வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2018-05-28 22:15 GMT
நெல்லை,

தமிழ் கடவுளான முருக பெருமானுக்கு ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் உள்ள திருமலை குமாரசுவாமி கோவில், இலஞ்சி குமாரசுவாமி கோவில், தோரணமலை முருகன் கோவில், பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நெல்லை மாநகரில் பாளையஞ்சாலைக்குமார சுவாமி கோவில், குறுக்குத்துறை சுப்பிரமணியர் சுவாமி கோவில், வண்ணார்பேட்டை குட்டத்துறை முருகன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. வைகாசி விசாகத்தையொட்டி முருகப் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பல்வேறு முருகன் கோவில்களில் மூலவர் சுப்பிரமணியர், சண்முகருக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மேலும் ஒரு சில முருகன் கோவில்களில் கும்பபூஜை நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்