வீட்டில் சிங்கம் வளர்க்கும் கிரிக்கெட் வீரர்
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான அப்ரிடி தன் வீட்டில் சிங்கம் வளர்ப்பதை உறுதி செய்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். #ShahidAfridi
பாகிஸ்தான் அணியில் நட்சத்திர வீரராக வலம் வந்தவர் சயித் அப்ரிடி. இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றார். சமீபத்தில் லண்டனில் நடந்த மேற்கிந்தியத்தீவுகள் எதிரான ஐசிசி வேர்ல்டு லெவன் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்பதில் இருந்தும் விடை பெற்றார்.
இந்நிலையில் அப்ரிடி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தனது நான்கு மகள்களுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதில், ஒரு மகளோடுஉடற்பயிற்சிக்கூடத்தில் இருப்பதுபோன்றும், அடுத்த படத்தில் அப்ரிடி வீட்டில் வளர்க்கும் மானுக்கு பாலூட்டுவது போன்றும், மற்றொரு படத்தில் அப்ரிடியின் மகள் அஜ்வா நிற்பது போலவும், அவருக்குப் பின்னால் ஒரு பெரிய சிங்கம் படுத்திருப்பதுபோலவும் இருந்தது. அப்ரிடியின் மகளுக்குப் பின்னால் சிங்கம் படுத்திருக்கும் காட்சியைப் பார்த்த இணையவாசிகள் சிலர் அதற்கு கருத்து தெரிவித்துள்ளனர்.
அதில் ஒருவர், உண்மையிலேயே சிங்கம் வளர்க்கிறீர்களா அப்ரிடி? வீட்டில் ஆபத்தான விலங்கு சிங்கத்தை வளர்ப்பது தவறு, குழந்தையுடன் சிங்கத்தை பழகவிடாதீர்கள், மானையும், சிங்கத்தையும் ஒன்றாக வளர்க்காதீர்கள், நீங்கள் செய்வது சட்டப்படி தவறு என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்த புகைப்படம் உண்மை தான் வீட்டில் எடுத்ததா? இல்லை வெளியில் எடுத்ததா என்று பலரும் யோசித்து கொண்டிருக்கும் நிலையில், அப்ரிடி தன் வீட்டில் சிங்கம் வளர்ப்பதை உறுதி செய்யும் வகையில் அதன் அருகே இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
Great to spend time with loved ones. Best feeling in the world to have my daughter copy my wicket taking celebrations. And yes don't forget to take care of animals, they too deserve our love and care :) pic.twitter.com/CKPhZd0BGD
— Shahid Afridi (@SAfridiOfficial) June 9, 2018