திதிகளின் வழிபாடு

லலிதா பரமேஸ்வரியை ஸ்ரீசக்கர ரூபத்தில் வழிபடும் முறை ‘ஸ்ரீவித்யை’ எனப் போற்றப்படுகிறது.

Update: 2018-07-18 06:24 GMT
 ஸ்ரீவித்யை தேவியின் அம்ருத கலைகள், பதினைந்து பாகங்களாகப் பிரிந்து ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக உருவம் பெற்று பதினைந்து நித்யா தேவிகளாக தேவியைச் சுற்றி கொலுவீற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் அம்பிகையின் ஓர் அங்கமாக பாவிக்கப்படுகின்றனர்.

பவுர்ணமியுடன் முடிவடையும் சுக்லபட்சம் (வளர்பிறை) 15 நாட்களும், அமாவாசையுடன் முடிவடையும் கிருஷ்ண பட்சம் (தேய்பிறை) 15 நாட்களுமாக ஒரு மாதத்தின் இரு பிரிவுகளாக அமைந்துள்ளன. மகா நித்யாவின் கலைகளில் தோன்றிய பதினைந்து திதி நித்யாக்களும், ஒவ்வொரு பட்சத்திற்கும் ஒருநாள் என மாதத்தில் இரு நாட்கள் இப்பிரபஞ்சத்தை நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கொள்கின்றனர்.

தெய்வங்களை கோகுலாஷ்டமி, ராமநவமி போன்ற திதிகளிலும், முன்னோர்கள் கடன்களை அமாவாசை அல்லது அவர்கள் இறந்த திதிகளிலும் நாம் வழிபட்டு வருகிறோம். ஆனால், அதே நாளில் இந்தத் திதிக்குரிய தேவதைகளை நாம் வழிபடுவதில்லை. அதனால் கூட நமக்கு உரிய முழு பலன்களும் கிடைப்பதில்லை என்று சொல்லலாம். ஒவ்வொரு திதியையும் பரிபாலனம் செய்யும் மூல தேவிகளை நாம் மறவாமல் வழிபட்டால், வறுமை நீங்கும். அனைத்து துன்பங்களும் விலகும். திதிக்குரிய அன்னையர்களின் தோற்றம் மற்றும் வழிபடும் நாட்கள், பலன்கள் என்னென்ன? என்பதை இங்கே பார்க்கலாம்.

1 காமேஸ்வரி

‘காம’ என்றால், ‘விரும்பிய ரூபத்தை எடுக்கக் கூடியவள்’ என்று பொருள். இவள் கோடி சூரிய பிரகாசமானவள். மாணிக்க மகுடம் தரித்து, பொன்னாலான மரகத மாலை, ஒட்டியாணம் போன்ற அணி கலன்களை அணிந்திருப் பாள். முக்கண், ஆறு திருக் கரங்கள் கொண்டவள். தன் திருக் கரங்களில் கரும்பு வில், மலரம் புகள், பாசக்கயிறு, அங்குசம், அமிர்த பாத்திரம் மற்றும் வரத முத்திரையுடன் பிறை சூடிய திருமுடியைக் கொண்டவள்.

மந்திரம்:

ஓம் காமேஸ்வர்யை வித்மஹே
நித்யக்லின்னாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்


வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பட்ச பிரதமை, அமாவாசை.

பலன்கள்: குடும்பத்தில் ஆனந் தம், தனவரவு, மன நிறைவான தாம்பத்ய வாழ்க்கை அமையும்.

2 பகமாலினி

இந்த நித்யா தேவியின் மந்திரத்திலும், இவளின் பரிவார தேவதைகளின் மந்திரங்களிலும் ‘பக’ எனும் சப்தம் அடிக்கடி விடுவதால், இவள் பகமாலினி என்று அழைக்கப்படுகிறாள். ‘பகம்’ என்ற சொல்லுக்கு பரிபூரணமான ஐஸ்வரியம், தர்மம், தேஜஸ், ஞானம், வைராக்கியம், வீரியம், முக்தி என்றெல்லாம் பொரு ளுண்டு. முக்கண்களுடனும் இடது கரங்களில் அல்லி மலர், பாசக்கயிறு, கரும்பு வில் ஏந்தியும், வலது கரங்களில் தாமரை, அங்குசம், புஷ்ப பாணங்களை தரித்தும் தோற்றம் தரு கிறாள்.

