கங்குலியின் வாழ்க்கை சினிமா படமாகிறது

சச்சின், தோனியைத் தொடர்ந்து கங்குலியின் வாழ்க்கை சினிமா படமாகிறது. #SouravGanguly

Update: 2018-05-22 08:53 GMT
கொல்கத்தா,

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்கை திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது .

இந்திய கிரிக்கெட் வீரர்கள் டெண்டுல்கர், மகேந்திர சிங் டோனி ஆகியோரின் வாழ்க்கை ஏற்கெனவே திரைப்படங்களாக வெளியாகியுள்ளன. பெரும் வரவேற்பைப் பெற்று ஹிட்டான அந்தப் படங்களைத் தொடர்ந்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பந்துவீச்சாளர் ஜூலான் கோஸ்வாமி குறித்த படமும் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாலாஜி டெலிஃபிலிம்ஸ் லிமிடெட் சார்பில், பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான ஏக்தா கபூர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கையை சினிமாவாக உருவாக்க இருக்கிறார். அண்மையில் கங்குலி "ஏ செஞ்சுரி இஸ் நாட் எனாப்” என்ற தலைப்பில் தன் சுயசரிதை நூலை வெளியிட்டார். கிரிக்கெட் ரசிகர்களைக் கவர்ந்துள்ள இந்தப் புத்தகத்தின் அடிப்படையிலேயே திரைக்கதை அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கங்குலி, "இப்போதுதான் ஏக்தா கபூரின் பாலாஜி தயாரிப்பு நிறுவனத்திடம் பேசினேன். விரைவில் முழுமையான விவரங்களை கூறுகிறேன்" என்று தெரிவித்தார்.

கங்குலியின் இந்த புத்தகம் (ஏ செஞ்சுரி இஸ் நாட் எனாப்), கிரிக்கெட்டின் அவரது நீண்ட கால வாழ்க்கையில் மிக முக்கியமான தருணங்களை விவரிக்கிறது. மேலும் கிரிக்கெட் உலகில் அவரது பயணத்தை வெளிபடுத்துவதாக அமைந்துள்ளது. இதன் மூலம் ரசிகர்கள் திரையில் சவுரவ் கங்குலியின் வாழ்க்கைக்கதையை சினிமாவாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

மேலும் செய்திகள்