ஆசிய கோப்பை பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி

ஆசிய கோப்பை பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தாய்லாந்து அணியை 66 ரன்களில் சுருட்டி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. #WomensT20AsiaCup

Update: 2018-06-04 12:23 GMT
கோலாலம்பூர்,

பெண்களுக்கான ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, மலேசியா, வங்காளதேசம், தாய்லாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் மலேசியாவை 142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் தாய்லாந்தை எதிர் கொண்டது.

கோலாலம்பூரில் நடைபெற்ற தாய்லாந்துக்கு எதிரான இந்த ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட் செய்தது. 20 ஓவர் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மெஸ்ராம் 32 ரன்கள் எடுத்தார். 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தாய்லாந்து அணி 66 ரன்களில் சுருண்டது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக கவூர் 3 விக்கெட்டும், சர்மா 2 விக்கெட்டும், பூஜா மற்றும் பூமை யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன் மூலம் மகளிருக்கான ஆசிய கோப்பை இருபது ஓவர் தொடரில் இந்திய அணி தனது 2வது வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணி 3-வது லீக் ஆட்டத்தில் வங்காளதேச அணியை எதிர்கொள்கிறது.

மேலும் செய்திகள்