குருவாயூர் கோவிலின் சிறப்புகள்

திருச்சூர் மாவட்டத்தில் குருவாயூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற கிருஷ்ணர் கோவில்.

Update: 2018-07-18 06:04 GMT
இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் குருவாயூர் எனும் இடத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கிருஷ்ணர் கோவில் இதுவாகும். பூலோக வைகுண்டமாகவும் பூமியில் இறைவன் இருக்கும் இடமாகவும் கருதப்படும் அற்புத திருத்தலம் இது.

கிருஷ்ண அவதாரத்திற்கு முன்பே தன் தாய் தந்தையருக்கு இக்கோவிலில் குழந்தை வடிவத்தில் கிருஷ்ணன் காட்சி கொடுத்த சிறப்பு இக்கோவிலுக்கு உள்ளது.

108 திவ்யதேசங்கள் வரிசையில் இந்த கோவில் சேராது என்றாலும் வைணவர்களால் பெரிதும் வணங்கப்பட்டு வரும், இந்திய அளவில் மிகப்பெரிய வைணவஸ்தலம் இது.

தேவ சிற்பியான விஸ்வகர்மாவால் குருவாயூர் கோவில் உருவாக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

குரு மற்றும் வாயுவால் பிரதிஷ்டை ஆனதால் குருவாயூர் என பெயர் பெற்றது.

மும்மூர்த்திகளின் அனுக்ரஹம் இந்த விக்கிரகத்துக்கு உண்டு என்பதால் ஸ்ரீகுருவாயூரப்பனை வழிபட்டால் அனைத்து நலன்களையும் நாம் பெறலாம் என்பது ஐதீகம்.

குருவாயூரப்பனை ஒரு குழந்தையாக பாவித்தே இக்கோவிலில் பக்தர்கள் வழிபாடு நடத்துகின்றனர்.

அதிகாலையில் ஸ்ரீகுருவாயூரப்பனின் விஸ்வரூப தரிசனம் காண பக்தர்களின் கூட்டம் அலை மோதும். குழந்தை கிருஷ்ணனை எந்த வேளையில் தரிசித்தாலும், அதிகாலையில் தரிசிப்பது கூடுதல் ஆனந்தம்!

இரவு மூன்றாம் ஜாமம் முடிந்ததும் 3 மணிக்கு நாதஸ்வர இன்னிசை ஒலிக்க, சங்கு முழங்க குருவாயூரப்பனைத் திருப்பள்ளி எழச்செய்வர். அப்போது பகவான் காட்சி கொடுப்பதற்கு ‘நிர்மால்ய தரிசனம்’ என்று பெயர்.

நிர்மால்ய தரிசனத்தின்போது பகவானுக்கு முதல் நாள் அணிவித்திருந்த சந்தனக் காப்பு, ஆடை, ஆபரணங்கள், மாலைகள் இவை அனைத்தையும் ஒவ்வொன்றாகக் களைவர்.

விஸ்வரூப தரிசனம் முடிந்ததும் தைலாபிஷேகம் நடைபெறும். குருவாயூரப்பனுக்கு நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த எண்ணெய் கோவிலுக்குச் சொந்தமான செக்கில் ஆட்டப்பட்டதாகும்.

இதன் இறுதியில் தங்கக் கலசத்தில் உள்ள தூய நீரால் பூரணத் திருமஞ்சனம் செய்வர்.

கிட்டத்தட்ட இது கும்பாபிஷேகம் செய்து வைப்பது போல் ஆகும்.

இந்த அபிஷேகம் முடிந்த பின் நெல்பொரி, கதளிப்பழம், சர்க்கரை முதலியவற்றை நைவேத்தியமாகப் படைப்பர். அப்போது உன்னி கிருஷ்ணனாகத் தோற்றம் அளிப்பார் குருவாயூரப்பன்.

மேல்சாந்தி என்றால் தலைமை குருக்கள் என்று பொருள். முக்கியமான பூஜைகள், அலங்காரங்கள், அர்ச்சனை மற்றும் அபிஷேகங்களை செய்பவர் மேல்சாந்தி.

மேல்சாந்தி விடியற்காலை இரண்டரை மணிக்கே ஸ்ரீகோவிலின் கருவறைக்குள் நுழைந்து விடுவார்.

மேலும் உச்சி பூஜை முடியும் 12.30 மணி வரை பொட்டுத் தண்ணீர்கூட அருந்த மாட்டார். அப்படி ஒரு ஆசார முறை இங்கே கடைப்பிடிக்கப்படுகிறது.

ஒரு மேல்சாந்தி தொடர்ந்து ஆறு மாத காலமே பணிபுரிய வேண்டும். இந்த ஆறு மாத காலமும் குருவாயூர் கோவிலை விட்டு அவர் வெளியே எங்கும் செல்லக்கூடாது. கோவிலின் உள்ளே தங்குவதற்குத் தனி இடம் வழங்கப்படும்.

இந்த ஆறு மாத காலமும் பிரம்மச்சர்ய விரதம் அவசியம்.

