முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் எளிதில் வெற்றி

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் எளிதில் வெற்றிபெற்றது.

Update: 2018-07-01 22:15 GMT
ஹராரே,

பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயில் நேற்று தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். ஹராரே நகரில் நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான்-ஜிம்பாப்வே அணிகள் சந்தித்தன.

இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பஹார் ஜமான் 61 ரன்களும், ஆசிப் அலி 41 ரன்களும் விளாசினர். அடுத்து களம் இறங்கிய ஜிம்பாப்வே 17.5 ஓவர்களில் 108 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் பாகிஸ்தான் 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-ஆஸ்திரேலிய அணிகள் இன்று மோதுகின்றன.

மேலும் செய்திகள்