சுந்தரருக்கு பொன் வழங்கிய மாற்றுரைவரதீஸ்வரர்

சோழவள நாட்டின் காவிரி நதிக்கு வடகரையில் திகழும், தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்களுள் 62-வது சிவத்தலம் திருப்பாச்சிலாச்சிராமம். இது தற்போது ‘திருவாசி’ என வழங்கப்படுகிறது.

Update: 2018-06-13 05:12 GMT
திருப்பாச்சிலாச்சிராமம் என்பதில் ‘திரு+ பாச்சில்+ ஆச்சிராமம்’ என்ற மூன்று சொற்கள் உள்ளன. ‘திரு’ என்பது தெய்வத்தன்மை, அழகு, செல்வம் ஆகும். ‘பாச்சில்’ என்பது ஊர்ப்பெயர் ஆகும். ‘ஆச்சாரமம்’ என்பது கோவிலின் பெயர். இது ஊர்ப் பெயருடன் வழங்கல் ஆயிற்று.

ஒரு சமயம் திருக்கயிலை மலையில் சிவபெருமானோடு உமா தேவியார் எழுந்தருளி இருந்தார். அப்போது அம்மையார் எழுந்து இறைவனை வணங்கி நின்று, ‘சுவாமி! தாங்கள் அருளிய இருபத்தெட்டுச் சிவாகமங்களில் கூறியவற்றுள், தங்களுக்கு விருப்பமான செயல் ஒன்றை எனக்கு அருள வேண்டுகிறேன்’ என்று விண்ணப்பித்தாள்.

உடனே சிவபெருமான் ‘உமையே! நாம் மிகவும் விரும்புவது பூசனையே. அதுவும் சோழ நாட்டுக் காவிரியின் வடகரையில் தேவர்கள், முனிவர்கள் தவம்புரியும் திருப்பாச்சிலாச்சிராமம் என்னும் தலத்தில் நம்மை ஒருவர் சிவாகம விதிப்படி பூஜித்து வழிபட்டால், அவர்களது எண்ணங்கள் யாவும் கைகூடும்’ என்று அருள் புரிந்தார்.

உமாதேவியார் சிவபெருமானிடம் தான் சிவபூஜை செய்ய விரும்புவதை தெரிவித்து விடைபெற்றுக் கொண்டு திருப்பாச்சிலாச்சிராமத்திற்கு எழுந்தருளினார். உமாதேவியார் தம் பணிப்பெண்களுடன் திருப்பாச்சிலாச்சிராமம் அடைந்து, அங்குள்ள பொய்கையில் நீராடி நியமத்துடன், பிறர் அறியா வண்ணம் அன்னப்பறவை வடிவம் தாங்கிச் சிவபெருமானை ஆகமப்படி பூஜித்து வழிபட்டு வந்தாள்.

அம்மையாரின் பூஜைக்கு மகிழ்ந்து, சிவகணநாதர்களுடன் சிவபெருமான் அங்கு எழுந்தருளினார். பின்னர் வேண்டியதை கேட்கும்படி அம்பாளிடம் கூறினார். அன்னையும், ‘இறைவா! நான் அன்ன வடிவுடன் இருந்து நீராடிய இங்குள்ள பொய்கை ‘அன்னமாம் பொய்கை’ என்ற திருப்பெயருடன் விளங்க வேண்டும். இதில் நீராடி உம்மை வழிபடுபவர்களுக்கு, பிணிகள் யாவும் நீங்கி அவர்கள் இஷ்ட சித்திகளைப் பெறல் வேண்டும்’ என்றாள். இறைவனும் அப்படியே அருள்புரிந்தார்.

