வார்கள்’ என்றார்.

அதைக் கேட்டு கூடியிருந்த மக்கள் அனைவரும் எள்ளி நகையாடினர். ‘கல் நந்தி எப்படி புல் சாப்பிடும்’ என்பதால் வந்த நகைப்பு அது.

ஆனால் ஹரதத்தரோ இறைவன் மீதான நம்பிக்கையில், ‘இறைவா! உன்னுடைய நாமத்தை ஒரு முறை சொன்னாலே பசுங்கன்றை கொன்ற பாவம் நீங்கிவிடும் என்று நான் சொன்னது உண்மையானால், கல் நந்தியை புல் சாப்பிட்டு மெய்ப்பிக்கச் செய்ய வேண்டும்’ என்று மனமுருக வேண்டினார்.

என்ன ஆச்சரியம்.. தேவசர்மா கொடுத்த புல்லை அந்த கல் நந்தி சாப்பிட்டது. அங்கிருந்த அனைவரும் சிவ நாமத்தின் உயர்வையும், பக்திக்கு கிடைக்கும் பலனையும் கண்டு இறைவனை மனதார வழிபட்டனர்.

இந்த கல் நந்தி, கஞ்சனூர் அக்னீஸ்வரர் ஆலயத்தில் இருக்கிறது. திருவாரூர்- கும்பகோணம் சாலையில் 45 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது கஞ்சனூர்.

***

ராசிகளுக்கான கல் தூண்

ர்நாடகத்தில் உள்ள புண்ணிய தலங்களில் மிகவும் ஆடம்பரமான விழா நடைபெறும் இடம் சிருங்கேரி. இங்கு 40 கோவில்கள் உள்ளன. சிக்கமகளூரு மாவட்டம் துங்கபத்ரா நதியின் இடது கரையில் உள்ள சாயாதிரி மலையில் சிருங்கேரி அமைந்துள்ளது. இது ரிஷிய சிருங்கர் என்ற மகரிஷி பிறந்த இடமாகும். இங்குள்ள வித்ய சங்கரா கோவிலில் சிவப்பு கல்லில் (ரூபி) வடிவமைக்கப்பட்ட வேணு கோபால் மற்றும் முத்தினால் செய்யப்பட்ட சீனிவாசர், நந்தி சிலைகள் சிற்பக் கலை உள்ள பீடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கோவிலுக்கு செல்ல 6 வாசல்கள் உள்ளன. 12 தூண்கள் கொண்ட மண்டபமும் இங்கு இருக்கிறது. இந்த 12 தூண்களும் 12 ராசிகளுக்கு உரிய தூண்கள் என்று கூறப்படுகிறது. இந்தத் தூண்களின் மீது அந்தந்த ராசி களுக்கு உரிய நாட்களில் சூரிய ஒளி விழுவது சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும். ஒவ்வொரு தூணிலும் கர்ஜிக்கும் சிங்கத்தின் தலை உள்ளது. அந்த சிங்கங்களின் வாயில் சுழலும் கல் பந்து உள்ளது.

சிருங்கேரியில் பிரசித்தி பெற்ற சாரதாம்பாள் கோவில் உள்ளது. இங்கு ஸ்ரீசக்கர பீடத்தின் மீது ஜெபமாலையுடன் சாரதா தேவி தோளில் கிளி ஒன்று நிற்கிறது. முதலில் சந்தன மரத்தால் ஆன சிலையை ஆதிசங்கரர் நிறுவினார். 14-ம் நூற்றாண்டில் அந்த சிலை மாற்றப்பட்டு, தங்கத்தினால் ஆன சாரதாதேவி சிலை நிறுவப்பட்டது.

பெங்களூருவில் இருந்து 320 கிலோமீட்டர் தொலைவிலும், சிக்கமகளூருவில் இருந்து 85 கிலோமீட்டர் தொலைவிலும் சிருங்கேரி உள்ளது.

மேலும் செய்திகள்