மந்திரம்:

ஓம் பகமாலின்யை வித்மஹே
ஸர்வ வஸங்கர்யை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்


வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பட்ச துவிதியை, கிருஷ்ண பட்ச சதுர்த்தசி.

பலன்கள்: வாழ்வில் வெற்றி களைக் குவிக்கலாம். கர்ப்பத்தி லுள்ள சிசு பாதுகாக்கப்பட்டு, சுகப்பிரசவம் ஏற்படும்.

3 நித்யக்லின்னா

நித்யக்லின்னா என்றால் கருணை மிகுந்தவள் என்று பொருள். இவளின் மகிமையைப் பற்றி கருட புராணத்தில், ‘நித்யக்லின்னா மதோவஷயே த்ரிபுரம் புக்தி முக்திதாம்’ எனக் கூறப்பட்டுள்ளது. இந்த அம்பிகையைத் துதிப்போர் மூவுலகிலும் புக்தி சக்தியோடு வாழ்வர் என்று பொருள். இந்த தேவிக்கு ‘மதாலஸா’ என்ற பெயரும் உண்டு. தன் நான்கு கரங்களிலும், பாசம், அங்குசம், பான பாத்திரம், அபய முத்திரை தரித்தவள். அணிகலன்கள் அன்னையை அலங்கரிக்கின்றன.

மந்திரம்:

ஓம் நித்யக்லின்னாயை வித்மஹே
நித்ய மதத்ரவாய தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்


வழிபட வேண்டிய திதிகள்: சுக்லபட்ச த்ருதியை, கிருஷ்ண பட்ச திரயோதசி.

பலன்கள்: குடும்ப ஒற்றுமை ஓங்கும். வீண் தகராறுகள் வராது.

4பேருண்டா நித்யா

அனைத்து அண்டங்களிலும் நிறைந்துள்ள தேவி, அகிலத் துக்கே ஆதிகாரணியாகத் துலங் குபவள். அநேக கோடி அண்டங் களைப் படைத்தவள். அவற்றை உருவாக்கியதால் இந்த அன்னைக்கு ‘அநேக கோடி பிரமாண்ட ஜனனீ’ என்றும் ஓர் திருநாமம் உண்டு. உருக்கி வார்த்த தங்கம் போன்ற மேனியில் பட்டாடைகளையும், குண்டலங்கள், பொன் ஆரங்கள், முத்துமாலை, ஒட்டியாணம், மோதிரங்களைத் தரித்து, நிகரற்ற அழகுவல்லியாகத் திகழும் இவள் முக்கண்கள் தரித்தவள்.

மந்திரம்:

ஓம் பேருண்டாயை வித்மஹே
விஷஹராயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்


வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பட்ச சதுர்த்தி, கிருஷ்ண பட்ச துவாதசி.

பலன்கள்: விஷ ஆபத்துகளில் இருந்து மீளலாம்.

5வஹ்னி வாஸினி

அக்னி மண்டலத்தில் உறைவதால் வஹ்னி வாஸினி. அக்னி மண்டலம் நம் உடலின் மூலாதாரத்தில் உள்ளது. அங்கு குண்டலினி வடிவாய் அம்பிகை துலங்குகிறாள். வஹ்னி என்ற பதம் மூன்று என்ற எண்ணிக்கையையும் குறிக்கும். அழகே உருவாய் அருளே வடிவாய்த் திகழும் இவள் மஞ்சள் நிற பீதாம்பரம் அணிவதில் விருப்பமுள்ளவள். தன் திருக்கரங்களில் தாமரை, சங்கு, கரும்பு வில், அல்லிப்பூ, கொம்பு, மலரம்புகள், மாதுளம்பழம், அம்ருத கலசம் எனத் தரித்திருக்கின்றாள்.

மந்திரம்:

ஓம் வஹ்னி வாஸின்யை வித்மஹே
ஸித்திப்ரதாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்


வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பட்ச பஞ்சமி, கிருஷ்ண பட்ச ஏகாதசி.

பலன்கள்: நோய் தீரும். பூரண உடல் நலத்துடன், உலக இன்பங்களை பூரணமாக அனுபவிக்க இயலும்.