திருச்சிராப்பள்ளி வடக்கே உள்ளது கொல்லிமலை. அம்மலைத் தொடரைத் தனக்கு எல்லையாகக் கொண்டவன் கொல்லிமழவன் என்ற சிற்றரசன். அவன் திருப்பாச்சிலாச்சிராமம் என்ற சிவத்தலத்தை தனது இருக்கையாகக் கொண்டு வாழ்ந்து வந்தான். இவ்வரசன் சைவ மரபினன் ஆவான். இவனுக்கு அழகிய மகள் ஒருத்தி இருந்தாள். அக்கன்னி இளங்கொழுந்து போல் ஒளிவீசும் அழகு நிறைந்த மேனியவள். அவளை முயலகன் என்னும் பெருநோய் பற்றி வருத்தியது. தன் பெண்ணின் துன்பத்தைக் கண்ட கொல்லிமழவன் மிகக்கவலை அடைந்தான். அரசன் தன் மகளுக்கு எவ்வளவோ வைத்தியம் பார்த்தும், அவளுக்கு வந்த நோய் அகலவில்லை. நோயைத் தீர்க்க முடியாதவனாய், தன் மகளைத் திருக்கோவிலுள்ளே கொண்டுபோய் மணிகண்டேஸ்வரர் சன்னிதி முன்பாக கிடத்தினான்.

அப்போது திருஞானசம்பந்தர் பல தலங்களைத் தரிசித்துக்கொண்டு, திருப்பாச்சிலாச்சிராமத்தையும் தரிசிக்க அப்பகுதிக்கு வந்து கொண்டிருந்தார். அதை அறிந்த கொல்லிமழவன், தன் மகளை ஆலயத்திலேயே விட்டு விட்டு விரைந்து வெளியே வந்து, தனது குடிமக்களுக்கு நகரத்தை மகர தோரணங்களால் அலங்கரிக்கவும், நிறைகுடங்களையும், மணிகளையும் ஏந்தி நிற்கவும் உத்தரவிட்டான்.

சம்பந்தருடைய முத்துச் சிவிகைக்கு முன்பு சென்று வீழ்ந்து வணங்கினான். ஞானசம்பந்தர் அவனுக்கு அருள்செய்தார். மழவன் மன மகிழ்ச்சியோடு திருஞானசம்பந்தரை, திருப்பாச்சிலாசிராமத்தின் திருவீதியின் வழியே அழைத்துக் கொண்டு ஆலயம் வந்தான். அங்கே உணர்விழந்து கிடந்த பெண்ணைப் பார்த்து ‘என்ன இது?’ என்று திருஞானசம்பந்தர் வினவினார்.

கொல்லிமழவன் சம்பந்தரை வணங்கி, ‘இவள் என்னுடைய மகள். இவளை முயலகன் என்னும் கொடிய நோய் பிடித்துள்ளது. அந்நோய் எவ்வித சிகிச்சையினாலும் தீரவில்லை. அதனால் இவளைச் சிவசன்னிதி முன்னே கிடத்தியுள்ளேன்’ என்றான்.

அதனைக்கேட்ட சம்பந்தர் அருள்கூர்ந்து, அந்நிலையில் நின்றபடியே சிவபெருமானை நோக்கி, ‘துணிவளர் திங்கள்’ என்ற திருப்பதிகம் தொடங்கிப் பாடினார். ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ‘மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பு’ என்று வைத்துப்பாடித் திருக்கடைக்காப்புச் சாத்தி அருளி வணங்கினார். உடனே கொல்லிமழவன் மகள், பிணி நீங்கப்பெற்று எழுந்து தந்தை அருகே சென்று நின்றாள். அது கண்ட மழவன் பெருமகிழ்ச்சி கொண்டு, திருஞானசம்பந்தர் திருவடிகளில் தனது மகளுடன் விழுந்து வணங்கினான். பிறகு அனைவருமாக சிவெபருமானை தரிசித்தனர்.

இந்த ஆலயத்தில் ‘கிழி கொடுத்தருளிய திருவாசல்’ என்னும் ஸ்தபன மண்டபம் உள்ளது. அதாவது சுந்தரருக்கு பொற்கிழி கொடுத்த திருத்தலம் இது. சிவத்தல யாத்திரையாக இத்தலம் வந்த சுந்தரர், தம் அடியவர்கள் பொருட்டு இத்தல ஈசனிடம் பொன் கேட்டார். ஈசன் சுந்தரரிடம் விளையாட விரும்பி, பொன்னை உடனே கொடுக்கவில்லை. இதனால் சுந்தரர், கோபத்தில் இறைவனை நோக்கி பதிகம் பாடினார். அப்போது ஈசன் தோன்றி சுந்தரருக்கு பொற்கிழி அளித்து மறைந்தார்.

