பந்தை சேதப்படுத்திய விவகாரம் இலங்கை கேப்டன் சன்டிமாலுக்கு ஒரு டெஸ்டில் விளையாட தடை

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் இலங்கை கேப்டன் சன்டிமாலுக்கு ஒரு டெஸ்டில் விளையாட ஐ.சி.சி. தடை விதித்துள்ளது.

Update: 2018-06-20 21:30 GMT

துபாய், 

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் இலங்கை கேப்டன் சன்டிமாலுக்கு ஒரு டெஸ்டில் விளையாட ஐ.சி.சி. தடை விதித்துள்ளது.

பந்தைய சேதப்படுத்திய சன்டிமால்

இலங்கை கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் செயின்ட் லூசியாவில் நடந்த 2–வது டெஸ்ட் ‘டிரா’ ஆனது.

இந்த போட்டியின் 2–வது நாளில் இலங்கை கேப்டன் தினேஷ் சன்டிமால் பந்தை சேதப்படுத்தியதாக சர்ச்சை கிளம்பியது. தனது பாக்கெட்டில் இருந்து ஒரு இனிப்பு பொருளை எடுத்து வாயில் போட்டு மென்று, பிறகு இனிப்புடன் கூடிய எச்சிலை பந்து மீது துப்பி அதை தேய்த்து பந்தின் தன்மையை மாற்றியது வீடியோ காட்சியின் மூலம் நடுவர்கள் கண்டுபிடித்தனர். இரண்டு முறை அவர் இவ்வாறு செய்தது தெரிய வந்தது. முதலில் தான் அப்பாவி என்று மறுத்த சன்டிமால் பிறகு வீடியோ காட்சியை போட்டு காண்பித்த பிறகு தவறை ஒப்புக்கொண்டார். ‘வாயில் ஏதோ ஒன்று போட்டு இருந்தேன், அது என்ன பொருள் என்பது ஞாபகம் இல்லை’ என்று விசாரணையின் போது சன்டிமால் கூறினார்.

இந்த நிலையில் விசாரணை முடிவில் சன்டிமாலுக்கு 2 தகுதி இழப்பு புள்ளி மற்றும் போட்டி கட்டணத்தில் இருந்து 100 சதவீதம் அபராதமாக ஐ.சி.சி.யின் போட்டி நடுவர் ஸ்ரீநாத் விதித்துள்ளார். 2 தகுதி இழப்பு புள்ளி என்பது ஒரு டெஸ்ட் அல்லது 2 ஒரு நாள் போட்டி அல்லது இரண்டு 20 ஓவர் போட்டிக்கு தடை விதிப்பதற்கு சமம் ஆகும். இதில் எந்த போட்டி முதலில் வருகிறதோ அதன் அடிப்படையில் நடவடிக்கை அமையும்.

டெஸ்டில் ஆட முடியாது

இதன்படி சன்டிமால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக பிரிட்ஜ்டவுனில் நாளை மறுதினம் தொடங்கும் பகல்–இரவு டெஸ்டில் விளையாட முடியாது. அவருக்கு பதிலாக இந்த டெஸ்டில் சுரங்கா லக்மல் அல்லது ஹெராத் ஆகியோரில் ஒருவர் அணியை வழிநடத்த வாய்ப்புள்ளது. தண்டனையை எதிர்த்து சன்டிமால் அப்பீல் செய்ய 48 மணி நேரம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் சன்டிமால், பயிற்சியாளர் ஹதுருசிங்கா, அணி மேலாளர் அசன்கா குருசிங்கா ஆகியோர் மீது இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது. இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று கூறி 3–வது நாள் ஆட்டத்தில் களம் இறங்க சன்டிமால் மறுத்தார். இதனால் 2 மணி நேரம் ஆட்டம் தொடங்க தாமதம் ஆனது. வீரர்களுக்கு ஆதரவாக இருப்போம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியமும் கூறியது.

கிரிக்கெட் வாரியம் அதிருப்தி

ஆனால் சன்டிமால் இலங்கை கிரிக்கெட்டின் புகழை கெடுக்கும் வகையில் நடந்து கொண்டிருப்பது இப்போது உறுதியாகி இருப்பதால் அவர் மீது இலங்கை கிரிக்கெட் வாரியம் கடும் அதிருப்தி அடைந்துள்ளது. அடுத்து சொந்த மண்ணில் ஜூலை–ஆகஸ்டு மாதம் நடக்கும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் சன்டிமால் நீக்கப்படுவார் என்று தெரிகிறது.

மேலும் செய்திகள்