6மஹா வஜ்ரேஸ்வரி

லலிதாதேவி உறையும் ஸ்ரீநகரத்தின் பன்னிரண்டாம் மதில் சுற்று வஜ்ரமணியால் ஆனதென்றும், அதற்கருகில் வஜ்ரமயமான நதி ஒன்று உள்ளதென்றும், அதற்கெல்லாம் அதிதேவதை வஜ்ரேஸ்வரி எனவும் துர்வாச மகரிஷி தன் லலிதாஸ் தவரத்னத்தில் குறிப்பிட்டுள்ளார். இத்தேவி வஜ்ரம் என்ற ஆயுத ரூபமாகவும் உள்ளாள். நான்கு கரங்கள் கொண்ட இந்த அன்னை செந்நிற பூக்களால் ஆன மாலைகளை அணிந்துள்ளாள். வைடூரியம் பதித்த கிரீடமும், கைகளில் பாசம், அங்குசம், கரும்புவில், மாதுளம் பழம் தரித்து, கனிவான பார்வையுடன் தம் பக்தர்களைக் காக்கிறாள். கரங்களில் கங்கணங்கள் குலுங்க பொல்லாத முன் வினை களுக்கு அஞ்சேல் என அபய மளிப்பவள்.

மந்திரம்:

ஓம் மஹா வஜ்ரேஸ்வர்யை வித்மஹே
வஜ்ர நித்யாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.


வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பட்ச சஷ்டி, கிருஷ்ண பட்ச தசமி.

பலன்: அனைத்துத் துன்பங் களில் இருந்தும் விடுதலை.

7 சிவதூதி


இந்த நித்யா தேவி சிவனைத் தூதனாகக் கொண்டவள். சும்ப-நிசும்பருடன் அம்பிகை யுத்தம் தொடங்கும் முன் அவர்களிடம் சிவபெருமானை தூது அனுப்பிய விவரம் தேவி மஹாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. புஷ்கரம் என்ற ஷேத்திரத்திலுள்ள அம்பிகைக்கு ‘சிவதூதி’ என்று பெயர். எட்டுத் திருக்கரங்கள், மூன்று கண்கள் கொண்ட இந்த அம்பிகையின் திருமுகம் கோடைக்காலத்து சூரிய ஒளிபோல் மின்னுகிறது. நவரத்தினங்கள் இழைத்த மகுடமும் பட்டாடையும் இவளது அழகுக்கு அழகு செய்கின்றன. தன் திருக்கரங்களில் கேடயம், அரிவாள், ஷாஷகா எனும் கோப்பை, பாசம், அங்குசம், கட்கம், கதை, தாமரை ஏந்தி அழகுடன் மிளிர்கிறாள்.

மந்திரம்:

ஓம் சிவதூத்யை வித்மஹே
சிவங்கர்யை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.


வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பட்ச சப்தமி, கிருஷ்ண பட்ச நவமி.

பலன்கள்: நமக்கு எதிரான அநீதியும் அதர்மமும் அழியும். எந்த ஆபத்தும் நெருங்காது.

8த்வரிதா

இந்த நித்யா தேவிக்கு தோதலா தேவி என்ற பெயரும் உண்டு. பக்தர்களுக்கு சீக்கிரமாய் அருள்பாலிப்பதால் ‘த்வரிதா’ என்று வணங்கப்படுகிறாள். தழை களை ஆடையாக அணிந்தவள். எட்டு நாகங்களை தன் உடலில் சூடி யுள்ளாள். கருநீலநிறமான இவள் முக்கண்களுடனும் நான்கு கரங்களோடும் புன்முறுவல் பூத்த திருமுக மண்டலத்துடன் காட்சி யளிக்கிறாள். மேலும் சலங்கை, இடைமேகலை, ரத்னாபரணங் களுடன், மயில்பீலிகளைச் சூடிக் கொண்டு அலங்கார தரிசன மளிக்கிறாள்.

மந்திரம்:

ஓம் த்வரிதாயை வித்மஹே
மஹாநித்யாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.


வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பட்சஅஷ்டமி, கிருஷ்ண பட்ச அஷ்டமி.

பலன்கள்: எல்லா பயங்களும் போகும். கலைகளில் தேர்ச்சி பெற முடியும். பூரண ஆயுள் கிட்டும்.

9குலசுந்தரி

குலசுந்தரி என்பது குண்டலினி சக்தியையே குறிக்கும். நம் சரீரமே குலம். அதை இயக்குபவள் இவள். பன்னிரண்டு திருக்கரங்கள், தாமரை மலரையொத்த ஆறு திருமுகங்கள், ஒவ்வொரு முகத்திலும் முக்கண் கள் கொண்டு தாமரை பீடத்தில் அமர்ந்து அருள்பவள். திருமேனி முழுவதும் திருவாபரணங்கள் துலங்க, கரங்களில் ஜபமாலை, தாமரை, கமண்டலம், கோப்பை, மாதுளம்பழம், புத்தகம், தாமரை, எழுத்தாணி, சங்கு, வரத முத்திரை கொண்டு தரிசனம் அளிக்கிறாள்.

