ராஜஸ்தானிடம் வீழ்ந்தது சென்னை: ‘‘பட்லருக்கு எதிரான வியூகம் எடுபடவில்லை’’ பயிற்சியாளர் பிளமிங் பேட்டி

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்தது குறித்து பேசிய சென்னை அணியின் பயிற்சியாளர் பிளமிங், பட்லருக்கு எதிரான வியூகம் எடுபடாமல் போய் விட்டதாக கூறியுள்ளார்.

Update: 2018-05-12 21:30 GMT

ஜெய்ப்பூர், 

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்தது குறித்து பேசிய சென்னை அணியின் பயிற்சியாளர் பிளமிங், பட்லருக்கு எதிரான வியூகம் எடுபடாமல் போய் விட்டதாக கூறியுள்ளார்.

சென்னை அணி தோல்வி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு ஜெய்ப்பூரில் நடந்த லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி ஒரு பந்து மீதம் வைத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி திரில் வெற்றியை பெற்றது.

இதில் சுரேஷ் ரெய்னா (52 ரன்), வாட்சன் (39 ரன்), கேப்டன் டோனி (33 ரன்) ஆகியோரின் கணிசமான பங்களிப்புடன் சென்னை அணி நிர்ணயித்த 177 ரன்கள் இலக்கை ராஜஸ்தான் அணி 19.5 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் 95 ரன்கள் விளாசி (60 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) கடைசி வரை களத்தில் நின்றார். கடைசி ஓவரில் ராஜஸ்தானின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட போது, சிக்சர் உள்பட 12 ரன்களையும் பட்லரே திரட்டி மிரள வைத்தார். சென்னை அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணியின் அதிகபட்ச ‘சேசிங்’ இதுவாகும்.

பிளமிங் பேட்டி

தோல்விக்கு பிறகு சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் நிருபர்களிடம் கூறுகையில், ‘கடினமான இந்த ஆடுகளத்தில் பட்லர் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதுவும் இன்னிங்ஸ் முழுவதும் விளையாடியது வியப்புக்குரியது. அவர் ஆடிய விதம் எங்களது பந்து வீச்சாளர்களுக்கு கொஞ்சம் நெருக்கடியை ஏற்படுத்தி விட்டது.

பட்லருக்கு எதிராக நாங்கள் நிறைய திட்டங்களை வகுத்திருந்தோம். இதில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் மூலம் அவரை விரைவில் சாய்க்க வேண்டும் என்பதும் ஒன்றாகும். ஆனால் எங்களது வியூகத்திற்கு பலன் கிடைக்கவில்லை. அவரை சீக்கிரம் வீழ்த்தியிருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும்.

இந்த ஆடுகளத்தில் ரன் எடுப்பது எளிதான வி‌ஷயம் அல்ல. அதனால் நாங்கள் எடுத்த ஸ்கோர் எனக்கு திருப்தி தான். ஆனால் பட்லரின் பேட்டிங் தான் ஒட்டுமொத்த ஆட்டத்தின் முடிவை தீர்மானிப்பதாக அமைந்து விட்டது. நாங்கள் இன்னும் துல்லியமாக பந்து வீசியிருக்க வேண்டும்’ என்றார்.

பவுலர்கள் மீது டோனி சாடல்

சென்னை கேப்டன் டோனி கூறுகையில், ‘நாங்கள் குறிப்பிட்ட உயரத்தில் சரியான அளவில் (லெந்த்) பந்து வீசியிருக்க வேண்டும். எந்த மாதிரி பந்து வீச வேண்டும் என்று பவுலர்களுக்கு தெளிவாக அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அதை களத்தில் சரியாக செயல்படுத்தவில்லை. 176 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர் தான். பந்து வீச்சாளர்கள் சொதப்பி விட்டனர்’ என்றார்.

மேலும் செய்திகள்