இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இருந்து அம்பத்தி ராயுடு நீக்கம் - சுரேஷ் ரெய்னா சேர்ப்பு

இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இருந்து அம்பத்தி ராயுடு நீக்கப்பட்டு சுரேஷ் ரெய்னா சேர்க்கப்பட்டுள்ளார்.

Update: 2018-06-16 22:15 GMT
பெங்களூரு,

இங்கிலாந்துக்கு எதிராக அடுத்த மாதம் நடக்கும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் 32 வயதான அம்பத்தி ராயுடு இடம் பிடித்திருந்தார். சமீபத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 602 ரன்கள் குவித்து கலக்கியதன் மூலம் அவருக்கு இந்த அதிர்ஷ்டம் அடித்தது.

அம்பத்தி ராயுடுவுக்கு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமில் உடல்தகுதி தேர்வு நடந்தது. ஒவ்வொரு தொடருக்கு முன்பாக புதியதாக தேர்வு செய்யப்படும் மற்றும் காயத்தில் இருந்து மீண்டு வரும் இந்திய வீரர்களுக்கு ‘யோ-யோ’ என்ற உடல்தகுதி சோதனை நடத்தப்படுகிறது. அதிவேகமாக ஓடக்கூடிய இந்த தேர்வில் குறைந்தது 16.1 புள்ளிகளை எட்டுவதை உடல்தகுதிக்கான அளவுகோலாக கிரிக்கெட் வாரியம் நிர்ணயித்து இருக்கிறது. இந்த சோதனையில் குறிப்பிட்ட புள்ளியை எட்ட முடியாமல் அம்பத்தி ராயுடு தோல்வி அடைந்தார்.

இந்த நிலையில் அம்பத்தி ராயுடுவுக்கு பதிலாக இந்திய அணியில் சுரேஷ் ரெய்னா சேர்க்கப்பட்டு இருக்கிறார். 31 வயதான ரெய்னா கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நாள் போட்டிக்கு அணிக்கு திரும்புகிறார். இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஜூலை 12-ந்தேதி நாட்டிங்காமில் நடக்கிறது.

மேலும் செய்திகள்