ஐபிஎல்: சதம் விளாசினார் ரிஷாப் பாண்ட், 187 ரன்களை குவித்தது டெல்லி டேர்வில்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐதராபாத் அணிக்கு 188 ரன்களை வெற்றி இலக்காக டெல்லி அணி நிர்ணையித்துள்ளது. #IPL #DD

Update: 2018-05-10 16:16 GMT

புதுடெல்லி,

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 42–வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி, ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகளும் மோதின. இந்த போட்டியில், டாஸ் வென்ற டெல்லிடேர்டெவில்ஸ்  அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் ஐதராபாத் அணியை பந்து வீசுமாறு பணித்தார். 

இதன்படி முதலில், பேட்டிங்கை துவங்கிய டெல்லி அணி, 21 ரன்களில் முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. டெல்லி அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். மற்றொரு துவக்க வீரர் ஜோஷன் ராய் 11 ரன்களில் வெளியேறினார். இவர்கள் இருவரையும் ஷகிப் அல் ஹாசன் அடுத்தடுத்து ஆட்டமிழக்க வைத்தார். 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்( 3 ரன்கள்) ரன் அவுட் மூலம் வெளியேறினார். 

4-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய ரிஷப் பாண்ட், தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். ரிஷாப் பாண்ட்  சிக்சரும், பவுண்டரிகளுமாக விளாசித்தள்ளினார். ரிஷாப் பாண்டை கட்டுப்படுத்த முடியாமல் ஐதராபாத் பந்து வீச்சாளர்கள் தடுமாறினர். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷாப் பாண்ட் சதம் அடித்து அசத்தினார். நடப்பு ஐபிஎல் தொடரில் இந்திய வீரர் ஒருவர் சதம் அடிப்பது இதுதான் முதல் தடவையாகும். ஒட்டு மொத்தமாக இந்த ஆண்டு ஐபிஎல்லில் அடிக்கப்பட்ட 3-வது சதம் இதுவாகும். 

தொடர்ந்து களத்தில் ரன்வேட்டையாடிய ரிஷப் பாண்ட், 128 (63 பந்துகள், 15 பவுண்டரிகள், 7 சிக்சர்கள்)  ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். மேக்ஸ்வெல் 9  ரன்களுடன் இருந்தார். டெல்லி அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்தது.  இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி பேட்டிங் செய்து வருகிறது. 

மேலும் செய்திகள்