தமிழ்நாடு பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் தேர்வு சென்னையில் நடக்கிறது

தமிழ்நாடு பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் தேர்வு சென்னையில் இன்று நடக்கிறது.

Update: 2018-05-30 23:30 GMT
சென்னை,

கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாடு பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆண்டுக்கான 3-வது தமிழ்நாடு பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூலை 11-ந் தேதி தொடங்குகிறது.

இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், டூட்டி பேட்ரியாட்ஸ், கோவை கிங்ஸ், மதுரை பேந்தர்ஸ், திருச்சி வாரியர்ஸ், காஞ்சி வீரன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன.

3-வது சீசனுக்கான வீரர்கள் தேர்வு சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு தொடங்கி நடக்கிறது. இந்த போட்டிக்காக மொத்தம் 772 வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்து இருக்கிறார்கள். இதில் இருந்து 8 அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்யும். வீரர்கள் தேர்வு நிகழ்ச்சியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் எல்.சிவராமகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார்.

ஒவ்வொரு அணியும் ஏற்கனவே 3 வீரர்களை தக்க வைத்து இருக்கின்றன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி எஸ்.கார்த்திக், ஆர்.அலெக்சாண்டர், சசிதேவ் ஆகிய வீரர்களை தக்க வைத்துள்ளது. ஒவ்வொரு அணியும் தலா 18 முதல் 19 வீரர்களை எடுக்கலாம். அவர்களில் 2 பேர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களாகவும், மூன்று பேர் 19 வயதுக்கு உட்பட்ட வீரர்களாகவும் இருக்க வேண்டியது கட்டாயமாகும்.

வீரர்கள் ‘ஏ’, ‘பி’, ‘சி’ என மூன்று விதமாக பிரிக்கப்பட்டுள்ளனர். ‘ஏ’ பிரிவு வீரர்களின் விலை ரூ.5 லட்சம், ரூ.4 லட்சம், ரூ.3 லட்சம் எனவும், ‘பி’ பிரிவு வீரர்களின் விலை ரூ.2½ லட்சம், ரூ.2 லட்சம், ரூ.1½ லட்சம் எனவும், ‘சி’ பிரிவு வீரர்களின் விலை ரூ.1 லட்சம், ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்