டெஸ்ட் போட்டிகளில் டாஸ் போடும் முறையை கைவிட ஐசிசி திட்டம்?
டெஸ்ட் போட்டிகளில் டாஸ் போடும் முறையை கைவிட ஐசிசி பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேப்டவுன்
அந்தந்த நாடுகளில் நடக்கும் டெஸ்ட் தொடரின் போது, பிட்ச் உள்ளிட்ட சாதக சூழல்களை போட்டி நடக்கும் நாடுகள் தங்களுக்கு சாதகமாக அமைத்து கொள்கின்றன. இதனால் போட்டிகளின் முடிவு ஒருதலைபட்சமாக அமைகிறது என ஐசிசி கருதுகிறது.
அதனால் டாஸ் போடும் முறையை கைவிட ஐசிசி பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக ஸ்போர்ட்ஸ் இணையதளம் இஎஸ்பிஎன் செய்தி வெளியிட்டுள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் சொந்த நாட்டின் சூழலை சாதகமாக பயன்படுத்துவதை தடுக்கும் விதமாக, டாஸ் போடும் முறையை கைவிட பரிசீலிக்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் அணியின் கேப்டன், பேட்டிங்கா பவுலிங்கா என்பதை டாஸ் போடாமலே தேர்வு செய்யலாம். இதன்மூலம் போட்டி நடைபெறும் நாட்டு அணி, பிட்ச் உள்ளிட்ட சில சூழல்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தாதவாறு தடுக்க ஐசிசி திட்டமிட்டு உள்ளது.
2019-ல் இங்கிலாந்தில் நடைபெற உள்ள ஆஷஸ் தொடரில் இந்த முயற்சியை பரிசோதனை செய்ய உள்ளதாகவும் ஐசிசி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.