மும்பை அணி நீடிக்குமா? வெளியேறுமா? - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் இன்று பலப்பரிட்சை

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.

Update: 2018-05-15 23:30 GMT
மும்பை,

நடப்பு சாம்பியன் மும்பை அணி 5 வெற்றி, 7 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் பட்டியலில் 6-வது இடம் வகிக்கிறது. எஞ்சிய இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணியால் அடுத்த சுற்றுக்குள் நுழைவது குறித்து யோசித்து பார்க்க முடியும். ஒன்றில் தோற்றாலும் நடையை கட்ட வேண்டியது தான். முந்தைய ஆட்டத்தில் ராஜஸ்தானிடம் தோல்வியை தழுவிய மும்பை அணிக்கு மிடில் வரிசை அவ்வப்போது சொதப்பி விடுகிறது. கேப்டன் ரோகித் சர்மா நடப்பு தொடரில் 3 முறை டக்-அவுட் ஆகி இருக்கிறார். அவர் பார்முக்கு திரும்பினால், அந்த அணியின் பேட்டிங் வரிசை வலுவடையும். இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு ஒத்துழைக்கக்கூடியது என்பதால் கணிசமான ரன்கள் குவிக்க வேண்டியது அவசியமாகும்.

அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மீது யார் கண்பட்டதோ தெரியவில்லை. முதல் 6 ஆட்டங்களில் 5-ல் வெற்றி பெற்று பட்டையை கிளப்பிய பஞ்சாப் அணி அடுத்த 6 ஆட்டங்களில் 5-ல் தோற்று இப்போது தகிடுதத்தம் போட்டுக் கொண்டு இருக்கிறது. பெங்களூருவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 88 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை சந்தித்த பஞ்சாப் அணிக்கு இன்னும் 2 லீக் ஆட்டங்கள் உள்ளன. இரண்டிலும் வெற்றி பெற்றால் சிக்கலின்றி ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பை எட்டலாம். ஒன்றில் வெற்றி பெற்று, மற்றொன்றில் தோற்றால் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டி இருக்கும். பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் லோகேஷ் ராகுல் (558 ரன்), கிறிஸ் கெய்ல் (350 ரன்) தவிர மற்றவர்களின் பங்களிப்பு பெரிய அளவில் இல்லாததே திடீர் பின்னடைவுக்கு காரணமாகும். கடந்த சில ஆட்டங்களில் ஆடாத யுவராஜ்சிங் இந்த ஆட்டத்தில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.

இரு அணிகளுக்குமே இது வாழ்வா? சாவா? மோதல் என்பதால் இரண்டு அணி வீரர்களும் களத்தில் கடுமையாக மல்லுகட்டுவார்கள் என்று நம்பலாம். இவ்விரு அணிகளும் ஏற்கனவே இந்தூரில் சந்தித்த ஆட்டத்தில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது

மேலும் செய்திகள்