ஆசிய கோப்பையை வென்றது மிகப்பெரிய தருணம் - வங்காளதேச பெண்கள் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் கருத்து

பெண்கள் ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது வங்காளதேச அணிக்கு மிகப்பெரிய தருணம்’ என்று அந்த அணியின் பயிற்சியாளர் அஞ்சு ஜெயின் தெரிவித்தார்.

Update: 2018-06-11 22:30 GMT
கோலாலம்பூர்,

பெண்களுக்கான 7-வது ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் நடந்தது. இதில் நேற்று முன்தினம் நடந்த இறுதிப்போட்டியில் வங்காளதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 6 முறை சாம்பியனான இந்தியாவை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

ஆசிய கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் வங்காளதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை சாய்த்து இருந்தது. இந்த போட்டி தொடரில் இந்திய அணி இரண்டு முறையும் வங்காளதேச அணியிடமே அதிர்ச்சி தோல்வி கண்டது.

வெற்றிக்கு பிறகு வங்காளதேச அணியின் பயிற்சியாளரும், இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரருமான அஞ்சு ஜெயின் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வங்காளதேச அணியின் பயிற்சியாளராக இணைந்தது வேகமாக எடுக்கப்பட்ட முடிவாகும். நான் பொறுப்பு ஏற்கும் நேரத்தில் வங்காளதேச அணி மோசமான நிலையில் இருந்தது. முந்தைய மாதத்தில் நடந்த தென்ஆப்பிரிக்க தொடரில் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் எல்லா ஆட்டங்களிலும் அந்த அணி தோல்வியை சந்தித்து இருந்தது. வீராங்கனைகளின் மன உறுதியை ஊக்கப்படுத்தும் முயற்சிக்கு முக்கியத்துவம் அளித்தேன்.

ஆசிய கோப்பையை வென்றது வங்காளதேச அணிக்கு மட்டுமின்றி எனக்கும் தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய தருணமாகும். தென் ஆப்பிரிக்க தொடரில் இருந்து வங்காளதேச அணி திரும்பியதும், எந்தெந்த துறையில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை அடையாளம் கண்டு அதில் தனிக்கவனம் செலுத்தப்பட்டது. இவ்வாறு பயிற்சியாளர் அஞ்சு ஜெயின் தெரிவித்தார்.

டெல்லியை சேர்ந்த 43 வயதான அஞ்சு ஜெயின் 2012-ம் ஆண்டுக்கான 20 ஓவர் உலக கோப்பை மற்றும் 2013-ம் ஆண்டுக்கான உலக கோப்பை போட்டிக்கான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்து இருக்கிறார்.

மேலும் செய்திகள்