மந்திரம்:

ஓம் குலஸுந்தர்யை வித்மஹே
காமேஸ்வர்யை தீமஹி
தன்னோ சக்தி ப்ரசோதயாத்.


வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பட்ச நவமி, கிருஷ்ண பட்ச சப்தமி.

பலன்கள்: இந்த தேவியின் அபூர்வ அருளால் இவளை பூஜிப்பவர்கள் சர்வ ஞானமும் அடைவர். செல்வ வளமும், சொத்துக்கள் சேர்க்கையும் கிட்டும்.

10நித்யா

அழிவில்லாதவள். கால நித்யா ரூபமானவள். சர்வாத்மிகா என்ற திருநாமம் கொண்ட இத்தேவி பொருட்களை இயக்கும் சக்தியாய்த் திகழ்கிறாள். டாகினி போன்ற தேவதைகளின் அதிதேவதையாய்த் திகழும் அம்பிகையான இவள், உதயத்து சூரிய நிறம் கொண்டு பிரகாசிப்பவள். மந்தகாசமான திரு முகத்தையுடையவள். பிரகா சமான மகுடம் தரித்து தன் திருக் கரங்களில் பாசம், அங்குசம், புத்தகம், ஜபமாலை, புஷ்ப பாணம், கரும்புவில், வாள், கேடயம், கபாலம், சூலம் ஏந்தி அபயவரதம் தரித்தவள்.

மந்திரம்:

ஓம் நித்யா பைரவ்யை வித்மஹே
நித்யா நித்யாயை தீமஹி
தன்னோ யோகிநி ப்ரசோதயாத்.


வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பட்ச தசமி, கிருஷ்ண பட்ச சஷ்டி.

பலன்கள்: அனைத்துத்தொல்லை களும் தானே விலகும். தடைகள் தவிடு பொடியாகும். தோஷங்கள் தொலையும். அஷ்ட ஐஸ்வர் யங்களும் இஷ்டமுடன் வந்த டையும். தீர்க்கமான உடல் நலமும், அஷ்டமா சித்திகளும் கிட்டும்.

11நீலபதாகா

நீல நிற வடிவான இந்த நித்யா தேவி, ஐந்து திருமுகங்களும் ஒவ்வொரு முகத்திலும் முக்கண்களும் கொண்டவள். இவள் பத்து திருக்கரங்களிலும் பாசம், அங்குசம், வஜ்ராயுதம், கொடி, வாள், கேடயம், அம்பு, வில் ஏந்தி அபய, வரதம் தரித்தவள். சிவப்புப் பட்டாடை அணிந்து, முத்தாபரணங்களாலும் ஆங்காங்கே ரத்தினங்கள் இழைத்த அணிகலன்களாலும் அலங்கரித்துக் கொண்டு தாமரை மலர் மீது அமர்ந்துள்ளாள். இவளின் சாயலைப் போன்றே பல்வேறு சக்திகள் அவளைச் சூழ்ந்துள்ளன. நல்லோர்களைக் காத்து, தீயோர்களை அழிக்கும் பேரரசி இவள்.

மந்திரம்:

ஓம் நீலபதாகாயை வித்மஹே
மஹா நித்யாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்.


வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பட்ச ஏகாதசி, கிருஷ்ண பட்ச பஞ்சமி.

பலன்கள்: எடுத்த காரியங்களில் வெற்றி, தேர்வுகளில் முதன்மை.

12விஜயா


இந்த அன்னை அதிகாலை சூரியனைப் போல ஜொலிப்பவள். ஐந்து முகங்கள், பட்டாடை அணிந்து கண்களைக் கவரும் ஒளி பொருந்திய மகுடமும் நெற்றியில் பிறை நிலவு சூடியும் தோற்றமளிப்பவள். திருக்கரங்களில் சங்கு, சக்ரம், பாசம், அங்குசம், வாள், கேடயம், வில், அம்பு, மாதுளம் பழம், அல்லி மலரை ஏந்தி வலதுகாலை மடித்து இடது காலைத் தொங்கவிட்டு, பாதத்தைத் தாமரை மலரில் இருத்திய தோற்றத்துடன் காட்சி தருகிறாள். சுகாசனத்தில் அமர்ந்துள்ள இந்த அம்பிகையை போரில் வெற்றி பெற தியானம் செய்வது வழக்கம்.

