முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன்

ஜிம்பாப்வேயில் நடந்து வந்த முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் நேற்று இறுதி ஆட்டம் நடந்தது. இதில் ஆஸ்திரேலியா–பாகிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர்கள் டார்சி ஷார்ட் 76 ரன்களும் (53 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் ஆரோன் பிஞ்ச் 47 ரன்களும் எடுத்தனர்.

Update: 2018-07-08 23:00 GMT

ஹராரே,

ஜிம்பாப்வேயில் நடந்து வந்த முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் நேற்று இறுதி ஆட்டம் நடந்தது. இதில் ஆஸ்திரேலியா–பாகிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர்கள் டார்சி ஷார்ட் 76 ரன்களும் (53 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் ஆரோன் பிஞ்ச் 47 ரன்களும் எடுத்தனர்.

அடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் 2 ரன் எடுப்பதற்குள் சகிப்ஜடா பர்ஹான் (0), ஹூசைன் தலாத் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் மறுமுனையில் தொடக்க ஆட்டக்காரர் பஹார் ஜமான் அதிரடி காட்டி அணியை தூக்கி நிறுத்தியதுடன் வெற்றிக்கும் வழிகாட்டினார். அவர் 91 ரன்கள் (46 பந்து, 12 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசிய நிலையில் கேட்ச் ஆனார். பாகிஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது. சோயிப் மாலிக் 43 ரன்களும் (நாட்–அவுட்), கேப்டன் சர்ப்ராஸ் அகமது 28 ரன்களும் எடுத்தனர்.

20 ஓவர் போட்டி வரலாற்றில் பாகிஸ்தான் அணி விரட்டிப்பிடித்த அதிகபட்ச இலக்கு (சேசிங்) இது தான். இதற்கு முன்பு 2012–ம் ஆண்டு வங்காளதேசத்திற்கு எதிராக 178 ரன்களை எட்டிப்பிடித்ததே சாதனையாக இருந்தது.

உலக தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடம் வகிக்கும் பாகிஸ்தான் அணி 2016–ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து 20 ஓவர் போட்டியில் தொடர்ச்சியாக 9 தொடர்களை கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது.

மேலும் செய்திகள்