‘படகோட்டி’ ராமபிரான்
14 ஆண்டுகள் வனவாசம் செல்ல ஒப்புக்கொண்ட ராமபிரான், தன்னுடைய சகோதரன் லட்சுமணன், மனைவி சீதாதேவி ஆகியோருடன் காட்டிற்குள் சென்றார்.;
அங்கு ஒரு நதியைக் கடக்க அவர்களுக்கு உதவிபுரிய வந்தவர், மீனவரான படகோட்டும் பணியைச் செய்து வந்த குகன். நதியைக் கடந்து அக்கறைக்குச் சென்றதும் ராமபிரான், “குகா.. நீ எங்களுக்கு உதவி செய்திருக்கிறாய். இப்போது உனக்கான கூலியைக் கொடுக்க எங்களிடம் எந்த பொருளும் இல்லை” என்றார்.
அதைக் கேட்ட குகன், “ராமா.. ஒரே தொழில் செய்பவர்கள், தங்களுக்குள் கூலி வாங்குவது முறையாகாது” என்றார்.
வியப்பு மேலிட குகனைப் பார்த்த ராமர், “ஆனால்.. நான் படகோட்டி இல்லையே” என்றார்.
அதற்கு பதிலளித்த குகன், “ராமரே.. இந்த ஆற்றை கடக்கும் படகுதான் என்னிடம் இருக்கிறது. ஆனால் நீங்களோ ‘பிறவி’ என்னும் பெருங்கடலையே கடக்க உதவுபவராக இருக்கிறீர்கள். அந்த வகையில் நீங்களும் படகோட்டிதானே” என்றார்.
குகனை தன் மார்போடு இறுக அணைத்துக் கொண்டார், ராமபிரான்.