டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திருச்சி வாரியர்ஸ் இன்று மோதல்

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னையில் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

Update: 2018-07-13 23:30 GMT
சென்னை,

8 அணிகள் இடையிலான 3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லை, நத்தம், சென்னை ஆகிய 3 இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (சனிக்கிழமை) இரவு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறும் 3-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திருச்சி வாரியர்ஸ் அணியை சந்திக்கிறது.

பாபா இந்திரஜித் தலைமையிலான திருச்சி வாரியர்ஸ் அணி, தனது முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி வெற்றியுடன் போட்டியை தொடங்கியது. கோபிநாத் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு இந்த சீசனில் இது தான் முதல் ஆட்டமாகும்.

இவ்விரு அணிகளும் கடந்த இரு ஆண்டுகளில் இரண்டு முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இரண்டு ஆட்டத்திலும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியே வென்று இருந்தது.

இன்றைய ஆட்டம் குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பயிற்சியாளர் ஹேமங் பதானி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ‘நாங்கள் நடப்பு சாம்பியன் அணி என்பது குறித்து அதிகமாக சிந்தித்து கொண்டு இருக்கவில்லை. இது புதிய சீசன், புதிய போட்டி. அதுமட்டுமல்லாமல் முந்தைய சீசனுடன் ஒப்பிடுகையில் இது வேறுபட்ட அணியாகும். இந்த போட்டியை வெற்றியுடன் தொடங்குவதை எதிர்நோக்கி உள்ளோம். விஜய் சங்கர் இந்திய ‘ஏ’ அணியில் இடம் பெற்று இருப்பதால் அவரால் தொடக்க கட்ட லீக் ஆட்டங்களில் விளையாட முடியாது என்பதை ஏற்கனவே அறிவோம்’ என்றார்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் கோபிநாத் கூறுகையில், ‘இந்த ஆடுகளம் சற்று மெதுவாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதனால் சுழற்பந்து வீச்சாளர்கள், குறிப்பாக இடக்கை சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். சென்னையில் நாங்கள் மூன்று ஆட்டங்களில் விளையாடுகிறோம். அதனை எங்களுக்கு சாதகமான அம்சமாக எடுத்து கொள்ள முடியாது. குறிப்பிட்ட நாளில் எந்த அணி அசத்துகிறது என்பதை பொறுத்தே வெற்றி வாய்ப்பு அமையும்’ என்றார்.

திருச்சி வாரியர்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஹேமந்த் குமார் கூறுகையில் ‘முதல் ஆட்டம் எங்களுக்கு நன்றாக அமைந்தது. அந்த ஆட்டத்தில் கிடைத்த வெற்றி உத்வேகத்தை தொடர முயற்சிப்போம்’ என்றார்.

இன்றைய போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: கோபிநாத் (கேப்டன்), அலெக்சாண்டர், கார்த்திக், சசிதேவ், எம்.அஸ்வின், ஹரிஷ்குமார், கங்கா ஸ்ரீதர் ராஜூ, சன்னி குமார் சிங், சம்ருத் பாட், அருண்குமார், விஷால், ராகுல், சித்தார்த், அருண், ஆரிப், சிவக்குமார், மானவ் பாரக், சாய் சுதர்சன்.

திருச்சி வாரியர்ஸ்: பாபா இந்திரஜித் (கேப்டன்), பரத் சங்கர், கே.விக்னேஷ், சஞ்சய், சோனு யாதவ், எம்.விஜய், கணபதி, எஸ்.சுரேஷ்குமார், வசந்த் சரவணன், அரவிந்த், லட்சுமி நாராயணன், எல்.விக்னேஷ், சந்திரசேகர், மணிபாரதி, அஸ்வின் கிறிஸ்ட், சரவணகுமார், கோவிந்தராஜன், திலக், வி.ஆகாஷ்.

இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

மேலும் செய்திகள்