சந்தன அபிஷேகத்தில் நீராடிய குருவாயூரப்பனை அன்றைய தினம் முழுவதும் பக்தர்கள் தரிசிக்கலாம். சந்தன அபிஷேகம் நடந்த தினத்துக்கு அடுத்த நாள் இந்த சந்தனம் களையப்பட்டு பக்தர் களுக்குப் பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது.

எந்த நேரமும் ஏதாவது பிரார்த்தனைகள், வழி பாடுகள் என்று எப்போதும் ஆலயத்திற்கு பக்தர்கள் வந்து கொண்டிருப்பார்கள்.

துலாபார நேர்ச்சைக்கடன் இங்கே பிரசித்தம். பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கேற்ப தங்கம், வெள்ளி, சர்க்கரை, கரும்பு, வெண்ணெய், பன்னீர், தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை எடைக்கு எடை செலுத்துகிறார்கள்.

அதுபோல் குழந்தைகளுக்கு முதல் அன்னமிடுதலும் இங்கே சிறப்பு. குழந்தைகளுக்கு முதன் முதலாக இங்கே அன்னம் ஊட்டினால் வாழ்நாள் முழுதும் அந்தக் குழந்தைக்கு ருசியான உணவு கிடைக்கும் என்பதும், உணவுக்குப் பஞ்சம் வராது என்பதும், நோய் நொடிகள் எதுவும் வராது என்பதும் நம்பிக்கை.

திப்புசுல்தான் தன் வீரர்களுடன் குருவாயூர் ஆலயத்துக்குள் சென்றபோது, ஒரு குரல் அவரை நிற்கும்படி கட்டளையிட்டதாம். அதற்கு மதிப்பளித்த திப்பு சுல்தான் குருவாயூர் ஆலயத்துக்குக் கொடைகள் பல வழங்கியுள்ளார்.

1970-ம் ஆண்டு நவம்பர் 29-ந் தேதி குருவாயூர் ஆலயம் தீ விபத்துக்குள்ளானது.

ஆலயத்தின் பெரும்பாலான பகுதிகள் சேதம் அடைந்தாலும், குருவாயூரப்பனின் கர்ப்ப கிரகம், கணபதி, ஐயப்பன் மற்றும் தேவி சன்னிதிகள் போன்ற பகுதிகள் பாதிப்பு அடையாததற்கு ஸ்ரீகுருவாயூரப்பனின் அருளே காரணம் என கூறப்படுகிறது.

ஒருநாள் சிறுவன் ஒருவன் தலைமைச் சிற்பியிடம் வந்து ‘‘இங்கு கிருஷ்ணனை, வேணு கோபாலனாக செதுக்கியிருக்கும் தூணை வையுங்கள்!’’ என்றான்.

‘‘அப்படி ஒரு சிற்பத்தை நாங்கள் இதுவரை வடிக்க வில்லையே!’’ என்றார். உடனே சிறுவன் சிற்ப வேலை நடக்கும் இடத்துக்கு அவரை அழைத்துச் சென்று ஸ்ரீகிருஷ்ணர், வேணுகோபாலனாக விளங்கும் தூணைக் காட்டினான். வியப்படைந்த சிற்பி, திரும்பிப் பார்த்தபோது சிறுவனைக் காணவில்லை.

வந்தது ஸ்ரீகுருவாயூரப்பனே என்பதை உணர்ந்த தலைமைச் சிற்பி, அந்தத் தூணையே அங்கு நிறுவினார்.

இதன் மேல் பகுதியில் புராண சம்பவங்களை விளக்கும் ஓவியங்களுடன் மகாத்மா காந்தியின் உருவப்படமும் உள்ளது தனிச்சிறப்பு!

கருவறையில், அணையாமல் எரியும் நெய் விளக்கு ஒளியில் ஜோதியாக மின்னுகிறான் ஸ்ரீகுருவாயூரப்பன். குருவாயூரப்பனை, உன்னி (குழந்தை) கிருஷ்ணன் என்கிறார்கள் பக்தர்கள்.

இங்கு சன்னிதியில் பிரசாதம் தரப்படுவதில்லை.

வடக்குப் பிரகாரத்தில் மட்டுமே சந்தனம் போன்ற பிரசாதங்களைத் தருவார்கள்.

ஸ்ரீகுருவாயூரப்பனுக்கு பாயசம் நிவேதிக்க மாதம் ஒன்றுக்குத் தேவைப்படும் சர்க்கரை, ஐந்து டன்னுக்கும் அதிகம் என்கிறார்கள்.

குருவாயூர் கோவிலில் நடைபெறும் லட்சதீப பெரு விழாவின் 19 நாட்களிலும் ஒவ்வொரு நாள் விளக்கேற்றும் பொறுப்பை ஒவ்வோர் உள்ளூர் அமைப்பும் ஏற்றுக் கொள்கிறது.

6-வது நாள் முறையை அந்த ஊர் போலீஸ் ஸ்டேஷன் ஏற்றுக் கொள்கிறது.

குருவாயூரை தரிசியுங்கள். குருவாயூரப்பனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும். 

மேலும் செய்திகள்