பிள்ளையார் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

நெல்லையப்பர் கோவில் ஆனி திருவிழாவையொட்டி நேற்று பிள்ளையார் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2018-06-01 22:00 GMT
நெல்லை,

நெல்லையப்பர் கோவில் ஆனி பெருந்திருவிழா வருகிற 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற 27-ந்தேதி (புதன்கிழமை) விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. நெல்லையப்பர் கோவில் ஆனி பெருந்திருவிழா நடப்பதற்கு முன்பாக, பிட்டாரத்தி கோவிலில் திருவிழா நடைபெறுவது வழக்கம். தொடர்ந்து பிள்ளையார் திருவிழா, முதல் மூவர் திருவிழா நடைபெறும். பிட்டாரத்தி கோவிலில் திருவிழா முடிந்து, நேற்று பிள்ளையார் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி நேற்று காலை 6 மணிக்கு சுவாமி சன்னதியில் உள்ள சிறிய கொடி மரத்தில் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இரவில் பிள்ளையார் மூச்சுறு வாகனத்தில் உள்வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி சன்னதி முன்பு உள்ள பெரிய விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும், இரவில் பிள்ளையார் மூச்சுறு வாகனத்தில் உள்வீதி உலாவும் நடக்கிறது. பின்னர் முதல் மூவர் திருவிழா நடைபெறும். தொடர்ந்து ஆனி பெருந்திருவிழா நடைபெறும்.

மேலும் செய்திகள்