மக்களின் நம்பிக்கையை பெற கடினமாக உழைப்பேன் - ஸ்டீவன் சுமித் உருக்கம்

மக்களின் நம்பிக்கையை பெற கடினமாக உழைப்பேன் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் கூறினார்.

Update: 2018-05-04 23:00 GMT
மெல்போர்ன்,

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித்தின் செயல்பாடு குறித்து விமர்சனங்கள் எழுந்தன. நடந்த சம்பவத்துக்கு ஏற்கனவே வருத்தம் தெரிவித்து இருந்த ஸ்டீவன் சுமித் வெளிநாடு சென்று விட்டு ஆஸ்திரேலிய திரும்பி இருக்கிறார். இந்த நிலையில் ஸ்டீவன் சுமித் தனது இன்ஸ்டாகிராமில் கருத்தை பதிவு செய்து இருக்கிறார். அதில், ‘ஆஸ்திரேலியாவுக்கு திரும்பி இருப்பது சிறப்பானதாகும். எனக்கு வந்த இ-மெயில்கள், ஆதரவு கடிதங்களின் எண்ணிக்கை நம்ப முடியாத வகையில் இருந்தது. உங்களின் ஏகோபித்த ஆதரவு என்னை எளிமையாக்கி விட்டது.

தற்போது நான் உங்களது நம்பிக்கையை மீண்டும் பெற கடுமையாக உழைக்க வேண்டும். என்னுடைய இந்த கடினமான தருணத்தில் எனது தாய், தந்தை, மனைவி ஆகியோர் எனக்கு நல்ல அரணாக இருந்தார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள் போதாது. உலகத்தில் குடும்பம் தான் மிகவும் முக்கியமானது. உங்களது அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்