மந்திரம்:

ஓம் விஜயா தேவ்யை வித்மஹே
மஹா நித்யாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்.


வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பட்ச துவாதசி, கிருஷ்ண பட்ச சதுர்த்தி.

பலன்கள்: எந்தவகை வழக்கு களிலும் வெற்றி. கலைகளில் தேர்ச்சி.

13ஸர்வ மங்களா

இந்த தேவி பொன்னிற மேனியில் நவரத்தினங்களும் இழைக்கப்பட்ட வைடூரிய மகுடம் துலங்கப் பொலிவாக காட்சி தருகிறாள். இந்த நித்யா தேவியின் கடைக்கண் பார்வை அன்பரைக் காக்கின்றது. தன் நான்கு கரங்களிலும் மாதுளம் பழம், தங்கப் பாத்திரம் ஏந்தி அபய, வரத முத்திரை தரித்து ள்ளாள். சிவப்புப் பட்டுடுத்தி ஸர்வாலங்கார பூஷிதையாய் தோற்றம் அளிக்கிறாள்.

மந்திரம்:

ஓம் ஸர்வமங்களாயை வித்மஹே
சந்த்ராத்மிகாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.


வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பட்ச திரயோதசி, கிருஷ்ண பட்ச திருதியை.

பலன்கள்: பயணங்களில் விபத்து ஏதுமின்றி பாதுகாப்பு கிட்டும். அனைத்துவித மங்களங்களும் வந்து சேரும்.

14 ஜ்வாலா மாலினி

இந்த நித்யா தேவி நெருப்பு ஜுவாலை ரூபமாய் இருப்பவள். பண்டாசுரனுடன் லலிதாதேவி நடத்திய யுத்தத்தில் நூறு யோஜனை நீளமும், முப்பது யோஜ னை அகலமும் முப்பது யோஜ னை உயரமும், கொண்ட நெருப்புக் கோட்டையைப் படைத்தவள். அக்னியையே மாலையாகக் கொண்டவள். இந்த அம்பிகையின் வித்யை அறுபது அட்சரங் களைக் கொண்டது. வைடூரிய மகுடம் அணிந்து அக்னி ஜுவாலையைப் போல் சிவந்து காட்சியளிக்கும் இத்தேவிக்கு ஆறுமுகமும் பன்னிரு கரங்களும் உள்ளன. கரங்களில் அங்குசம், கத்தி, வில், நெருப்பு, கதை, பாசம், கேடயம், தாமரை, சூலம், அம்பு, அபயம், வரதம் தாங்கியுள்ளாள்.

மந்திரம்:

ஓம் ஜ்வாலாமாலின்யை வித்மஹே
மஹாஜ்வாலாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்.


வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பட்ச சதுர்த்தசி, கிருஷ்ண பட்ச துவிதியை

பலன்கள்: எந்தத் துன்பமும் தீயிலிட்ட பஞ்சுபோல் ஆகும். பகைவர்கள் அழிவர்.

15 சித்ரா

திதி நித்யா தேவிகளில் பதினைந்தாம் நித்யா தேவியான சித்ரா, பளபளவென மின்னும் கிரகணங் களை வீசிடும் திருமேனியவள். பல்வேறு ரத்தினங்கள் பதித்த மகுடத்தில் பிறைமதி சூடியவள். வெண்பட்டாடை உடுத்தி, பலவகையான ஆபரணங்களை மேனி முழுதும் அணிந்து அழகே வடிவாய்த் திகழ்கின்றாள். பாசம், அங்குசம், அபயம், வரதம் தரித்த நான்கு திருக்கரங்கள் கொண்ட இவள், பக்தர்களின் பயத்தை நாசம் செய்பவள். சர்வானந்தமயி. என்றும் நிலையானவள்.

மந்திரம்:

ஓம் விசித்ராயை வித்மஹே
மஹா நித்யாயை தீமஹி
தன்னோ தேவிப்ரசோதயாத்.


வழிபட வேண்டிய திதிகள்: பவுர்ணமி, கிருஷ்ண பட்ச பிரதமை.

பலன்கள்: திடீர் அதிர்ஷ்டமும், பெரும் செல்வமும் சேரும். 

மேலும் செய்திகள்