ஐ.பி.எல். போட்டியின் போது காயம்: கவுண்டி கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி விலகல்

ஐ.பி.எல். போட்டியின் போது காயமடைந்த இந்திய கேப்டன் விராட் கோலி கவுண்டி கிரிக்கெட்டில் இருந்து விலகியுள்ளார்.

Update: 2018-05-24 21:30 GMT

புதுடெல்லி, 

ஐ.பி.எல். போட்டியின் போது காயமடைந்த இந்திய கேப்டன் விராட் கோலி கவுண்டி கிரிக்கெட்டில் இருந்து விலகியுள்ளார்.

விராட் கோலி காயம்

இந்திய கிரிக்கெட் அணி ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டி, மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடருக்கு தன்னை நன்கு தயார்படுத்தும் வகையில் அங்குள்ள கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட இந்திய கேப்டன் 29 வயதான விராட் கோலி முடிவு செய்தார். சுர்ரே கவுண்டி அணிக்காக ஒப்பந்தம் ஆகியிருந்த விராட் கோலி ஒரு மாத காலம் ஆட திட்டமிட்டு இருந்தார்.

இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியின் போது, அவர் கழுத்தில் காயமடைந்திருந்த வி‌ஷயம் தற்போது தெரிய வந்துள்ளது. கவுண்டி போட்டியில் விளையாடினால் அதன் மூலம் காயத்தன்மை அதிகமாகி இங்கிலாந்து தொடரில் ஆட முடியாமல் போகக்கூடும் என்று அவரை டாக்டர்கள் எச்சரித்தனர். இதையடுத்து கவுண்டி போட்டியில் விளையாடும் முடிவை அவர் கைவிட்டு இருக்கிறார். இன்னும் மூன்று வாரங்கள் அவர் எந்த பயிற்சியிலும் ஈடுபடாமல் ஓய்வில் இருப்பார்.

உடல்தகுதி சோதனை

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘ இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்– ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் இடையே பெங்களூருவில் நடந்த லீக் ஆட்டத்தின் போது பீல்டிங் செய்கையில் கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் ஜூன் மாதம் சுர்ரே கவுண்டி அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். காயம் காரணமாக அந்த கவுண்டி போட்டியில் இருந்து அவர் விலகி இருக்கிறார். கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ குழுவினர் மற்றும் சிறப்பு நிபுணர் மூலம் ஸ்கேன் எடுத்து காயத்தன்மையை முழுமையாக ஆராய்ந்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜூன் 15–ந்தேதியில் இருந்து பெங்களூரு கிரிக்கெட் அகாடமியில் மீண்டும் உடல்தகுதியை எட்டுவதற்கான பயிற்சி முறைகளை அவர் மேற்கொள்வார். அயர்லாந்து தொடருக்கு முன்பாக அவருக்கு உடல்தகுதி சோதனை நடத்தப்படும். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்குள் கோலி முழு உடல்தகுதியை எட்டிவிடுவார் என்று நம்புகிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்