இப்போது சுந்தரருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. ‘நாம் கோபத்தில் ஈசனை நோக்கி பதிகம் பாடியும், ஈசன் பொற்கிழி கொடுத்துள்ளாரே! ஒரு வேளை ஈசன் கொடுத்த பொற்கிழியில் இருக்கும் பொன், மாற்று குறைந்திருக்குமோ?’ என்று எண்ணினார்.

சுந்தரரின் எண்ணத்தை அறிந்த ஈசன், தம்முடன் மகாவிஷ்ணுவையும் அழைத்துக்கொண்டு, வணிகர்கள் வடிவில் சுந்தரரிடம் சென்றார். பின்னர் அவரிடம் இருந்த பொற்காசுகளை உரசிப் பார்த்து, ‘இந்த பொன் தரமானது தான்’ என்று உறுதியளித்தாராம். இதனால் தான் இத்தல ஈசனுக்கு ‘மாற்றுரைவரதர்’ என்று திருநாமம் வந்ததாம்.

கர்மவினைகளால் தான், நம்மை நோய்கள் பீடிக்கின்றன. அந்த கர்மவினைகளை அடியோடு களைந்து நம்முடைய தீராத நாட்பட்ட வியாதிகளையும் தீர்த்து வைக்கும் வல்லமை படைத்த இத்தலம் வந்து வழிபட்டு, சம்பந்தரின் பதிகம் பாடி வழிபட தீராத நோய்களும் அடியோடு நீங்கும்.

இத்தலத்தில் அருளும் பைரவர் தமது வலக்கரத்தில் சூலம் ஏந்தி இருப்பது அடியவர்களை பிடித்திருக்கும் பில்லி, சூன்யம், மாந்திரீகம் முதலியவற்றை அகற்றத்தான். இத்தல பைரவரை வேண்டி வீட்டின் தெற்கு பக்க சுவரில் சந்தனத்தில் சூலம் வரைந்து வழிபட்டு வர, உங்கள் வாழ்வுக்கும், சந்ததிகள் வாழ்வுக்கும் பைரவர் துணை நிற்பார். வியாபார தலங்களில் இத்தல பைரவரை வேண்டி, கடையின் தெற்கு பக்கச் சுவரில் சந்தனத்தில் சூலம் வரைந்து வழிபட்டு வர, இத்தல பைரவர் அருளால் வியாபாரம் பெருகும் என்கிறார்கள்.

இத்தல வள்ளி - தெய்வானை சமேத ஆறுமுகப்பெருமானை கிருத்திகை, சஷ்டி நாட்களில் வழிபட்டு வந்தால், நம் வேண்டுதல்கள் வெகு விரைவில் கைகூடிவரும் என்கிறார்கள்.

அமைவிடம்

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து முசிறி, தொட்டியம் செல்லும் பேருந்துகள் மூலம் திருவாசி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, வடக்கே 1 கிலோமீட்டர் தூரம் சென்றால் கோவிலை அடையலாம்.

இத்தலத்தின் மிக அருகில் விஷக்கடி போக்கும் துடையூர் விஷமங்களீஸ்வரர் திருக்கோவிலும், மனம் சம்பந்தப்பட்ட நோய்களை அகற்றும் குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவிலும், குணசீலம் ஹேமவர்ணாம்பிகை உடனுறை தார்மீகநாத சுவாமி திருக்கோவிலும் இருக்கின்றன. 

அம்பாளுக்கு முதல் பூஜை

இத்தல பாலாம்பிகை அம்மன் சன்னிதி மேற்கு பார்த்த வண்ணம், ஈசனை நோக்கி அமைந்துள்ளது. இந்த அன்னையை வழிபாடு ெசய்தால், திருமணத் தடைகள் விலகும். குழந்தை பாக்கியம் மற்றும் சுகப் பிரசவத்திற்கும் பாலாம்பிகை வழிபாடு துணை செய்யும் என்கிறார்கள். இங்கு தினமும் அர்த்தஜாம பூஜையில் பாலாம்பிகை அம்பாளுக்கே முதலில் பூஜை நடக்கிறது. 

மேலும் செய்திகள்