பேட்டின் கைப்பிடியில் மோசமான வார்த்தை: சர்ச்சையில் சிக்கிய இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஸ் பட்லர்

இங்கிலாந்தில் உள்ள லீட்சில் சில தினங்களுக்கு முன்பு நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் முதல் இன்னிங்சில் ஆட்டம் இழக்காமல் 80 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவியதுடன், ஆட்டநாயகன் விருதும் பெற்றார்.

Update: 2018-06-05 21:30 GMT

லண்டன்,

இங்கிலாந்தில் உள்ள லீட்சில் சில தினங்களுக்கு முன்பு நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் முதல் இன்னிங்சில் ஆட்டம் இழக்காமல் 80 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவியதுடன், ஆட்டநாயகன் விருதும் பெற்றார்.

இந்த போட்டியின் போது ஜோஸ்பட்லர் பேட்டிங் செய்ததை டெலிவி‌ஷனில் பார்த்த ரசிகர்களுக்கு பெருத்த அதிர்ச்சி காத்து இருந்தது. அவரது பேட்டின் கைப்பிடி பகுதியில் ஆங்கிலத்தில் எழுதி இருந்த ஒரு வார்த்தை அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது. மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய சர்வதேச கிரிக்கெட் வீரர் ஒருவரின் பேட்டில் இருந்த இந்த தகாத வார்த்தை குறித்து பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனம் செய்துள்ளனர். சமூக வலைதளங்களிலும் ஜோஸ் பட்லரின் பேட்டில் இடம் பெற்று இருந்த வார்த்தை குறித்து அதிக கண்டனங்கள் எழுந்தன.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) அனுமதி பெறாமல் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் யாரும் தங்களது சீருடை மற்றும் பேட் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களில் எத்தகைய வாசகத்தையும் எழுதக்கூடாது என்பது வீரர்களின் நடத்தை விதிமுறையாகும். ஆனால் அந்த விதிமுறையை மீறி செயல்பட்டு இருப்பதால் ஜோஸ் பட்லர் பலத்த சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அவர் மீது ஐ.சி.சி. ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று தெரிகிறது. இந்த சர்ச்சை குறித்து ஜோஸ் பட்லரிடம் கருத்து கேட்ட போது, ‘விளையாடும் போது எனக்கு தானே உத்வேகம் அளிக்கவே இது மாதிரி எழுதினேன். மற்றபடி யாரையும் காயப்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை’ என்றார்.

மேலும் செய்திகள்