ஆச்சரியப்படுத்தும் கோவில் முதலை

ஒரு கோவிலின் தனிச் சிறப்புதான் அந்த கோவிலை பிரசித்தி பெற்றதாக மாற்றும் தன்மை கொண்டது.

Update: 2018-07-10 07:20 GMT
இறைவன் குடிகொண்டு அருளும் ஆலயம் என்றாலே அது தெய்வீகமான சக்தி நிறைந்தது தான். ஒவ்வொரு கோவில்களுக்கும் ஏதாவது ஒரு தனி சிறப்பு இருக்கத்தான் செய்யும். அந்த தனிச் சிறப்புதான் அந்த கோவில்களை பிரசித்தி பெற்றதாக மாற்றும் தன்மை கொண்டது. அப்படி ஒரு தனிச் சிறப்பு கொண்ட ஆலயத்தைப் பற்றிய சிறு தகவலை இங்கே காணலாம்.

 கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ளது அனந்தபுரா ஆலயம். கேரளாவில் புண்ணிய தலங்களில் ஒன்றாக உள்ள இந்த ஆலயத்தில் மூலவராக அனந்த பத்மநாப சுவாமி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

 இந்த ஆலயம் 9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த பிரதான ஆலயத்தைச் சுற்றி தலைவாயில் ஒன்றும் இங்கு அமைக்கப்பட்டிருக்கிறது.

 பசுமை நிலத்தில் காட்சியளிக்கும் இந்த ஆலயத்தின் குளத்தில் கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக முதலை வாழ்ந்து வருகிறது. அதற்கு இங்கு வரும் பக்தர்கள் ‘பபியா’ என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். இந்த முதலை ஆலயத்தின் பாதுகாவல் என்று பக்தர்கள் கருதுகின்றனர். ஆகையால் அதனை பக்தர்கள் இறைவனின் அருள்பெற்ற வாகனமாக பாவிக்கிறார்கள்.

 பொதுவாக முதலை இனமானது அசைவ வகையைச் சார்ந்தது. ஆனால் இங்குள்ள முதலை குளத்தில் உள்ள மீன்களைக் கூட சாப்பிடுவதில்லை என்கிறார்கள். மாறாக தினமும் உச்சிகால பூஜையின் போது, சாதமும் வெல்லமும் கலந்த உருண்டைகளை, கோவில் அர்ச்சகர் இந்த முதலைக்கு சாப்பிடக் கொடுக்கிறார். இதற்கு ‘முதலி நைவேத்யா’ என்று பெயர்.

 கோவில் குளத்தில் குளிக்க வரும் பக்தர்கள் மற்றும் உணவு கொடுக்கும் அர்ச்சகர்களை இதுவரை முதலை தாக்கியதில்லை என்பது ஆச்சரியமான ஒன்றாக பக்தர்கள் சொல்கிறார்கள். மேலும் கோவில் பிரசாதம் வழங்கப்படும் வேளைகளில், குறிப்பிட்ட இடத்திற்கு முதலை சரியாக வந்து சேர்ந்து விடுவதும் பக்தர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

 ஒன்றுக்கு மேற்பட்ட முதலையை இந்தக் குளத்தில் இதுவரை எவரும் கண்டதில்லையாம். ஒரு முதலை இறந்து விடுமேயானால், மறு தினமே மற்றொரு முதலை குளத்தில் தென்படுமாம். அருகில் வேறு ஆறுகளோ, குளங்களோ இல்லாத நிலையில் எப்படி இந்த கோவில் குளத்திற்குள் மட்டும் முதலை வருகிறது என்பது புரியாத புதிர் என்கிறார்கள். 

மேலும் செய்திகள்