ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய வீரர்கள் மே 8-ந் தேதி தேர்வு

ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களில் விளையாடும் இந்திய வீரர்களின் தேர்வு வரும் மே 8-ந் தேதி நடக்கவிருப்பதாக பிசிசிஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது #BCCISelection

Update: 2018-05-04 02:14 GMT
புதுடெல்லி,

வரலாற்றில் முதல் முறையாக ஆப்கானிஸ்தான் அணி, இந்திய அணியுடன் டெஸ்ட் போட்டி ஒன்றில் வரும் ஜூன் 14-ந் தேதி விளையாட இருக்கிறது. இரு அணிகளும் மோதும் இந்த டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஜூன் 14 முதல் 18 வரை நடக்கிறது. 

மேலும் ஜூன் 27 மற்றும் 29 ஆகிய நாட்களில் இந்திய அணி, அயர்லாந்து அணியுடன் இரண்டு ஒரு நாள் போட்டிகளில் அயர்லாந்து தலைநகர் டப்லினில் எதிர்கொள்ள இருக்கிறது. அதே மாதத்தில் இந்திய ஏ பிரிவு அணியினரும் இங்கிலாந்து அணியுடன் மோதவிருக்கின்றனர். இந்நிலையில் இந்த போட்டிகளில் விளையாடும் இந்திய அணியை பி.சி.சி.ஐ நிர்வாகம் வரும் மே 8-ந் தேதி தேர்வு செய்ய இருக்கிறது. 

அதே நேரத்தில், இங்கிலாந்தின் முன்னணி கவுன்டி அணியான சர்ரே விராட் கோலியை ஒப்பந்தம் செய்துள்ளதால் விராட் கோலி ஜூன் மாதம் முழுவதும் அந்த அணிக்காக விளையாட இருக்கிறார். மேலும் இஷான் சர்மாவும் கவுண்டி தொடரில் விளையாட இருப்பதால் இருவரும் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களில் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது. 

இந்திய ஏ பிரிவு அணியினர், இங்கிலாந்து அணியை ஜூன் 21-ந் தேதி எதிர்கொள்கின்றனர். இந்நிலையில் இந்திய ஏ பிரிவில் ரகானே, முரளி விஜய், ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா உட்பட 7 மூத்த வீரர்கள் விளையாட இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. 

மேலும் செய்திகள்